Friday, December 18, 2020

காலங்களைக் கடந்து வருபவன்- கவிதை நூல் விமர்சனம்

 சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

 


எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்” நவீன தமிழ் பெண் கவிதைவெளியில் ஒரு குறிப்பிடத்தக்க வரவு. இக் கவிதைப் பிரதியில் பெண்- ஆண் எனும் இரண்டு தளங்களில் நகர்ந்து செல்லும் சொற்கள் கவிதையை உருவாக்கிச் செல்கின்றன. பெண்ணின் உலகத்தை ஆணின் கரங்கள் எப்படித் தீர்மானிக்கின்றன என்ற நுட்பத்தை சுஜாதா வெளிப்படுத்தும் தருணந்தான் அவரது கவிதைகளின் நிகழ் நேரம்.

தமிழின் நவீன பெண் கவிதைவெளிக்குள்ளிருக்கும் மௌனமும், அழகியலும், தீவிரமும் அப்படியே கிஞ்சித்தும் பிசகாமல் சுஜாதாவின் கவிதைகளுக்குள்ளும் இருக்கின்றன. பெண் குறித்த அவரது கவிதை மனத்தின் பல்வேறு பிரதிபலிப்புகளையும் இந்தத் தொகுதிக் கவிதைகள் பாசாங்குகளற்று வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் பெண்ணைத் தன்னிலைக் கதாபாத்திரமாகவும் ஆணைப் புறநிலைக் கதாபாத்திரமாகவும் கொண்டு பெண்ணின் வாழ்வை அதன் முழு அர்த்தத்தோடும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள முற்படுகின்றன.

பெண் தனது சராசரி வாழ்வை எப்படி வாழ விரும்புகிறாள் என்ற அவளது சுயவிருப்பத்துக்கும் அவள் எப்படி வாழ வேண்டும் என்ற ஆணின் அதிகார விருப்பத்துக்கும் இடையிலான போராட்டத் தருணங்களே சுஜாதாவின் கவிதைப் புனைவுக்கான அடித்தளமாக ஆகியுள்ளன.

ஆனால் அவரது இந்தப் போராட்டம் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை.

““நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லைதான்
ஆயினும் நாம் அதைக் கடக்கவோ
உடைக்கவோ முயன்றதில்லை”

என அவர் எழுதுகிறார். இங்கு எதிர்க் கதாபாத்திரமாக ஆண் இருக்கிற போதிலும் இருவருக்குமிடையில் சமரசத்துக்கான சாத்தியங்களே அதிகம் இருப்பதை அவர் கண்டுகொள்கிறார்.

பெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளையே கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. சாதாரண பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு மொழியின் கூடுதல் புதிர்த்தன்மை தேவையற்றது என்பதை புரிந்து கொண்டு அதனை இயன்றளவு சுஜாதா தவிர்ந்து கொண்டிருக்கிறார். மிகைக் கற்பனைகளும் அவரது கவிதைக்குள் இருப்பதில்லை. இந்த வகையில், இவரது கவிதைகள் யதார்த்தவாதத்துக்கும், இயல்புவாதத்துக்கும் மிக நெருக்கமாகவுள்ளன.

பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும்போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவிதையில்,

“என்றுமே நீ அறியப்போவதில்லை
வனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்
கூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்
வானம் வேறு என்பதை

இதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.

பெண் பற்றிய அறிவிப்புகளை தமது கவிதைகளில் வெளியிடுவது நவீன தமிழ் பெண் கவிதைகளின் பொதுப்போக்காகவே இருக்கிறது. ஆயினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து ஒரு நுண்ணிய வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சுஜாதா. பெண் பற்றிய சுஜாதாவின் அறிவிப்பு அவரது “மருதானிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில் நிகழ்கிறது.

“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்
கலை அறிந்தவர்கள்

என்கிறார். இன்னொரு வரியில்,

”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட
முனை மழுங்கிய பேனைகள்

என்கிறார்.

”மேலும் உங்கள் செங்கோல்
ஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்

என்கிறார்.

இந்த அறிவிப்பு தமிழ்க் கவிதைவெளியின் பொதுப்போக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறதென்றால், தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்துவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பெண்களை அறிமுகம் செய்வது அவருக்கான தனித்துவத்தை அர்த்தப்படுத்துகிறது.

சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக சுஜாதா அடையாளங் கண்டிருப்பவை எவையும்  கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும்போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.

“ஆளற்ற வீட்டின் முன்
எத்தனை நேரம்தான் வெறித்திருப்பாய்

என்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.

இப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.

“கண்மூடிக்கிடப்பதங்கே தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

என்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்

“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள்வெறி கொள்கிறேன்

என வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

நமது சமூக அடுக்கமைவு பாரபட்சமானதாக, ஆண்கள் தமது சொந்த விருப்புக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொண்டதான ஒரு தோற்றப்பாட்டையே கொண்டிருக்கிறது.  பெண்ணுக்கும்- ஆணுக்கும் என பகிரப்பட்டிருக்கும் பணிகள் எந்தவொரு தர்க்க ஒழுங்குகளையோ, அடிப்படைகளையோ கொண்டிருப்பதில்லை என்ற பார்வையை நமது பெண் கவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திக்  கொண்டே வருகின்றனர்.

சுஜாதாவின் “இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதைக்குள் இந்தக் குரல் மேலும் ஆழமாக ஒலிக்கிறது-

“பெண்ணின் புகைப்படங்கள் தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதுமற்ற
வழுக்கும் சமயலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன
” 

இங்கு “சமையலறை“ என்பது ஆதியிலிருந்தே பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட ஒரு இடமல்ல. ஆதி நிலையிலிருந்த சமூகம் குடும்பமாக மாறி ஒரு மனையை நிர்மாணித்துக் கொண்டதன் பின்னர்தான் அதற்குள் பெண்ணுக்கென பிரத்தியேகமாக சமையலறையையும் உருவாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து அநேக பெண்களுக்கு “சமையலறை” மீட்சியற்ற ஒரு பணி அறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் நமது பெண்கவிகள் “சமையலறை“ மீதான தமது அதிருப்தியை தொடர்ந்தும் தமது கவிதைகளில் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆனால் தூமைத் துணிகள் சொருகப்பட்ட புழக்கடைவெளிகள் பெண்ணின் இயல்பான தன்மைக்காக பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அறையாக இருக்கிறது. இதற்கெதிராக பெண்கவிகள் கலகம் செய்யத் தேவை இல்லை என்பது என் அபிப்ராயம்.

பெண்ணின் இருப்பு குறித்த அர்த்தங்களைத் தேடியலைபவையாகவும் சுஜாதாவின் கவிதைகள் வடிவங்கொள்கின்றன. பெண்ணின் இருப்புக்கான சுதந்திரத்தின் எல்லைகள் எப்படி ஆண்களால் ஈவிரக்கமற்றுக் குறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுஜாதா வெளிப்படுத்தும் வரிகளில் பெண் அனுதாபத்துக்குரியவளாகவும், ஆண் அதிகாரத்துக்குரியவனாகவும் வாசக மனதில் பதிவாகின்றனர்.

”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

“ஆசுவாசம்” எனும் கவிதையில்,

“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்
அலறி ஓடும் ஓர் அம்மணம்

என்ற வரிகளில் மட்டுமல்ல

“என் திசை எங்கும்
நீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும்
நான் முள் பொறுக்கி்க்கொண்டிருக்கிறேன்

என்று நெகிழ்கிறார்.

அதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்

“சிறகுதிர்ந்த பட்டாம் பூச்சியென
பதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு

எனத் துயருறுகிறார்.

மேலோட்டமான வாசிப்பில் இத்தகைய அனுபவமற்ற ஒரு ஆண் வாசகனோ அல்லது வாசகியோ இந்தத் துயரம் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதாக உணர்வதற்கு சாத்தியமுள்ளது.

பெண் பற்றிய புரிதலில் நமது பாரம்பரிய தமிழ்மொழிச் சமூகங்களிலிருந்து நவீன தமிழ் மொழிச் சமூகங்கள் பெரிதளவுக்கு முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை. இத்தகையதொரு அபத்தமான சமூக சூழலில் பெண்ணின் இருப்பு சுஜாதா விபரிப்பது போன்ற கையறுநிலைக்குள்ளும், தகிப்புக்குள்ளும் இருப்பது இயல்பானதே. இந்தவரிகள் கவிஞர் வாழும் சமூகத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. எனவே பெண்ணின் இருப்பு பற்றிய சுஜாதாவின் இந்த வரிகள் மேலைத்தேய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்குள்ள சமூக சூழலில் ஒரு அர்த்தத்தை வழங்குவதில் தோல்வியடையக் கூடும். இதனால் இக்கவிதை நிலையான அர்த்தத்தைக் கொண்டதாகவன்றி ஒரு நிலைமாறும் அர்த்தப்பிரதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகிறது.

ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் “கலாசாரம்“ பெண்ணின் இருப்பு மீதும், அவளின் சுதந்திரத்தின் மீதும் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஓரளவு அடக்கி வாசிக்கும் பாணியில் வெளிப்படுத்துகிறார் சுஜாதா.  தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.

”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிதைக்கப்பட்ட
பெண்ணின் கூக்குரலாய் ஒலிக்கிறது

என்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.

