Friday, August 21, 2020

இரவெனும் சவப்பெட்டி

காலோடு மூத்திரம் போவது கூட தெரியாமல்

அப்படி என்ன தூக்கம் 

தவக்களைய கட்டிவிடறேன்

தூக்கம் ஒரு கேலி இவர்களுக்கு


விடுதியே விழித்திருக்கும்

பரீட்சை இரவில் 

கால் பரப்பி தூங்கும் இவளுக்காய்

தலையில் அடித்துக் கொள்கிறது இரவு


முதலிரவில் தூங்கிவிட்டவளை

எப்படித் தான் வைத்து வாழ்வது


அப்பன் பிணம் கிடக்க

அடுத்த அறையில் தூங்கியவளை

ஊர் ஏசியிருக்கக் கூடும்


இரவில் விழித்திருந்து காண

என்ன அதிசயம் இருக்கிறது?!


இன்று சாட்சிக்கு யாருமில்லை

உடனிருந்த  தூக்கமுமில்லை

நான் விழி விரிய காத்திருக்கிறேன்


உறைந்த சவப்பெட்டியாய் கிடக்கிறது இரவு

ஒலிகள் தூக்கில் தொங்குகின்றன

வரிசையாய்


விடியும்மட்டும் காண 

ஒரே காட்சி


இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?!!

No comments:

Post a Comment