Sunday, October 2, 2016

அலமாரியில்
அத்தனைப் புத்தகங்கள் மீதும் வருடிக்கடக்கின்றன 
விரல்கள்
மின்விசிறியின் 
பறக்கும் இறக்கைகளை பிடித்துவிட முயன்றுகொண்டிருக்கின்றன கண்கள். 
இக்கோடையின் நிசப்தம்
முன் நெற்றியில் துளிர்த்து வழிகிறது
கால் பெருவிரலை
ஓயாமல் முத்திக்கொண்டிருக்கிறது செம்மீன்
குட்டிச்சுழல் ஒன்று
உருவாகி உள்ளிழுக்கிறது
இப்பிரபஞ்சம்
முழுவதையும்

கடலைக் களவாடுபவள்


கடலாடி மகிழும் மகள்
நம்ப மறுக்கிறாள்
கடலை 
உடன் எடுத்துச்செல்லுதல்
இயலாதென்பதை
தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்
குடிபுக முடியாதென்பதையும்
ஆமை ஓட்டிற்குள் மழைக்கு
ஒதுங்கமுடியாதென்பதயும்
பதறப் பதற
கிளிஞ்சல்களைப்
பொறுக்கத் தொடங்குபவள்
அரற்றிக்கொண்டு வருகிறாள்
வீடுவரை
உணவை மறுதலித்து
விழிகளை நிறைத்தபடி
உறங்கிப்போகுமவள்
விரலிடுக்கில் உறுத்தும்
மணலும்
உள்ளங்கைக்குள் புதையும்
கிளிஞ்சல்களும்
கடலுக்கு
வலைவீசிக்கொண்டிருக்கும்
நடுநிசிப் பொழுதில்
நடுங்கும் நட்சத்திரங்கள்
இமை தாழ்த்தி
உறைகின்றன
****
நன்றி: மலைகள். காம்
மிகுந்த
சந்தோசப்பதற்றத்துடன்
தேர்வு அறைக்குள் நுழைகிறீர்கள்
அச்சிடப்பட்ட விடைத்தாள்
உங்கள் கைகளில் தரப்படுகிறது
உங்கள் மண்டைக்குள்
வேறு விடைகள் இருக்கின்றனவா?!
நன்றாக அதை சுருட்டிக் கசக்குங்கள்
கடைமூளையில்
ஒரு குப்பைத்தொட்டித் தெரிகிறதா?
எழுதுகோலும், அழிப்பானும்
உடனெடுத்து வந்தீரா?!
இத்தனை விளையாட்டுத்தனத்திற்கு
அனுமதி இல்லை
மேலும்
குப்பைத் தொட்டி நிறைவதில்
ஆட்சேபனை இல்லை
மறைத்து வைத்திருக்கும்
தூரிகையை
வெளியில் எடுங்கள்
கடைசிமணி அடிக்கும் வரை
முதுகு சொறியுங்கள்
அல்லது
மணிக்கட்டு நரம்பை
அறுக்கத்தொடங்குங்கள்
மிக மெதுவாய்.

மனம் ஒரு மிருகம்


வால் குழைத்து மண்டியிடும்
தோள் தாவி முகம் நக்கும்
மென் உதிரம் கசிய நகம் பதிக்கும்
தருணம் அறியாத் தருணம் ஒன்றில்
குரல்வளைக் கவ்வும்
மனமொரு வளர்ப்பு மிருகம்
சீழ் தழும்பிக் குடைந்து கொண்டிருந்த
நெடுநாள் ரணமொன்று
உடைந்தது
அல்லது
உடைத்தேன்
வெள்ளை ஆடை முழுதும் பரவும்
செந்நிறக் குருதி
பிரபஞ்சத்தின் கதவுகளைத்
திறந்துவிடுகிறது
அத்தனை ஆசுவாசமாய்
அத்தனை சுதந்திரமாய்
வகுப்பில் நெருங்கிய தோழன், தோழிகள் என்று சில ஜோடிகள் உண்டு. நிதீஷ் + மோனிஷ் , சோனாக்ஷி + ப்ரியான்ஷு , குருசரண் + ச்சார்வி. இவர்களை எப்படி பிரித்து அமரவைத்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். இதில் குருசரண், ச்சார்வி மட்டும் வெவ்வேறு பாலினம் என்பதால் சுவாரஸ்யம் கூடுதல்.