எனினும் பிரதி முழுவதையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது தமிழ் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தையே கவிஞை சுஜாதா செல்வராஜால் முன்வைக்க முடிந்திருக்கிறது. இந்த சுயதணிக்கை அவரது கவிதைகளுக்கு மேலும் ஒரு நடைமுறைசார் அர்த்தத்தை வழங்கிவிடுகிறது.

ஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.

நினைவைக் கலைத்துக் கலைத்து
அடுக்கிப் பாரக்கிறேன்

தவறாமல் என் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்

போன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை வாசகன் கண்டுகொள்கிறான்.

பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.

அப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது. “சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,

காணாமல் போகும் “ஒன்று“
அதன் வாசனையை அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது

தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்

என்று சுஜாதா எழுதும்போது சந்தேகிக்கப்பட்ட ஒரு நிரபராதியின் மனத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை வாசகன் தீவிரமாக உணர்கிறான்.

இந்தக் கவிதைக்குள் வருபவன் ஒரு ஆணாக இருப்பினும் அவன் ஒரு விளிம்பாக இருக்கிறான் அல்லது அவ்வாறு சமூகத்தால் உணர வைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

ஆயினும் சுஜாதா சித்தரிக்கும் பெண்ணின் எதிர்நிலைக் கதாபாத்திரமான ஆண் காலங்களைக் கடந்து வருபவனாக இருக்கிறான். மிக மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்று வரை பெண் மீதான அவனது செயற்பாடுகளில் காலம் எந்தப்பெரிய உடைப்புகளையும் நிகழ்த்தி விடவில்லை என்ற உண்மையின் பல்வேறு பிரதிபலிப்புகளே சுஜாதாவுக்குள் ஒரு எதிர்ப்பாக வடிவங்கொண்டு, மொழியின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன.

சுருங்கக்கூறின் சுஜாதா செல்வராஜின் கவிதைகளின் அகம் ஒரு ஆணிண் வன்மத்தோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன. எனினும் எனது இந்த சுருங்கிய பார்வைக்கும் அப்பாலுள்ளது அவரது கவிதை.

 

Saturday, December 12, 2020

பாவனைகளின் கூட்டு ஓட்டம்

வெடிச்சிரிப்பிற்கு பேர் போனவள் தான்

எதுவும் சொல்லாமல் தூக்கில் தொங்கியவள்


மரண வீட்டில் உகுக்கும் கண்ணீரில்

சொந்தக் கவலை கலந்திருக்கிறது


சிங்கம் போல நடந்து போகிறவன்

எங்கோ மண்டியிட்டு இறைஞ்சுகிறான்


வெற்றியைப் பாராட்டி விட்டு வீடு திரும்புபவர்

உறக்கம் பிடிக்காமல் புரள்கின்றார்


திவாலான நாளில் தெரியவருகிறது

வழங்கப்பட்ட மரியாதை யாருக்கானதென்று


தேநீரில் எச்சிலை உமிழ்ந்து கொடுத்தவள்

கலவியில் முதல்முறையாய்

புன்னகைக்கிறாள்


நெல்மணிக்கும் சீட்டுக்கட்டுக்குமான தூரத்தை 

வாழ்வெனப் பழக்கிவிட்ட ஜோசியக்காரன்

கூண்டு திறந்து அழைக்கிறான்

வெளிய வாடி என் அன்னலட்சுமி

****

கன்னிமார் சாமி

 


நல்லம்மாள் தரையில் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருந்தாள். கொல்லைப்புறம் இருக்கும் ஒற்றை மல்லிகைச்செடிதான். பூத்துக்கொட்டித் தீர்க்கும். அவைகளை ஒன்றுவிடாமல் பறித்துத் தருவாள் அம்மா. பூக்களைக் கட்டி சாமிக்கு, அம்மாவுக்கு, தங்கைக்கு, தனக்கு என்று பிரித்துக் கொடுப்பது இவள்தான். நான்கு கண்ணி பூக்கள்தான் இவள் வைத்துக்கொள்வாள். அம்மாவும் அப்படித்தான். தங்கையும் சாமியும்தான் பூக்களில் திளைப்பவர்கள்.


அறையில் இருந்தபடியே கூடத்துப் பேச்சைக் கேட்க முடிந்தது. கல்யாணப்பேச்சு. அப்பா சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான், அப்பாவின் அக்காவுக்கு ஒரே மகன். பேர் ராசு. மிலிட்டரியில் சிறிது காலம் இருந்துவிட்டு தாக்குபிடிக்கமுடியாமல் ஓடி வந்துவிட்டவன். அதனால் எப்போது வேண்டுமானாலும் மிலிட்டரியில் இருந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாருமே அவனுக்கு பெண் தர முன்வரவில்லை. பயந்தது போலவே வெள்ளைக்காரர்கள் அவனைத் தேடிக்கொண்டு சிலமுறை வந்தும் இருக்கிறார்களாம்.  அப்பொழுதெல்லாம் ராசு அட்டாலியில் ஏறி ஒளிந்து கொள்வானாம். மறுநாளே அத்தை இங்கு வந்து அப்பாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்த்துவிட்டு போவாள். பாவம் புருசனை இழந்து தனிமரமாய் பிள்ளையை வளர்த்து ஆளாக்கியவள். அப்பாதான் அக்கா மகனுக்காக பெண் தேடி அலைந்தார். 


தூரத்து சொந்தக்காரர் ஒருவர் நாளு கிராமம் தாண்டி இருக்கிறார். வண்டி கட்டித்தான் போகவேண்டும். அங்கு போய்விட்டு வந்துதான் அப்பா கோபமாக இறைந்து கொண்டிருக்கிறார். போன இடத்தில், 


உன் வீட்லயே பொண்ண வச்சுக்கிட்டு, அக்கா மகனுக்கு பொண்ணு கேட்டு இங்க வந்துருக்கயே! உன் மவளயே கொடுக்கலாம்லனு சொல்லவும் அப்பா ரோசமாக, சரி என் மவளுக்கே கட்டிவைக்கிறேன்னு எழுந்து வந்துவிட்டார்.


பிள்ள இன்னும் வயசுக்கே வரல. ஒரு வருசம் போகட்டுமே என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். அப்பா இந்த மாசமே கல்யாணம் பண்ணியாகவேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறார். நாளு ஊர் தாண்டி அவர் விட்டுவிட்டு வந்த மானத்தை இந்த மாசமே திருப்பி எடுத்துவிடத் தவித்துக்கொண்டிருந்தார்.


ஒன்னுவிட்ட சித்தப்பா, பக்கத்து வீட்டு பொன்னய்யா தாத்தா, அக்கம்பக்க உறவுகள் சிலர் என்று அதற்குள் கூடிவிட்டிருக்க, அம்மா முடிவாகச் சொன்னாள்,


 சரி, கட்டிக்கொடுக்கலாம் ஆனா நல்லம்மாளையும் சேர்த்துக் கட்டணும். அதுக்கு சம்மதமானு உங்க அக்கா மவன்கிட்ட கேட்டுடுங்க. 


அப்பா பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். பூக்கட்டிக்கொண்டிருந்த நல்லம்மாளின் கைகள் தானாக நின்றன. 


எறும்பு ஒன்று எங்கிருந்தோ இழுத்துவந்த ஒரு பருக்கைச் சோற்றை கவ்விக்கொண்டு வழியை மறித்தபடி கிடக்கும் நல்லம்மாளின் கால்களிடம் தடுமாறிக்கொண்டிருந்தது. தட்டில் உணவாகாமல் தவறி தரையில் விழுந்துவிட்ட ஒரு பருக்கை எறும்புக்கு உணவாகிறது. 


ஒருமுறை அம்மாவுடன் கோயிலுக்குப் போனபோது அம்மா இவளை கருவறை முன் இறக்கிவிட்டுவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவரச் சென்றிருந்தாள். கீழே அமர்ந்தபடி சாமியைப் பார்த்துக்கொண்டிருந்தவள். அர்ச்சனைக்கு மாலை, தேங்காய், எண்ணெயோடு வந்த ஒருத்தி தட்டை அர்ச்சகரிடம் கொடுத்தாள். மாலையிலிந்து ஒற்றை மலர் மட்டும் உதிர்ந்து படியில் விழ அர்ச்சகர் தட்டோடு கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்தார். பார்த்துக்கொண்டிருந்த நல்லம்மாளுக்கு சொல்லவொண்ணாத் துயர் மிகுந்தது. விதையிலிருந்து முளைத்து, கிளைவிட்டு மொட்டாகி மலர்ந்து கடவுளுக்கென்று மாலையாகி கருவறை வாசல்வரை வந்து படியில் நழுவி விழுந்துவிட்ட அந்த மலரை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல ஏந்திக்கொண்டாள். பின் மெல்ல நகர்ந்து முன்னால் அமர்ந்திருந்த நந்தியின் தலையில் அந்த மலரை வைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள். 


நல்லம்மாள் எறும்பின் வழியை அடைத்துக்கொண்டிருந்த தன் சூம்பிய இரு கால்களையும் அள்ளி இடப்பக்கம் போட்டுவிட்டு நகர்ந்து அமர்ந்தாள். அப்பா கனைத்துக்கொண்டு சரி ராசுக்கிட்ட பேசறேன் என்று சொன்னது காதில் விழுந்தது. பிறகு என்னென்னவோ எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நல்லம்மாள் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள். கல்யாணத்தை எல்லாம் அவள் கனவிலும் எண்ணியவளில்லை. தங்கையின் கணவனே தனக்கும் கணவனாவதா?! முடியாது என்று அம்மாவிடம் சொல்லலாமா? நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா பேயாட்டம் ஆடிவிடுவாள். நல்லம்மாளை காடுகரைக்கு, கோயிலுக்கு என்று சலிக்காமல் சுமந்து செல்பவள் அவள்தான். நல்லம்மாளும் ஒன்றும் சும்மாக் கிடப்பவள் இல்லை. உட்கார்ந்துகொண்டே காய் நருக்குவது, அரிசி புடைப்பது, மாவரைப்பது, வெங்காயம் ஆய்வது, கடலை ஆய்வது, கொட்டமுத்து தட்டுவது என்று ஓயாமல் இயங்கிக்கொண்டிருப்பவள்தான். வேலை செய்து சிறுவாடு கூட சேர்த்து வைத்திருக்கிறாள். 


அம்மா என்னை சுமையாக நினைக்கிறாளா? இல்லை. எனக்கும் இந்த சாக்கில் கல்யாணம் பண்ணி பார்த்துவிட நினைக்கிறாள். அவள் காலத்திற்குப் பின் எனக்கொரு நிழல் வேண்டுமென்று பார்க்கிறாள். ஆனால் இது சரியா? தங்கை ராமாயியை நினைத்துக்கொண்டாள். துறுதுறுவென்று இருப்பவள். தன் தோழிகளையெல்லாம் வீட்டுக்கு அழைத்துவந்து அக்காவிற்கும் சிநேகமாக்கியவள். தின்பதை எல்லாம் மறக்காமல் அக்காவுக்கு பங்கு வைப்பவள். ஆனால் இந்த கணவனைப் பங்கு வைக்கும் ஏற்பாட்டை ஏற்பாளா? முதலில் நான் ஏற்பேனா? துவண்ட அவள் கால்களைப் போலவே மனம் துவண்டு போனது. கட்டிய பூக்களை ஓரமாக வைத்துவிட்டு அப்படியே தரையில் சாய்ந்து படுத்தாள்.


மனக்கண்ணில் ராசு. அத்தை மகன்.


நல்ல கருவேலமரம் போன்ற தேகம்தான். மிலிட்டரி பழக்கத்தில் ஒட்ட வெட்டி, எண்ணை வைத்து, இடப்புறம் வாகெடுத்து படிய வாரிய தலைமுடி. அதிகம் இந்தப்பக்கம் வரமாட்டான். ஆனால் திருவிழாவுக்கு வருகையில் பை நிறைய தீனி வாங்கிவருவான். கடலைமிட்டாய், பொரி, ரவா உருண்டை, மாம்பழம் என்று வகையாகத் திங்கலாம். இத்தனை நாள் அவனுடன் அதிகமாகப் பேசியதே இல்லை என்று இன்றுதான் உறைத்தது. அவனை எனக்குப் பிடிக்குமா? மனதைக் கேட்டுப் பார்த்தாள். அவனுக்கு என்னைப் பிடிக்குமா? கேள்வி விழுந்தது. எதுவும் தோன்றாமல் கண்களை மூடிக்கொண்டாள்.


ஓரே வாரத்தில் எல்லாம் சுமூகமாக முடிந்தது. ராசு நல்லம்மாளைக் கட்டிக்கமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டான். தாலிலாம் கட்டமாட்டேன். ராமாயிக்கு துணையா எங்க வீட்லயே வேணா இருக்கட்டும். கடைசிவரை அவள பாத்துக்கறது என் பொறுப்பு என்று கூறிவிட்டான். அப்பா அம்மாவுக்கு அவன் பதில் திருப்தியைத் தந்தது. மூஞ்சைத் தூக்கிக்கொண்டு திரிந்த ராமாயி கூட இயல்பாக சிரித்துப் பேசத்தொடங்கினாள். 


அந்த மாசமே ஒரு நல்ல நாளில் கோயிலில் வைத்து திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. தங்கைக்கு கூரைச்சேலை வாங்குகையில் நல்லம்மாளுக்கும் பாவாடை, சட்டை (செவப்புல மஞ்ச பூ போட்டது) எடுத்துத் தைத்தார்கள். அன்று நல்லம்மாள் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக பூ வைத்துக்கொண்டாள். தாலி கட்டிய கையோடு அக்காளும், தங்கையும் புகுந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.


கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடும் ஒன்றுதான். அதே திண்ணை, அதே கூடம், சமையலறை, வசதிக்கு ஏற்ப ஒன்றோ இரண்டோ அறைகள். அத்தை வீடும் அப்படித்தான் இருந்தது. ஆனால் மாடு, கன்னு கொஞ்சம் அதிகம் இருந்தது. வாசலில் சாணி போட்டு மெழுகிய பெரிய களம் இருந்தது. பக்கத்திலேயே வேப்பமரம் ஒன்று செழிக்கக் காய்த்துப் பழங்களை உதிர்த்துக்கொண்டிருந்தது. பொண்ணு மாப்பிள்ளையைக் காட்டிலும் சட்டைப் பாவாடை அணிந்த நல்லம்மாளின் மேல் அங்கிருந்த வாண்டுகளுக்கு ஆர்வம் அதிகமாய் இருந்தது. அவள் பெரிய மனுஷியா அல்லது தங்களைப் போலவே சட்டைப் பாவாடை அணிந்திருப்பதால் தங்களுடன் கூட்டு சேருவாளா என்று குழப்பத்தில் இருந்தார்கள் அவர்கள். மெல்ல நெருங்கி வந்து பேசி இரண்டொரு நாளிலேயே நல்லம்மாளுடன் சிநேகமானார்கள்.


நல்லம்மாள் இடம் மட்டும்தான் மாறி இருந்தாள். மற்றபடி தன் வழக்கமான வேலைகளை இங்கும் தொடங்கிவிட்டாள். கடலை தொலி உடைப்பது, உளுந்து அரைப்பதுடன் வாசலில் விழும் வேப்பம்பழங்களைப் பொறுக்குவதும் இப்போது கூட சேர்ந்திருந்தது. நெல் மூட்டைகளை ஓரமாக அடுக்கி ஒழுங்கு பண்ணி அந்த அறையை அக்காவும் தங்கையும் தங்கள் ட்ரங்குப் பெட்டியை வைத்துக்கொள்ளவும், படுத்து உறங்கவும் அத்தை தந்திருந்தாள். காலையில் எழுந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு ராசுவோடு ராமாயி தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் நல்லம்மாள், வீட்டில் அத்தைக்கு கூடமாட சமையலில் ஒத்தாசை செய்வாள். சோறாக்கி எடுத்துக்கொண்டு அத்தையும் தோட்டத்துக்கு போய்விட்டால் மூவருமாக வீடுவந்து சேர பொழுதாகிவிடும். 


தனித்துவிடப்படும் உச்சி வெயில் பொழுதுகளில் வேப்பமரத்துக் காக்கைகள்தான் அவளுக்கு துணை. திண்ணையில் அமர்ந்து கடலை தொலி உடைத்துக்கொண்டு கண் கூசும் வெயிலில் காக்கைகளைப் பார்த்தபடி இருப்பாள். ஓரிரு கடலைகளை உடைத்து வாசலில் வீசுவாள். வேப்பம்பழத்தை விட்டுவிட்டு கடலைக்கு வந்து அமரும் காகங்களிடம் ஆசையப் பாரு என்று செல்லக் கோபம் கொள்வாள். வெயிலுக்கு வீட்டில் அடைந்து உறங்கிவிடும் பிள்ளைகள் சாயங்காலம் இவளுடன் கதைபேச வருவார்கள். தலை சீவி விடவும், பேன் பார்க்கவும் என்று அவள் காலடியில் பிள்ளைகள் மொய்க்கும்.


இரவில் அருகில் படுத்திருக்கும் தங்கையிடம் ஏதாவது கதை பேசுவாள். அக்கம்பக்க பிள்ளைகள் சொன்ன ஊர் தகவல்கள், பிறந்த ஊரின் கதைகள் என்று பேச்சு போகும். நாளெல்லாம் தோட்டத்தில் வேலை செய்த களைப்பில் ராமாயி சீக்கிரமே உறங்கிப் போவாள். 


அசந்து உறங்கும் தங்கையின் சற்று பிளந்த வாயைப் பார்க்கும்போது குழந்தை போல தோன்றும். மனம் இளகிப் போகும். அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அவளும் களைத்து உறங்கிக்கொண்டுதான் இருப்பாள். அம்மாவின் வெடித்த பாதங்களில் சரியாகக் கழுவாத களிமண் ஒட்டியிருக்கும். தங்கையின் பாதத்தை எழுந்து பார்த்தாள். நகங்களில் மண் சேர்ந்திருந்த்து. 


ராமாயி அடுத்த நான்கு மாதங்களில் வயசுக்கு வந்தாள். 


பொறந்த வீட்டில் சீர் செய்து பத்துநாள் வைத்திருந்து பிறகு புகுந்த வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அன்றிலிருந்து ராமாயி புருசனோடு தூங்கப்போனாள். நல்லம்மாள் மீண்டும் தனியானாள். அவளின் இரவுகள் மிக நீண்டதாக மாறின. முற்றிய நெல்மணிகளின் வாசனை அவள் அறையெங்கும் நிறைந்திருக்கும். மூச்சை நீண்டு உள்ளிழுத்து சுவாசிப்பாள். சோறு உண்டது போல நெஞ்சு நிறையும். சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி தன் கால்களை மேலே தூக்கிப் பின் விடுவாள். அது பொத்தென்று தரையில் விழும். எடுப்பாள் விடுவாள் எடுப்பாள் விடுவாள்.. பொத்.. பொத்.. 