பள்ளிக்கு வந்த புதிதில் குரு தான் ச்சார்வி மேல் ரொம்ப பிரியமாக இருப்பான். அவள் ரொம்ப பந்தா பண்ணுபவளாக, அவனை பெரிதாக கவனத்தில் கொள்ளாதவளாக இருப்பாள். ஒரு முறை குரு பென்சில் முனை உடைந்துவிட்டதென்று ஷார்ப் பண்ண எழுந்தான். இவள் உடனே என் பென்சிலையும் ஷார்ப் பண்ணிட்டு வா என்று அமர்ந்தபடி கட்டளை இட்டாள். இவன் உடனே, இரு என்னோட பென்சில ஷார்ப் பண்ணிட்டு வந்து உன்னோடத ஷார்ப் பண்றேன் அப்படின்னு சொன்னதும் இவ முகத்த பாக்கணும், ம்ஹ்ம் முதல்ல என் பென்சில ஷார்ப் பண்ணிக்கொடு, இல்லன போ பேசமாட்டேன் என்று சிணுங்கிக்கொண்டு சொல்கிறாள். இருவரும் முதல் பெஞ்ச் ஆகையால் இந்த உரையாடல் , முக பாவனை எல்லாம் துல்லியமாக கண்டு நான் ரசித்துக்கொண்டிருந்தேன். அவன் சரி கொடு என்று அவள் பென்சிலை வாங்கி ஷார்ப் பண்ணிக்கொடுத்ததும் வேக வேகமாக அவனுக்கு முன்னால் எழுதி முடித்து நான் தான் first என்று நோட்டுடன் என்னிடம் ஓடி வந்தாள். இதுவே குரு முதலில் எழுதி முடித்தால் அவளுக்காக காத்திருந்து ரெண்டுபேரும் சேர்ந்து தான் வருவார்கள். நான் கூட அவனிடம் சொல்வேன், அவ உனக்காக வெயிட் பண்றாளா ? இல்லதானே ,அப்புறம் நீ மட்டும் ஏண்டா வெயிட் பண்ற என்று. அதற்கு அவனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வரும். மேம், சார்வி சாப்பிடாம பாக்ஸ் ஐ மூடிட்டா என்று ஒரு முறை தீரஜ் என்னிடம் சொன்னபோது, இந்த குரு அவனை முறைத்துப் பார்த்து, உன்கூட காய் என்று செய்கை செய்தான். அவளை அப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்வான். ஆனா அவ பெருசா அலட்டிக்க மாட்டா.

இதெல்லாம் வருடத்தின் ஆரம்ப மாதங்களில் தான். தற்போது ஒரு நாள் குருவையும் சார்வியையும் வேறு வேறு இடத்தில் உட்கார வைத்திருந்தேன். பிள்ளைகள் எல்லாம் பழங்களின் படத்திற்கு கலர் அடித்து ஒவ்வொருவராக பேப்பரை என் மேசை மேல் வந்து வைத்துக்கொண்டிருந்தார்கள். குருவுக்கு கலர் அடிப்பதே பிடிக்காத வேலை.எப்பொழுதும் மெதுவாகத்தான் செய்வான், பலமுறை பாதியிலேயே நேரமில்லாமல் பேப்பரை வாங்கிவிடுவேன். அன்றும் அப்படி தான் முடிக்காத வெகு சிலரோடு அவனும் இருக்க, இந்த சார்வியும் குனிந்து கலர் அடித்தபடியே இருக்கவும் , இவளுமா இன்னும் முடிக்கவில்லை? என்று ஆச்சர்யத்துடன் அருகில் சென்று பார்க்கிறேன், கலர் அடித்து முடித்துவிட்டு சும்மாவாச்சும் கலர் அடிப்பது போல பென்சிலை வைத்துக்கொண்டு பாவனை செய்துகொண்டிருக்கிறாள்.