ஒருமுறை காகம் கவ்விக்கொண்டு போன செத்த எலி இப்படித்தான் வாசலில் பொத்தென்று வந்து விழுந்தது.


ராமாயி அடுத்த வருடத்தில் குழந்தை பெற்றாள். அம்மா கையில் இருந்த குழந்தையை ராசுதான் வாங்கிக்கொண்டு வந்து நல்லம்மாள் கையில் தந்தான். அது கருத்த மேனியோடு பட்டு போன்ற உதட்டை சுழித்துக்கொண்டுக் கொண்டு சிணுங்கியது. அன்றிலிருந்து அது அவள் பொறுப்பில் விடப்பட்டது. பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் குழந்தை இவள் காலடியில்தான் உதைத்துக்கொண்டு கிடந்தது. நல்லம்மாள் அவள் சிறுவாட்டுக் காசில் குழந்தைக்கு காப்பு செஞ்சு போட்டாள். அடுத்த மூன்று வருடத்தில் அடுத்தக் குழந்தை பிறந்தது. ராமாயி சட்டென்று முதிர்ந்தவள் போல் ஆனாள். மாராப்பு சரிவதில் கவனமற்றவளாய் சரியாக வாராத தலையோடு அவள் தோட்டத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து களைத்தாள். பேச்சில் பெரியமனுசியின் தோரணை வந்திருந்தது. காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, நல்லம்மாள் தன் தளர்ந்த கால்களுடன் கால ஓட்டத்திடம் தோற்று தேங்கி நின்றாள். அவளிடம் சடைப்பின்னிக் கொள்ளவரும் வள்ளி ஒரு நாள் தாவணியில் வந்து நின்றபோது இவள் மலைத்துப் போனாள். இன்னும் சட்டைப் பாவாடையிலேயே இருக்கும் தன்னை எண்ணி மருகினாள். 


அன்று களத்தில் மஞ்சள் வேக வைத்துக்கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த அத்தையுடன் கிழங்கு அவிக்க வந்த மரகதம் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு ராமாயி பிள்ளைகள் பற்றி வந்தபோது, அத்தை சொன்னாள்,


பெத்தவ எங்க பிள்ளைய பாக்குறா, அவளுக்கு காடு கரைல கெடந்து அல்லாடவே சரியா இருக்கு. பெரியவ கைலதான் பிள்ளைங்க வளருது. அவ கன்னிமார் சாமி மாதிரி. அவ வளக்கறது சாமியே வளக்கறாப்ல.  


வெந்து வரும் முற்றிய மஞ்சள் கிழங்கின் மணம் தெருவெங்கும் மணந்தது.


நல்லம்மாளுக்கு ஒவ்வாத நாட்கள் என்றால் அது வீட்டுக்கு விலக்காகும் நாட்கள்தான். கோவணமாக இழுத்துக் கட்டியிருக்கும் தீட்டுத் துணி அவள் தரையில் பிட்டத்தை இழுத்துக்கொண்டு நகர்கையில் எல்லாம் விலகி விடும். யாரும் அறியாமல் அதை இழுத்து இழுத்து சரி செய்ய வேண்டும். அதனால் பெரும்பாலும் பின்கட்டுத் திண்ணையை விட்டு அவள் நகர மாட்டாள். 


நான்கு பக்கமும் மறைப்பு வைத்துக் கட்டப்பட்ட குளியல் அறைக்குள் இழுத்து இழுத்து போனாள் நல்லம்மாள். துணிகளைக் களைந்தாள். மேற்கூரை அற்ற மறைப்பினுள் பகல் நேர வெயில் மஞ்சள் நீர் போல் கொட்டியது. நல்லம்மாள் தன் ஆடையற்ற மேனியை புதிதாய் பார்ப்பவள் போல் தனித்தனியாக பார்த்துக்கொண்டிருந்தாள். இடுப்புக்கு கீழே துவண்ட அந்த உடலில் தோள்கள் இறுகிப் படர்ந்திருந்தன. மொத்த வலிமையையும் காட்டிவிடத் துடிப்பது போல  அவள் உறுதியான கைகள், திரண்ட மார்புகள், இறுகிய தோள்கள், படிந்த வயிறு என்று அங்கங்கள் அத்தனையும் திமிரிக்கொண்டு நின்றன. அவள் தன் மார்புகளைப் பார்த்தாள். 


ஒருமுறை அம்மா வீட்டில் தோழிகளுடன் திண்ணையில் தாயம் ஆடிக்கொண்டிருக்கையில் தோழி ஒருத்தி, விலகும் தன் மாராப்பை இழுத்து விட்டுக்கொள்வதைப் பார்த்த இன்னொருத்தி, அங்க என்ன இருக்குதுனு இழுத்து இழுத்து விடுற என்று கேலி செய்தாள். சுற்றி அமர்ந்திருந்த மொத்தப் பெண்களும் சத்தமாக சிரிக்கவும் அவமானப்பட்டவள் விடாமல், ஆமாம் பின்ன உனக்காட்டம் மூஞ்சில வந்து இடிக்கணுமா, கொஞ்சம் அடக்கி வைடி, விட்டா பறந்துடும் போல என்று எதிர் கேலி செய்ய கூட்டம் மொத்தமும் வயிறு வலிக்க சிரித்து, அவளுக்கு எப்படி, இவளுக்கு எப்படி என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்து விளையாடும்போது நல்லம்மாளை யாருமே கவனிக்கவோ, கேலி செய்யவோ மறந்து போனதை இப்போது நினைத்துக் கொண்டாள். 


சூம்பிய அந்த உடலில் திரண்டு நிற்கும் மார்புகள் மதிக்கப்படுவதில்லையா?! அவள் தீட்டுத் துணியை கழற்றி அலசத் தொடங்கினாள். உதிரம் தோய்ந்த அந்த துணி அப்பொழுதுதான் பிறந்த குழந்தை போல் இருந்தது. குளிர்ந்த நீரை ஊற்றி தேய்த்து தேய்த்து கழுவினாள். பிள்ளை அழாமல் நீராடியது. இரும்பின் துரு வாசனை முகத்தில் மோதியது. அவள் மூச்சை நன்கு உள்ளிழுத்துவிட்டுக்கொண்டு அலசிக்கொண்டே இருந்தாள். 


உதிரம் ஒரு குட்டி ஆறு போல அவள் காலடியில் இருந்து பிறப்பெடுத்து ஓடியது.


***

-சுஜாதா செல்வராஜ்.






Friday, November 27, 2020

திரை

 முகமூடியைத்தாண்டி 

முகத்தைக் காணும் கண்கள் வாய்த்தபின்


நெகிழ்ச்சியூட்டும் நாடகங்கள்

சிரிப்பை வரவழைப்பதாய் இருக்கின்றன


காதலி தேகமெங்கும் பன்னீர் சிந்தி

கரம் பற்றுகிறான் காதலன்

எனக்கு மலநாற்றம்

குடலை அறுக்கிறது


மெல்ல அணைத்து முத்துகையில்

நான் வாயைப்பொத்திக் கொண்டு

கழிவறைக்கு ஓடி ஓங்காரிக்கிறேன்


நாடகம் இளகி இளகி

நீண்டுகொண்டே

போகிறது


****



அம்மணம்

 ஊரின் மத்தியில் இருக்கும்

பெரிய வீடு

தன்னை மறைத்துக் கொள்ள

பெரும்பாடு படுகின்றது


ஒரு சிறிய அழுகை

ஊர் எல்லைவரை கேட்டுவிடுகிறது


ஐந்துநிமிட விவாதம்

பொது கிணற்றில் அலசலுக்கு 

ஆட்பட்டு விடுகிறது


மெல்லிய சாராய நெடியை

எட்டுத்திசையிலும் பறக்கவிட்டு விடுகின்றன பெரிய சன்னல்கள்


அவிழ்ந்து விழும் வேட்டியை

தடுமாறி பிடிப்பதற்குள்

பத்து பேர் பார்த்துவிடுகிறார்கள்


ஊர் மத்தியில் நிற்கும்

உயர்ந்த வீடு

நிராயுதபாணியாக  நடுங்கி கொண்டிருக்கிறது


முப்பாட்டன் பெருமையை

காலிப் பெட்டகத்திற்குள்

வைத்து மூடுகையில்

அவ்வீட்டின் சுவர்கள் 

நாளாப்புறம் திறந்துகொண்டு விழுகின்றன


****

தேசாந்திரியின் பை

 தேசாந்திரியின் பைக்குள் என்ன இருக்கும்

கிளர்ச்சியூட்டும் அவன் பெயரைப் போலவே

ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது

அவன் பயணப் பையும்


உடைகள் 

தண்ணீர் புட்டி

கைவிளக்கு

கொஞ்சம் சில்லறைகள்


எத்தனை யோசித்தும் 

அதற்குமேல் சிக்கவில்லை

அவன் பை ரகசியம்


கண்டிராத அமெரிக்காவை

கனவில் கண்டபோது

எங்கள் ஊர் போலவே இருந்தது

இப்படித் தான்


தேசாந்திரிக்குப் பெண்பால் உண்டா


உண்டெனில் 

அவள் பை ரகசியம்

சொல்லட்டுமா


உடைகள்

தண்ணீர் புட்டி

கைவிளக்கு

பணப்பை

அணையாடை


அட

விலக்கு நாட்களில் 

எங்கு துணி மாற்றுவாள்


யாருமற்ற பாதையில்

துணிந்து நடப்பாளா


மரத்தடி உறக்கத்திற்கு

உத்திரவாதம் உண்டா


கேள்விகள் பை நிறைய 

சேரச்சேர

சுமைகூடி அமர்ந்துவிட்டாள்

தேசாந்திரியின் பெண்பால்


நிற்காமல் போய்க்கொண்டே

இருக்கிறான்

தேசாந்திரி எனும் ஆண்பால்


****

பேயாட்டம்

 கொடுமைக்கு வாக்கப்பட்டவள்

நெருப்பை பொங்கித்தின்பவள்

மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள்


பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட

பாதம் பழுக்கும் உச்சி வெயில் 

பொழுதொன்றில்

குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள்


கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள்

தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள்


நெஞ்சை நசுக்கும் பாரங்களை எல்லாம்

திசைகள் தோறும் தெறிக்கவிடுமவள்

வீடு அதிர நடந்து பார்க்கிறாள்


கைநிறைய சோறு வாரித்திங்கவும்

கால் பரப்பி கூடத்தில் தூங்கவும்

முனியாண்டியைத் தான் 

துணைக்கு நிறுத்துகிறாள்


சுருட்டும் கருவாடும் சாராயமும் 

தட்சணையாய் கேட்கும்

பூசாரியைக் கூட்டிக்கொண்டு

புறப்பட்டு வருகிறானாம்

அவள் பொறந்தவன் 


அடிபட்டுச் சாகத்தான் பொறப்பெடுத்தேனா

உங்கக் கோடித்துணிக்குத்தான்

உயிர் வளர்த்தேனா

சங்கறுத்து மாலையா போடுவேன்டா

சாத்திரத்தில் மூத்திரத்தப் பெய்வேன்டா


தூக்கிக்கட்டிய சேலையும்

சிவந்து தெறிக்கும் விழிகளுமாய்

வானம் அதிர முழங்குகிறான்

முனியாண்டி


அடங்கி அமிழ்கிறது வீடு

புலர்ந்து வருகிறது பொழுது



****



Saturday, November 14, 2020

மழை

 பொழியப் பொழிய அடங்காமல் திமிரும் பெருந்தீ ஒன்றை வளர்த்துக்கொண்டிருக்கிறது

இந்தப் பைத்திய மழை

Monday, October 26, 2020

மழை

 இளம் கைம்பெண்ணின்

பின்னிரவை

ஒத்து இருக்கிறது

தனித்துப்பொழியும்

இவ்விரவு மழை

Friday, October 9, 2020

சடலம்

 நான் மலர் என்கிறேன்

நீ இருள் என்கிறாய்
நான் நுகரத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்

நான் கனி என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் புசிக்கத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்

நான் சிலை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் வருடத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்

நான் வீணை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் மீட்டத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்

நான் அன்பென்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் முத்தமிடுகிறேன்
நீ புணரத் தொடங்குகிறாய்
நான் இருள் என்கிறேன்

மௌனத்தின் ஒலி

 

மண்டியிட்டு அமர்ந்து
நிலம் நோக்கித் தலை பணிகிறேன்

மடை உடைந்த வெள்ளமென
ரத்தம் தலை நோக்கிப் பாய்கிறது

என் இரவுகளை
ஓலங்களால் உண்டவர்கள்
கூடாரம்
இந்த மண்டையோடு

இவர்கள் குரல்வளையை
என் உதிரத்தால் நிரப்ப வேண்டும்

மடை உடைந்த பெருவெள்ளம்

திணறும் கானகம்
குய்யோ முய்யோ என்று
எழுந்து பறக்கிறது

கதறலின் முகங்களில்
ரத்தத்தைப் பீய்ச்சியடித்துச் சாய்க்கிறேன்

மெல்ல மெல்ல அடங்குகிறது வனம்

எழுந்து அமர்கிறேன்
குப் குப் என்று ஒரு ரயில்
சத்தமின்றி
நழுவி வெளியேறுகிறது

மௌனத்தின் ஒலி கேட்க
ஆனந்தமாய் தான் இருக்கிறது

நிதானித்திருக்கும் ஆயுதம்

 

என் உள்ளங்கைக்குள் இருப்பது
உனக்கெதிரான ஆயுதம் தான்
என்பதில் அத்தனை உறுதியுடன்
இருக்கிறாய்

நான் சில நேரம் பூக்களை வைத்திருக்கிறேன்
சில நேரம் பனிக்கட்டிகளை
சில நேரம் நறுமணத் தைலத்தை
சில நேரம் பளபளக்கும் ஆயுதத்தை

போர்க்களத்தில் நிற்பவனுக்கு
உறக்கம் வருவதில்லை

நீ விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
நீராடிக்கொண்டிருக்கிறேன்
சோலையில் உலாப்போகிறேன்

எதிரியை களத்தில் இறக்கிவிட்டு
உப்பரிகையில் ஆப்பிள் சீவிக்கொண்டிருப்பது
அலாதி சுகம்

என் உள்ளங்கைக்குள் நிதானித்திருக்கிறது
உனை வீழ்த்தும்
அந்த ஒரு நிமிடம்

நீ
விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான்
ஆப்பிள் தின்று கொண்டிருக்கிறேன்

துயில் எழுப்புதல்


அறுவை சிகிச்சைக்கு பின்னான துயில் எழுப்புதலில்
அவர்கள் கன்னத்தைத் தட்டுகிறார்கள்
கைகளில் கிள்ளுகிறார்கள்
பெயர் சொல்லி உலுக்குகிறார்கள்

வலி மின்னி வெட்டுகிறது
பின்னிரவுக் கலவிப் பொழுதொன்றை
ஒத்ததாய் இருக்கிறது
அது

பிரிக்க முடியா இமைகளுக்குள்ளே
கருவிழி இறைஞ்சுகிறது
இன்னும் கொஞ்சம் உறங்கட்டுமா

நான் அசையாமல் கிடக்கிறேன்
அவர்கள் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
கிள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்

Tuesday, September 1, 2020

உறைந்த யுகங்கள்

 உடல் கட்டையாய் கிடக்கையில்

உள்ளம் கையறு நிலையில் தவிக்கிறது

உலகையே இயக்கும் சாவி

உறைந்த இந்தக் கைகளில் தான் இருக்கிறது


எழுந்துவந்தால்...


ஊர்க் கூட்டி நண்பனை அறிமுகப்படுத்துவேன்

துரோகியை அணைத்து முத்தமிடுவேன்

என் காயங்களைத் திறந்து ஆறவிடுவேன்

வடுக்களை உங்களுக்கு வருடத் தருவேன்

மலை கிராமத்திற்குப் பயணம் போவேன்

காது வளர்த்த கிழவியின் கையில் சோறு தின்பேன்

அரட்டை ஒழுக திண்ணையில்

தூங்கிப்போவேன்


ஆடுவேன்

பாடுவேன்

ஓடுவேன்

இன்னும் சத்தமாய் சிரிப்பேன்

அழுவேன்

இன்னும் சத்தமாய்


தலைமுறைகள் தாண்டி 

உறைந்து கிடக்கும் உள்ளம்

உடல் கட்டையாய் கிடக்கையில் தான்

கையறு நிலையில் தவிக்கிறது

Friday, August 28, 2020

மீறிச் செல்லும் கால்கள்

 ஒரே நாளில் உலகம் 

பாதியாக மடிக்கப் பட்டுவிட்டது


வலது பக்கம் தூங்கி

வலது பக்கமாய் உண்டு

வலது பக்கமாகவே கழிக்கவேண்டுமாம்


தலையில் குறுக்கிடும் தையல்

கோட்டைத் தாண்டி வராதே என்கிறது


ஒரு பாதி நான் எனில் 

மறுபாதி யார்?