இப்பொழுதெல்லாம் அவன் கோவப்படுகிறான், அவளைப் பற்றி என்னிடம் புகார் சொல்கிறான், ஆனால் அவள் நேர் மாறாக மாறிவிட்டாள். எனினும் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். இன்று குரு, வாயில் ரப்பரை போட்டு சப்பிக்கொண்டிருந்தான். நான் கோவமாக அவனை அருகில் அழைத்து, எப்ப பாரு எதையாவது வாய்ல கடுச்சிகிட்டே இருக்க, இரு வாய்க்கு ஸ்டேப்லர் போட்டு மூடுறேன்னு சொல்லி, இரண்டு உதட்டையும் பிடித்து இனி இப்படி செய்வியா? செய்வியா ? என்று கேட்டபடி ஸ்டேப்ளரை உதட்டருகில் கொண்டு சென்றேன். அதற்குள் பிள்ளைகள் சிலரும் கூடி விட்டனர். குரு பயந்தபடி செய்யமாட்டேன் ,செய்யமாட்டேன் என்கிறான். பார்க்கிறேன், இந்த சார்வியும், இனி அப்படி செய்யமாட்டான் ,செய்யமாட்டான் என்று அவளும் என் கை அருகில் நின்று தவித்தபடி கெஞ்சிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அந்த காட்சியை கண்ட நொடி என் மனம் அடைந்த உணர்வை எழுத்தில் சொல்லவே முடியாது. அவன் வாய்க்கு ஸ்டேப்ளர் போட்டா உனக்கு வலிக்குமா என்கிறேன் ,சார்வி ஆமாம் என்று கலங்கிய கண்ணும், சிரித்த முகமுமாய் சொல்கிறாள். அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பின், எனக்கு முத்தம் ,எனக்கு முத்தம் என்று ஓடி வந்த எல்லா பிள்ளைகளுக்கும் முத்தம் தந்து.... வாழ்க்கை மிக அழகானது.

ஒரு பெண் நேசிக்கத்தொடங்கிவிட்டால் அதன் எல்லை அளவிட முடியாதது. பேரலையென அடித்துச் சுருட்டி தன்னுள் புதைத்துக்கொள்ளும் மூர்க்கமும் அதுவே, பொத்தி அணைத்து அடைகாக்கும் கதகதப்பும் அதுவே. மேற்சொன்ன நிகழ்வுகளை குரு, சார்வியின் குழந்தை மனம் மறந்து போகும். ஆனால் எனக்கு, கடவுள் தோன்றி மறைந்த கணமென இக்காட்சி நினைவில் ஒளி கூட்டும்.

*****
இன்று அம்மாவின் புடவையை உடுத்தியிருந்தேன். இதுவே முதல் முறை. இந்தப்புடவை அம்மாவுக்கு நான் எடுத்துக்கொடுத்தது தான். சின்னபிள்ளைங்க கட்டுற மாதிரி இருக்கு என்று சொல்லி ஒரு முறை மட்டுமே என் திருப்திக்காக கட்டியிருந்துவிட்டு பின் அதை பீரோவில் மடித்து வைத்தது தான்.

சின்ன வயசில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நானும்,தங்கையும் அம்மாவின் புடவையைக் கட்டிப்பார்த்து பெரியமனுஷி ஆகிவிட முயன்று கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அம்மாவின் புடவை அத்தனை சந்தோசத்தைக் கொடுத்தது. இனம் புரியாத ஒரு கவர்ச்சி அந்தப் புடவைக்கு உண்டு.

இன்று நான் உடுத்தியிருந்த அம்மாவின் புடவை பெரும் பாராங்கல் போல் என்னை நசுக்கிக்கொண்டு இருந்தது. இதோ பள்ளியிலிருந்து வந்து அவசரமாக வேறு உடைக்கு மாறும் வரை மூச்சு திணறிப் போயிற்று. இதோ இதை எழுதி முடிக்கையில் நான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பேன்.

என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா விதவிதமாக புடவை உடுத்தியோ , ஆசை ஆசையாக தன்னை அலங்கரித்துக்கொண்டோ நான் பார்த்ததில்லை. எளிய புடவை, இரண்டே கண்ணி பூ என்பதே அவரின் அதிகபட்ச அலங்காரம். பொட்டு மட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கு பதிலாக குங்குமத்தை நெற்றியில் வைத்திருப்பார். குங்குமம் லேசாக மூக்கின் மேல் சிந்தியிருக்கும். தலை நிறைய பூவும், கண்களில் எழுதிய மையும், கையில் வாட்ச்சுமாக தனது திருமணப் போட்டோவில் அம்மா எவ்வளவு அழகாக இருந்தார்?!

அம்மாவை கலர் புடவையில் பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்பா இறந்த அன்று பிறந்த வீட்டிலிருந்து அவருக்கு தரப்பட்ட வெள்ளைப் புடவையை உடுத்திக்கொண்டு இறுதியாக அப்பாவின் தலைமாட்டில் வந்து அமர்ந்து அழுதார். அதற்குப்பின் என்றுமே அம்மாவை வண்ணங்களுடன் நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், கெஞ்சிப் பார்த்தும் கலர் புடவைக் கட்ட மறுத்துவிட்டார். தயவு செஞ்சு என்ன கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்லி ,தோடு முதற்கொண்டு அத்தனையும் இழந்து ,வெள்ளை உடைக்கு மாறி விட்டார்.

இப்போதெல்லாம் கணவனை இழந்தவர்கள் வெள்ளை ஆடை உடுத்துவது குறைந்து வருகிறது என்றாலும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இவை அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. வண்ண உடைகளை துறக்க மறுப்பவர்கள் கணவன் மேல் அன்பற்றவர்கள் என்றும், பேராசை பிடித்தவர்களாகவும், கணவனின் மரணத்திற்கு கவலைப் படாதவர்கள் என்றுமே பார்க்கப்படுகிறார்கள்.ஒரு மெல்லிய சந்தேகம் அவர்கள் தலைக்கு மேல் எப்போதும் வட்டமிட்டபடி இருக்கிறது.

போதாதக் குறைக்கு இவள் கலர் புடவைக் கட்டினால் அது இவள் கூடப் பிறந்தவனுக்கு ( அண்ணன், தம்பி என்று ஆண்களுக்கு மட்டும்) ஆகாதென்று வேறு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். என் மாமனார் இறந்தபோது என் மாமியார், எனக்கிருக்கறது ஒத்த பொறந்தவன். அவன் நல்லா இருக்கறதவிட எனக்கு கலர் புடவை முக்கியமா என்று சொல்லி இறப்புக்கு வந்திருந்த சொந்தக்காரர்களிடமே அத்தனைப் புடவையையும் ஆளுக்கு ரெண்டாகப் பிரித்துக் கொடுத்தது நினைவில் வருகிறது. ஆக வெள்ளைப் புடவை வேண்டாம் என்றால், கூடப்பிறந்தவர்கள் மேலும் பாசமற்ற ,சுயநலக் காரியாக அவள் அறியப்படுவாள்.

பூமியின் நில அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மாறி வருவதைப்போல , பெண்ணின் முன்னேற்றம், நகர்வு மிக மிக மெதுவா நடந்துகொண்டிருக்கிறது. இது மிகுந்த அலுப்பைத்தருகிறது என்றாலும் நம்பிக்கையோடு தலைமுறைகளைத் தாண்டி வந்துகொண்டிருக்கிறோம். பின்னோக்கி இழுக்கும் எத்தனையோ பூட்டப்பட்ட விலங்குகளை சுமந்துகொண்டு தான் பெண் இத்தனை மலர்ச்சியோடு , தாய்மை குன்றாது வலம்வருகிறாள்.