என் மறுபாதியின் நினைவுகளை

எங்ஙனம் கைவிட


இடது முலையில் தான்

முதல் அமுதம் பருகினாள் 

மகள்


மடி உறங்கும் காதலை

இடக்கையே தலைகோதும்


இடது கால் இன்றும் காட்டும்

முதல் விபத்தின் மிச்சங்களை


நான் ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்திருக்கிறேன்

என் முதுகுக்குப் பின்னே 

இடது உலகம் இரைச்சலுடன் சுற்றுகிறது


ரங்கராட்டினமும்

பொம்மை மிட்டாயும்

கலர் கண்ணாடியும்

காத்தாடியுமாய் மினுக்குகிறது


குறுக்கிட்டு நிற்கும் மின்னல்கோடு 

வெட்டி அதிர்கிறது


நான் 

வலம் விட்டு 

மெல்ல நழுவி

இடப்புறம் நுழைகிறேன்


மீறிச்செல்லும் கால்கள் மட்டுமே

திருவிழாக் காண்கின்றன

Tuesday, August 25, 2020

பதில்

 எனக்கு பதிலாக பிள்ளைகள்

தொலைபேசி அழைப்புகளுக்கு 

பதிலளிக்கிறார்கள்


அம்மாவுக்கு பதிலாக பிள்ளைகள்

உணவூட்டுகிறார்கள்


அப்பனுக்கு பதிலாக பிள்ளைகள்

மடியில் தான் தலை சாய்கிறேன்


கணவனுக்கு பதிலாக பிள்ளைகள்

கரம் பற்றி நடக்கிறேன்


தோழிக்குப் பதிலாக பிள்ளைகளிடம்

ரகசியங்களைப் பகிர்கிறேன்


தோழனுக்கு பதிலாக பிள்ளைகளிடம்

திமிறிச் சண்டையிடுகிறேன்


ஆசானுக்குப் பதிலாக அவர்களே அறிவுரைகள் 

வழங்குகிறார்கள்


எல்லாவற்றுக்கும் 

பிள்ளைகளே 

பதிலாக இருக்கிறார்கள்

Friday, August 21, 2020

இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்

பாதி கனவில் விழிப்பு வந்து விடுவது

ஓடும் ரயிலில் இருந்து வெளியே வந்து விழுவது போல

ப்ளாட்பாரத்தில் நாம் மட்டும் அனாதையாய் நிற்கிறோம்

பின் எவ்வளவு முயன்றும் உள்ளே ஏற்க மறுக்கிறார்கள்


ஒரு முறை பாதி திருமணத்தில் வெளியேற்றி கதவடைத்து விட்டார்கள்

திருமணம் முடிந்ததா முறிந்ததா


தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து தூக்குகையில் விழிப்பு வந்துவிட்டது 

நல்லதா கெட்டதா 


நன்றாக பேசிக்கொண்டிருந்தவன்

பள்ளி பெயரைக் கேட்கையில் உறைந்து நின்று விட்டான்

எத்தனை கெஞ்சியும்

கடை பொம்மை போல விரைத்துக் கொண்டு நிற்கிறான்


மொச்சக்கொட்ட கண்ணழகி

முத்து முத்து பல்லழகி

சீமையில பேரழகி

செஞ்சுவச்ச மாரழகி


நாக்கைக் கடித்துக்கொண்டு

சரியாட்டம் போட்டுவருகையில்

நடுவீதியில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்களே!!


இப்பொழுது 

ஏற்றிக்கட்டிய லுங்கியும் டவுசருமாய்

புழுதிக் கால்களுடன்

நான் எந்தப் பக்கம் செல்ல?!


இரவெனும் சவப்பெட்டி

காலோடு மூத்திரம் போவது கூட தெரியாமல்

அப்படி என்ன தூக்கம் 

தவக்களைய கட்டிவிடறேன்

தூக்கம் ஒரு கேலி இவர்களுக்கு


விடுதியே விழித்திருக்கும்

பரீட்சை இரவில் 

கால் பரப்பி தூங்கும் இவளுக்காய்

தலையில் அடித்துக் கொள்கிறது இரவு


முதலிரவில் தூங்கிவிட்டவளை

எப்படித் தான் வைத்து வாழ்வது


அப்பன் பிணம் கிடக்க

அடுத்த அறையில் தூங்கியவளை

ஊர் ஏசியிருக்கக் கூடும்


இரவில் விழித்திருந்து காண

என்ன அதிசயம் இருக்கிறது?!


இன்று சாட்சிக்கு யாருமில்லை

உடனிருந்த  தூக்கமுமில்லை

நான் விழி விரிய காத்திருக்கிறேன்


உறைந்த சவப்பெட்டியாய் கிடக்கிறது இரவு

ஒலிகள் தூக்கில் தொங்குகின்றன

வரிசையாய்


விடியும்மட்டும் காண 

ஒரே காட்சி


இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?!!

வனம் தொலைந்த இரவு

 என் ஐந்து வயதில்

அம்மா இல்லாத இரவொன்றைக் கண்டேன்

எதிர்வீட்டுப் படுக்கையை நனைத்துவிட்டு

அம்மா வரவிற்காக

விடியும் வரை நடுங்கி இருந்தேன்


பதிமூன்று வயதில் 

மீண்டுமொரு அம்மா அற்ற இரவு

தூரத் தெரியும் விடுதி நிலா

அத்தனை பயமுறுத்தியது அன்று தான்


பின்

வனம் தொலைந்த சிறுமி போல்

என் தனித்த இரவுகள்

கிளைக்கு கிளை தாவின


அடம்பிடிச்சியாப்பிள்ள என்று 

அம்மா கடிந்துகொண்ட

முதலிரவு முடிந்த காலையோடு

அம்மாவைத் தேடும் இரவு

உறைந்து போனது


காலத்தின் கடைசி சுற்றில்

மரம் கொத்திப் பறவை ஒன்று

ஓயாமல் தலையில் கொத்தும்

இவ்வலி மிகு இரவு

அம்மாவைத் தேடி மீண்டும் அசைகிறது

இன்னும் கொஞ்சம்

 இறுதியாக கண் மூடுகையில்

யார் முகத்தைப் பார்க்க ஆசை


தோழியா தோழனா

பிள்ளையா பெற்றோரா

காதலனா கணவனா


முகம் பார்த்தால் போதுமா


குரலைக் கொஞ்சம் கேட்டுக்கொள்கிறேனே

கைகளை மட்டும் பற்றிக் கொள்ளவா

உடன் அழைத்துப் போகமுடியுமா


இங்கேயே தங்கி விடவா

இன்னும் கொஞ்சம்?!

Saturday, March 28, 2020

ஓடை

இது ஸ்ரீனிவாச வைத்யா அவர்கள் எழுதிய ,சாகித்திய அகாடமி பரிசு பெற்ற கன்னட நாவல் .தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் நம் பெங்களூர் நண்பர்களுக்கு நன்கு அறிமுகமான  கே. நல்லதம்பி அவர்கள்.

இந்த நாவலில் கதைக் களம் சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டத்தில் ஆரம்பித்து சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் முடிகிறது.

ஒரு பெரும் ஆலமரத்தின் வேரைப்பற்றி, மரத்தைப் பற்றி, அதன் விழுதுகள் ஒவ்வொன்றைப் பற்றி, அங்கு தங்கி வாழும் பறவைகள் பற்றி, அந்தப் பெருவாழ்வைப் பற்றி ஒரு நாளில் சொல்லிவிடமுடியுமா?! இந்த நாவலை நான் சொல்ல நினைப்பதுவும் அப்படியான ஒரு சவால் தான்.

எப்படி எங்கோ வடக்கே கான்பூரிலிருந்து வந்த கமலநாப பந்தன் தெற்கே கன்னட நாட்டில் நவலகுந்தா மண்ணில் வேர் ஊன்றினார் என்பது விதி. காலம் எங்கோ தின்ற பழத்தின் விதையை எங்கோ ஒரு மண்ணில் துப்பிவிட்டுப் பறக்கிறது. எங்கு விழுந்தபோதிலும் விதை முட்டி முளைத்து விடிகிறது. இந்தக் கதையின் நாயகன் விதையல்ல.
ஆணிவேரான கமலாச்சாரியின் மூத்தமகன் வாசண்ணா. அவர் வாசுதேவாச்சாரியாராக மூன்று தலைமுறை கண்டு மக்கி உதிரும் வரையிலான காலநதியின் நிற்காத ஓட்டமே இந்த நாவல்.

இங்கே பிள்ளைகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். பெண்களின் கருப்பை நிரம்பியே இருக்கிறது. பிறந்தது எத்தனையோ வளர்த்தது எத்தனையோ என்பதாக சில பிள்ளைகளே எஞ்சுகிறார்கள். கமலய்யா, சாவித்திரி தம்பதிக்கு 9ல் 4 எஞ்சுகிறது.

வாசண்ணாவின் தங்கை அம்பக்கா பத்து வயதில் திருமணம் செய்து கொண்டு பன்னிரெண்டு வயதில் வயதிற்கு வந்து பதிமூன்று வயதிலேயே விதவையாகி தலையை மழித்துக் கொண்டு தாய் வீடு வந்துவிடுகிறாள். கணவன், குழந்தை, சொத்து என்று எந்த பிடியும் இல்லாத பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும்? வீட்டையே தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர நினைக்கிறாள். ஆச்சாரம் மடி என்று அனைவரிலும் தான் மேன்மையானவள் என்று காட்ட எந்த துன்பத்தையும் தாங்குகிறாள். கதை முழுதும் ஆண்களுக்கு பெண் உடல் தேவையாக இருக்கையில் அம்பக்காவின் காமம்  ஒற்றை வரியில் கூட பேசப்படவில்லை. ஒரு இடத்தில் அவள் சொல்கிறாள் ,  'ஒவ்வொரு ஈரமான முடியிலிருந்தும் நீர்த்துளி நிலத்தில் விழுந்தால் கணவன் உயிர் நூறு வருடம் நரகத்தில் விழுந்து தவிக்குமாம்.அதற்குத்தான் மனைவியின் தலையை மொட்டை அடிக்கிறார்களாம். இவன் என் தலைமுடியிலதான் தொங்கிக் கிடக்கிறானா தொடப்பக்கட்டை சொந்தமா எதுவும் புண்ணியம் செஞ்சிருப்பானா பாவிப்பய ' என்று.. அத்தனை விதவைப் பெண்களின் குரலாக இதை நான் பார்க்கிறேன். ஆனாலும் ஆச்சாரத்தை கடைசிவரை கடைப்பிடிக்கிறாள். அந்த வீட்டில் நடக்கும் அத்தனை பிரசவமும் அவள் கையால் நடக்கிறது. தண்ணிக்காய வைத்து,குளிப்பாட்டி, தொட்டில் கட்டி, தாலாட்டு பாடி என்று ஓயாது உழைக்கும் அவள் தலையில் தியாகத்தின் புழுக்கல் நெளிந்து கொண்டே இருக்கிறது. தனிமை, தியாகம், அவள் கைமீறி காலம் ஓடும் வேகம், பிடிப்பற்ற வாழ்வு என்று சுழலில் சிக்கி ஓயாது சுழன்று இறுதியில் மனம் பிறழ்ந்து மரிக்கிறாள் அம்பக்கா.