******

Saturday, April 9, 2016

குரல்களின் மேல் எனக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. ஒரு நபரிடம் முதல் முறை பேசுகையில் அவர் குரல் எப்படி இருக்கிறது என்பதில் தான் என் முதல் கவனம். கனமாக இருப்பவர்களின் மென்மையான குரல்கள், மெலிந்து இருப்பவர்களின் கனமான குரல்கள், குரல் மூலமாகவே தனக்கு கம்பீரம் கூட்டிக்கொள்ளும் மனிதர்கள் என்று குரல்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்?!

நான் பேசுகையில், பாடுகையில் என் காதில் விழும் என் குரல் எனக்கு மிகப் பிடிக்கும். அந்த நம்பிக்கை உடைந்துபோனது எப்போது ? என் குரலைப் பதிவு செய்து நானே முதன் முதலாகக் கேட்ட அந்த நாளில் நான் பெரும் ஏமாற்றமும் துக்கமும் அடைந்தேன். அனேகமாக அன்றிலிருந்து தான் நான் குரல்களின் மேல் கவனம் கொள்ள ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன்.

அம்மா தொலைபேசில் அழைக்கையில்,' நேத்து தானம்மா பேசினோம் ? ஏதும் விஷயம் இருக்கா? என்று கேட்டால், இல்ல சுஜி பொக்குனு இருந்துச்சு,
உன் குரல் கேட்டா தேவலாம்னு தோணுச்சு அதான் கூப்டேன் என்பார். எது இந்த குரலா? ஆமாம் பெரிய சுசீலா குரல் என்று கிண்டல் அடிப்பேன். மனதுக்கு இணக்கமானவர்களின் குரல் எப்போதும் இனிமையாகவே ஒலிக்கிறது. உண்மையில் வெறும் குரலை மட்டுமே நம்பிக்கையாக பற்றிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தான் எத்தனை பேர்! உறவினர் ஒருவர், மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 8 வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்தார். அடிக்கடி எங்களுக்கு தொலைபேசுவார். நல்லா இருக்கீங்களா? கிளைமேட் எப்படி இருக்கு? எப்போ இந்தியா வரீங்க என்பதை தாண்டி அவரிடம் பேச எங்களுக்கு எதுவுமே இல்லாதபோதும் அவர் பேசிக்கொண்டே இருப்பார். தண்ணீருக்குள் மூழ்கி விட்டவனின் கைக்கு அகப்பட்ட நீண்ட குழாய் அது. அவன் சுவாசிக்க அது ஒன்றே வழி. இந்த குரல்களும் அப்படித்தான்.அது பெரும் ஆசுவாசம்.

பிரசவ அறையில் கண்கள் மூடப்பட்ட நிலையில் நான் கேட்ட ஸ்ருதியின் முதல் அழுகை. ஆணா பெண்ணா என்று அடையாளம் இடப்படாத புத்தம் புது குரல். என்னை வந்து தீண்டிய என் இன்னொரு குரல்! இந்த குரல்கள் தான் என்ன ஒரு அற்புதம்!!

சில வார்த்தைகள் சில குறிப்பிட்ட குரல்களுக்கு மட்டுமே சொந்தமாகிப்போகிறது.அந்த வார்த்தைகளை எங்கு, எப்பொழுது கேட்டாலும் அந்த குறிப்பிட்ட குரல்கள் தான் நினைவில் வரும். வாசனையைப் போலவே சில வார்த்தைகளும் சில குறிப்பிட்ட மனிதர்களுக்கானது.

நாம் திரும்ப கேட்கவே வழி இல்லாமல் போன குரல்கள் தான் எத்தனை எத்தனை ? அன்பும், கருணையும் குழையும் அப்பாவின் அந்த கனமானக் குரலை இனி ஒரு போதும் கேட்கவே முடியாது என்பதை விட பேரிழப்பு வேறு என்னவாக இருக்கமுடியும்? சொல்றா கண்ணு ... பாப்பா .. என்று அழைக்கும் அக்குரலுக்காக இப்பவும் காத்திருக்கிறேன்.

*****
ஸ்ருதி இன்று கேட்டாள், நினைவைப் பின்னோக்கி செலுத்தி முதல் நினைவாக எது ஞாபகத்தில் இருக்கிறது என்று. NAT GEO சானலில் மைண்ட் கேம்ஸ் நிகழ்ச்சியில் நினைவு பற்றி பேசப்பட்டதின் எதிரொலி.

யோசிக்கதொடங்கினேன். 5 ஆம் வகுப்பில் படிக்கிறப்போ என்று ஆரம்பிக்கும்போதே இன்னும் பின்னால் போய் யோசிங்கம்மா என்றாள்.ஓகே இன்னும் பின்னால். ம்ம் நான் முதன் முதலில் LKG சென்ற நாள். இப்பொழுது போல தெருவுக்கு தெரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இல்லாத காலம். சுற்று வட்டாரத்திற்கே முதல் ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கும்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. எங்கள் ஊரிலிருந்து இரண்டு ஊர் தாண்டி தம்மம்பட்டியில் பள்ளி. பள்ளி வாகனமெல்லாம் இல்லை. பொது போக்குவரத்து தான். அண்ணனும் அக்காவும் அங்கு படிக்க, அடுத்தவருடத்தில் என்னையும் கொண்டு சேர்த்த அந்த நாள். வகுப்பில் நான் ஒரேடியாக அழவும் என்னை என் அண்ணன் வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். அழுதுகொண்டே அண்ணன் அருகில் உட்கார்ந்து கொண்டதும், வரிசையாக பெஞ்சுக்கு கீழே தெரிந்த சிகப்பு சாக்ஸ்ம், கருப்பு ஷூஉம் அணிந்த கால்களும் நினைவில் வருகிறது. சிஸ்டர் ஒருவர் ரைம்ஸ் சொல்லித்தந்ததும், அங்கு பெட்டிக்கடை தாத்தாவிடம் தினமும் சிக்லெட் வாங்கி தின்றதும் என்று கொசுறாக கொஞ்சம் நினைவுகள். எவ்வளவு யோசித்தும் அதற்கும் பின்னோக்கிப் போக முடியவில்லை.

நம் மூளையானது நம் உணர்வுகளுடன் தொடர்புடைய விசயங்களை மட்டுமே நினைவில் இருத்தியிருக்கும் என்றும் அன்றாட நிகழ்வுகள் நினைவில் நிற்காமல் போவதும் அதனால் தான் என்றும் அந்த டிவி நிகழ்ச்சியில் சொன்னார்கள்.

நம் நினைவுகளில் நில்லாமல் நாம் கடந்துவிட்ட நாட்கள் அப்படி எத்தனை எத்தனை!! நம் குழந்தைப்பருவம் முதல் நேற்று நடந்தது வரை யோசித்துப் பார்த்தோமானால், குழந்தைப்பருவத்து நினைவுகள் அதிகமாகவும், வளர வளர நினைவில் நிற்கும் விஷயங்கள் குறைந்து போயிருப்பதையும் உணரமுடியும். கல்லூரி நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை ஒரு நிரந்தரமான பாதையில் பொருத்தப்பட்டு வேகமெடுத்து விடுகிறது. ஒரே மாதிரியான தாள கதியில் உருளும் வாகன ஒலி காதுகளுக்குப் பழகி பின் அதன் இருப்பே கவனமற்றுப் போகிறது.