ருக்குமா..அனாதையாக சிறு பிராயத்திலேயே இந்த அக்ரஹார வீட்டிற்கு வந்து சேர்ந்த தாழ்ந்த சாதிப் பெண். அந்த வீட்டின் பிள்ளைகளோடே வளரும் அவளுக்கு வயசு 28 ஐ தாண்டுகிறது. பெண் பிள்ளைகள் 10 வயதை அடையும் போதே திருமணம் செய்ய அவசரப்படும் பெரியவர்கள், 40 வயதில் மனைவியை இழந்த வெங்கண்ணாவுக்கு உப்புத் திங்கற உடம்பு, அவனும் மனுசன் தானே என்று பெண் தேடும் பெரியவர்கள், 13,14 வயதில் கரதண்டு தின்றபடி பருத்தி சுமந்து செல்லும் பெண்களை கண்களால் பருகும் பிள்ளைகளின் பசி அறிந்து அவசரமாக திருமணம் முடிப்பவர்கள் ருக்குமாவை ஏனோ மறக்கிறார்கள். சின்ன வயதில் கணவன் மனைவி விளையாட்டில் தன் கணவனாக இருந்த வாசண்ணாவை அவள் மனம் விரும்புகிறது. அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறி பின் சுதாரிக்கிறார். அந்த 2 நிமிடத்தொடுகை மட்டுமே அவள் மொத்த வாழ்க்கைக்கும்
சுகம் என்றாகிறது. வேறு யாருக்கும் அசைந்து கொடுக்க மறுக்கிறாள். பெண் அப்படித்தான் பிடித்தவனுக்காக ஆசையை இறுக்கிக் கட்டிக் கொண்டு காத்திருப்பாள். இறுதி மூச்சு வரைக்கூட
அவள் காத்திருப்பை மட்டுமே சுகமென இறுமாந்து இருப்பாள். இறுதியில் அவள் அந்த வீட்டில் அன்னியமாக உணரும் காலமும் வருகிறது. வாசண்ணா தம்பதியினர் காலில் விழுந்து வணங்கி விடைப் பெற்றுச் செல்லும் அவள் பின் எப்போதும் அவ்வீடு திரும்பவில்லை.

நாரயணனும் அவ்வாறே. அனாதையாக வந்தவர்க்கு அடைக்கலம் தரும் அந்த வீடு அவர்களை ஒருக்கட்டத்தில் கைவிடுகிறது. அவர்கள் அனாதையாக வெளியேறுவதை வேடிக்கைப் பார்க்கிறது.

திப்பக்கா..வாசுதேவாச்சாரியாரின் இளைய தங்கை. நான்கு வருடத்தில்
மூன்று முறை பிரசவத்திற்கு தாய் வீடு வருபவள்.பதினோராம் பிரசவத்திற்கு அவள் நிறைமாதமாக தாய் வீடு வருகையில் ஏற்கனவே கடன் சுமையில் தவிக்கும் வாசண்ணா ' பத்து பிள்ளையைப் பெத்த பிறகும் படுக்கையில் பத்தியமாக இருக்கவில்லை என்று கண்டபடி பேசுகிறார். அதற்கு பெண்களின் எதிர்வினை சமையலறையிலோ, பின்புறத்திலோ இப்படியாக வருகிறது' படுக்கை பத்தியம் பெண்களால் மட்டுமே கடைபிடிக்கக்கூடியதா என்ன? பத்தியம் இருக்கச்சொல்லு..யாருக்கு வேணும் ஒவ்வொரு வருஷமும் பிரசவம்..நமக்கா தேவை?.கழுதை மாதிரி உடம்பு மேல விழுகறானுங்க'..கழுதை மாதிரி மேலே விழும் ஆண்களை இன்று வரை காலம் உடன் அழைத்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

சோனி..வாசண்ணாவின் மகள். பதினொன்றில் திருமணமாகி பனிரெண்டில் வயதிற்கு வந்து கணவன் வீடு சென்று அடுத்த ஆறேழு மாதத்தில் கிணற்றில் பிணமாகிறாள். அவள் கணவன் வீட்டிற்குச் செல்லும் முன் கடைசி நாள் இரவு அவள் தாய், மகளை அருகில் படுக்கவைத்துக் கொண்டு தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும், உடலை தடவியபடியும் மகளுக்கு கணவன் வீட்டில் எப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரைகளைக் கூறுகிறாள். நம்மை அறியாமல் வயிறு பதறுகிறது. அய்யோ என்ன வாழ்வு இந்த பெண் ஜென்மத்திற்கு!!  உண்டு, உறங்கி, பெற்று, வளர்த்துச் சாகத்தானா? சமையலறையும், படுக்கையறையும், புழக்கடையும் தாண்டி பெண்ணிற்கு உலகம் உண்டா?

நாம் நின்றிருக்கும் காலத்திலிருந்து பின்னோக்கி பெண் வாழ்வை ஆராய்ந்தால் எத்தனை அவலங்களிலிருந்து, கீழ்மையிலிருந்து முட்டி மோதி இதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் பதற வைக்கிறது. இன்று நாம் அவலங்களைக் கடந்துவிட்டோமா, மேலானதொரு நிலமையை அடைந்து விட்டோமா..நீ இடத்தை வந்து சேரவில்லை இன்னும் தூரம் தொலைவு..நிற்காதே ஓடு, ஓடு..ஓடி ஓடி இளைத்துச் சாகு. ஆனால் அசந்து நிற்காதே.

வாசண்ணா பொறுப்பான தலைவனாக குடும்ப பாரத்தை அயராது சுமக்கிறார். யாருக்கு எதுவெது தேவையென்று கண்டு, பிள்ளைகளை இடம் பார்த்து சேர்கிறார். கடைசிவரை ஆச்சாரங்களை கைவிடாதவராக, மாறும் உலகத்தோடு ஒட்டமுடியாதவராக தவிக்கிறார். சுதந்திர ப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்குகையில் ஒரு சராசரி குடும்பத் தலைவனாக கவலை அடைகிறார். அவர் பிள்ளைகள் எல்லாம் காந்திக் குல்லாப் போட்டுக் கொண்டு ஊர்வலம், போராட்டம் என்று சுற்றுவதைக் கண்டு அஞ்சுகிறார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை நிலம் உள்ள பிராமணனாக பதற்றத்துடன் எதிர்கிறார். சுதந்திர வேட்கை எல்லாம் இல்லை, பிள்ளைகள் வம்புதும்புக்குப் போகாமல் இருந்தால் போதும் என்றிருக்கிறார். ஆனால் அவர் மகன் ராமன் போராட்டக்குழுவோடு அலைகிறான். அரசாங்கத்திற்கு எதிராக உப்பு காய்ச்சுகிறான். மேடையில் முழங்குகிறான். கடைசியில் குண்டடி பட்டு இறக்கிறான். மற்ற பிள்ளைகளில் சிலர் படிக்காமல் ஊரில் எதையோ ஒன்றைச் செய்கிறார்கள், சிலர் தாரவாடா போய் படித்து பட்டம் பெற்று வசதியான வாழ்வுக்கு நகர்கிறார்கள்.
வாசண்ணாவின் மனைவி துளசக்கா உற்ற துணையாக அவர் இன்ப துன்பங்களில் கடைசி வரை உடன் நிற்கிறாள். மகன் கேசவனின் மனைவி உட்பட பல தாரவாடா பெண்கள் சுதந்திப்  போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். நலகுந்தா பெண்களைப் போல் அல்லாமல் சுதந்திர தாகத்துடன் இருக்கிறார்கள். ஆச்சாரமான வாசுதேவாச்சாரியார் குடும்பத்தில் கலப்புத் திருமணமும் நடக்கிறது. காலம் எதற்காகவும் ,எவர் பொருட்டும் காத்திருப்பதில்லை. அது நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறது. சில இன்பமான, துன்பமான நினைவுகள் மட்டும் பாறை இடுக்கில் மாட்டிய
நாணல் புற்களாகவோ, அழுக்குச் சகதியாகவோ அங்கேயே தங்கிவிடுகிறது.

ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம்,முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ரேஷன் முறை,கிரிப்ஸா மிஷன், க்விட் இண்டியா,
ஈஸ்ட் இண்டியா கம்பெனி வெளியேறி பிரிட்டிஷ் ராணி ஆட்சிப் பொறுப்பேற்றது என்று நாம் பாடப்புத்தகத்தில் வாசித்த நிகழ்வுகள் கதையின் ஊடே வந்தபடியே இருக்கிறது. சிறிய கிராமத்திலும் மக்கள் சுதந்திர தாகத்துடன் இருக்கிறார்கள். பெண்கள் சுதேசி உப்பு விற்க வருபவர்களுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14 காலையில் இருந்தே ஊரே சேர்ந்து கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. நம் மனதிலும் அந்தக் குதூகலம் சேர்ந்துவிடுகிறது.அன்று மாலை மழை பொழிகிறது. அந்த மழை உற்சாகத்தை அதிகமாக்க வந்தது போல தாரவாடா மக்கள் கூவிக் கும்மாளமிடுகிறார்கள். நாவலை வாசிக்கும் நாமும் தான். நாடு சுதந்திரம் பெறுகிறது. நம் பாரதக்கொடி ஏற்றப்படுகிறது. சில நாளில் தன் பழுத்த வயதில் வாசுதேவாச்சாரியார் மரணிக்கிறார். நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் போலவே ஒரு சராசரி குடும்ப வாழ்வில் மனிதர்களின் போராட்டமும்.. அது அத்தனை எளிதானதல்ல.


இந்த நாவலில் இன்னொரு சம்பவம். நவலகுந்தாவில் பிளேக் நோய் பரவுகிறது. பிளேக், காலரா எல்லாம் சில ஆண்டுகளாக பண்டிகை திருவிழாக்கள் போல வருடாவருடம் வரும் என்ற போதும் அந்த ஆண்டு மட்டும் எப்போதோ வரும் முழு சூரிய கிரகணம் போல வருகிறது. மக்கள் ஆங்காங்கே செத்து மடிகிறார்கள். எந்தத்தெருவில் யார் இறந்தார் என்பதே பேச்சாக இருக்கிறது. அரசாங்கம் பிளேக் கேம்பிற்கு மக்களை இடம் பெயர்த்துகிறது. போதிய உணவின்றி, சுகாதாரம் இன்றி மக்கள் அவதியுறுகிறார்கள். செய்வதற்கு வேலை இன்றி கேப்பிலேயை முடங்கிக்கிடக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பகுதியை வாசிக்கையில் கொரோனாவிற்கு அஞ்சி வீட்டில் கண்டுண்டு இருக்கும் நம் இன்றைய நிலையோடு ஒத்துப் போகிறது. நிலையற்ற வாழ்வில் துன்பமும் கடந்து போகும். நோய் தீர்ந்து மக்கள் தன் அன்றாடங்களுக்குத் திரும்புகிறார்கள் நாளை நாம் அன்றாடங்களுக்குத் திரும்பப்போவதைப் போலவே..





Sunday, March 22, 2020

வாடி வாசல்

இந்தத் தனித்திருத்தல் மீண்டும் என்னை புத்தகங்களின் பக்கம் திருப்பி இருக்கிறது.

சி.சு.செல்லாப்பாவின் 'வாடி வாசல்'.
பதினெட்டு பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்தக் குறுநாவல் இன்னும் என் போன்ற சோம்பேறிக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பாதியில்விட்டிருந்த நாவலை இன்று மீண்டும் முதலில் இருந்து தொடங்கினேன்.

சிறுவயதில் எங்கள் வீட்டு வாசலில் தான் வாடிவாசல் கட்டப்படும். அனுமதியை மீறி பக்கத்து வீட்டிலிருந்து தாவி ஏறி மாடி நிறைய திமிரும் மக்கள் கூட்டமும், ஆறிப்போன பொங்கலைத் தின்றபடி என் வீட்டில் எனக்கே நின்று வேடிக்கைப் பார்க்க இடமில்லையா என்ற பெருமிதம் கலந்த அங்கலாய்ப்பும் என்று என் நினைவில் சேகரமாகியுள்ள ஜல்லிக் கட்டு வேறு. அசலான ஜல்லிக்கட்டு இந்த வாடி வாசல் நாவலில் இருக்கிறது.

அத்தனை அருமையான விவரணைகள். அந்தக் கூட்ட நெரிசலும், வெயிலும், மனிதக்குரல்களும், வியர்வை மணமும், புழுதி நெடியும் அசலான ஒரு வாடிவாசலில் நம்மைக் கொண்டு வந்து இறக்கிவிடுகிறது. காளைகள் வரத்தொடங்குகையில் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து நம்மையும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. வெறுமனே உடல் பலமும் துணிச்சலும் மட்டுமல்ல , ஒரு மாடுபிடி வீரனின் வெற்றி எதிர்வரும் காளையின் இயல்பை, அதன் மனவோட்டத்தைக் கணித்து இயங்குவதில் இருக்கிறது. பிச்சி அத்தகைய ஒரு அசலான வீரன். தளபதி போல அவனுடன் கூட நிற்கும் மருதனும் சளைத்தவன் அல்ல.

ஜல்லிக்கட்டைப் பற்றியே அதிகப் பக்கங்களுக்கு விவரணைகள் உள்ள இந்நாவலில் ஆசிரியர் போகிற போக்கில் மனித மனங்களின் இயங்கு திசையை,அதன் நிறங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

வெற்றி.. அதை நோக்கித் தான் அத்தனை மனிதனும் இயங்கிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் வெற்றவர்களுக்கானது. தோல்வியுற்றவனின் மனம் அவனை தூங்கவிடுவதில்லை. குப்பற விழுந்தவன் மீண்டும் எழுந்து ஓடியே ஆகவேண்டும். தோல்வியில் நின்று விட்டவன் பிணத்திற்குச் சமம்.

பிச்சியும் அப்படித்தான். தகப்பன் தோற்ற இடத்தில் வெற்றியை நாட்ட வருகிறான். வருடங்கள் கடந்தபின்னும் அவன் தகப்பனின் தோல்வி அங்கே அழியாத கறையாக இருக்கிறது. அதைத் துடைத்தே ஆகவேண்டும் என்று அடுத்த தலைமுறை வருகிறது. ஆம் தோல்வி மனிதனை தூங்கவிடுவதில்லை. அவன் எளியவனோ வலியவனோ. அதனால் தான் தன் தகப்பனைக் கொன்ற ஜமீன் காளையை அடக்க பிச்சி வருகிறான். ஜமீன்தார் முன் நிமிர்ந்து நிற்க கூசும் உடல் தான், அவரிடம் யாசகம் வாங்கும் கைகள் தான், அவர் கண் நோக்கத் தாழும் விழிகள் தான், ஆனால் மனம் ஓயாது வெல்லத் துடிக்கும். வற்றிய வயிறும் தோல்வியை செரிக்க ஒப்பாது. ஜமீன் காளை, எதற்கு பொல்லாப்பு என்று ஒதுங்கும் மக்கள் மத்தியில் அவன் களமிறங்குகிறான். களத்தில் அவன் அத்தனையும் மறக்கிறான், சமூக அடுக்கில் அவன் நிலை, ஜமீன்தார், பின் விளைவுகள் அத்தனையும். அவன் கண்முன்னே தகப்பனின் தோல்வி மட்டுமே சீறிக் கொண்டு வருகிறது. அத்தனை நிதானமாக, அத்தனை தீர்க்கமாக இறங்கி அடிக்கிறான். உயிரை வெற்றிக்குப் பணயமாக வைத்து ஆடுகிறான். வெல்கிறான்..

தோல்வி மனிதனை தூங்கவிடுவதில்லை. எளியவனையே அமரவிடாத தோல்வி வலியவனை என்ன செய்யும்? பணம், செல்வாக்கு, அதிகாரம், திமிர் கொண்ட ஒரு மனிதனை தோல்வி என்ன செய்யும்? பிச்சியைப் போல் வருடங்கள் காத்திருக்க விடாது. அந்தக் கறையை அன்றே துடை. தோற்ற மனம் ஒரு மிருகமாக மாறிவிடுகிறது. அதற்கு எந்த நியாயங்களும் தேவை இல்லை. இரக்க மனம் தோற்றவனுக்கு ஆபத்து. ஜமீன்தார் வென்றவனுக்குப்  பரிசு தருகிறார். காயம் பட்ட அவனுக்கு உதவுகிறார். பின் மிக நிதானமாகத் தன் பெருமை மிகு காளையைத் தேடிப்போகிறார், பலரைக் குத்திக் கிழித்தும் ,இன்னும் ஆத்திரம் அடங்காமல் திமிரிக் கொண்டிருக்கும் காளையைப் பார்க்கிறார்,ஊரே அதன் ஆக்ரோஷம் கண்டு அஞ்சி நிற்கிறது, ஆனால் ஜமீன்தாருக்கு அது இப்போது ஒரு தோல்வியின் சின்னம் மட்டுமே. நேற்று வரை கௌரவத்தின் சின்னமாக இருந்த ஒன்று இன்று வெறும் ஒரு விலங்காக எஞ்சிவிடுகிறது. தூப்பாக்கியை எடுக்கிறார், இரண்டு முறை சுடுகிறார். அவர் கைகளில் நடுக்கமில்லை, அத்தனை உறுதி. இறந்து விழும் மிருகத்தின் குருதியில் தோல்வியை கழுவியதாய் ஒரு நிம்மதி. ஆம் தோற்றவன் வென்றே ஆகவேண்டும், வழிகள் தான் வெவ்வேறு. இந்த உலகம் இதைத்தான் கோருகிறாதா?! ஆம் அல்லது இல்லை அவரவர் விருப்பம்.

மனிதனின் இந்த ஆட்டத்தில் அந்த மிருகத்திற்கு என்ன சம்பந்தம்? அதற்கு இந்த விளையாட்டு பற்றி தெரியாது. ஊட்டப்பட்ட ரோசம் தான் அதற்கு. இல்லையெனில் அது ஒரு எளிய மிருகம். மனிதனுக்கு வரும் ரோசம் தான் ஆபத்தானது , அது தயவு தாட்சண்யம் பார்க்காது .