எல்லா நினைவுகளையும் நிகழ்வுகளையும் புகைப்படத்தில் அடைத்து வைத்து விட்டு, வேண்டிய நேரத்தில் புரட்டிப் பார்த்துவிடும் சவுகர்யம் வாய்த்துவிட்ட நாம், நினைவுகளை அதன் குணமும் மணமும் மாறாமல் இறுதிவரை மூளைக்குள் பொத்திவைத்து எடுத்துவந்து நம் அடுத்த தலைமுறைக்கு காட்சி பிசகாமல் சொல்லும் சுவாரஸ்யத்தை இழந்துவருகிறோம்.என் அம்மா வாய்வழி நான் கேட்ட நிகழ்வுகளைப் போல நான் என் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு சொல்ல எவ்வளவு விஷயம் இருக்கும்? அது எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று கேள்வி எழுகிறது.

*****
அரக்கு மாளிகையில்
வீற்றிருக்கும்
மகாராணியின் கைக்குள் 
நனைந்து கொண்டிருக்கிறது
ஒரு தீக்குச்சி

*****

இறுதி முத்தம்

தொப்புள் கொடியை
அறுப்பதென
இறுதி முத்தத்தின்
செந்நிற வலிக்கு
ஆரஞ்சு மிட்டாயின் சுவை
ஒரு மலரைப்பறித்து
மாலையுடன் சேர்க்கும்
இறுதி முத்தக்காம்பு
ஒலிப்பெருக்கியாகி இசைக்கிறது
Yவடிவப் பாதை என்றறிந்தே
தொடங்கியது
இரட்டை நிழல்களின் பயணம்
இறுதி விருந்தில்
மோதிச் சிணுங்கும் கோப்பைகளில் மிதக்கின்றன
செர்ரி பழங்கள்
நீயே அணிவிக்கிறாய்
ஆடைகளை
இறுதிக் கலவிக்குப் பின்னும்
ஆதாரச் சொல் ஒன்று
விடைபெற்றுப் பறக்கிறது
வாக்கியத்திலிருந்து
****


ஊருக்குச் செல்லும் 
குழந்தைகள்
வீட்டைப் பிரித்து
சுவர்களை மிச்சம் விட்டுச் செல்கிறார்கள்
நிறங்களை அள்ளிக் கூந்தலில் சொருகிக்கொண்டு
வெற்றுச் சதுரத்தைக்
கையளிக்கிறார்கள்
உலகம்
ரோஸ் நிற பலூனாகி
அவர்கள் பின்னே பறந்து
மறைகின்றது
திசை தொலைத்த குருடனின்
கைத்தடியினூடே நெளிகின்றன
பாம்புகள்
ஒலியைப் பறிகொடுத்த
வனம்
ஓர் காட்சிப்பிழை
விழுந்து எழும் கதிரவனுக்கு
முடவனின் சாயல்

****

Saturday, April 2, 2016





ஆட்டிசம்:

புதிய பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்த முதல் நாள். புது இடம் ,சூழ்நிலைக்கு பயந்து குழந்தைகள் எல்லாம் அழுதுகொண்டிருக்க ஒரு பையன் மட்டும் தரையில் உருண்டுகொண்டும், சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டும், வகுப்பை விட்டு வெளியில் ஓடிக்கொண்டும் இருந்தான். எனக்கும் அப்பள்ளியும், சூழ்நிலையும் புதுசு ஆகையால் நானே கொஞ்சம் பதட்டத்தில் இருக்கையில் இவன் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க அவனை எப்படி அமைதிப் படுத்தி , ஒரு இடத்தில் அமரவைப்பதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். எல்லா பிள்ளைகளிலும் அவன் மட்டும் தனித்து தெரிந்தான். என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிந்திருக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் அப்படியே சென்றது. ஒரு வழியாக வகுப்புகள் செட்டில் ஆகி பாடங்கள் தொடங்குகையில் இவனைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லி , பள்ளி கவுன்சிலரிடம் அவன் பெற்றோர் சகிதம் அழைத்துச் சென்றேன். 


அங்கு பெற்றோர்களிடம் பேசியபின் எனக்கும் அவனை எப்படிக் கையாள்வது என்று சில டிப்ஸ் வழங்கப்பட்டது. அதன்படி அவனை ஓரளவு கட்டுக்குள் வைக்கமுடிந்தது. வருடம் முடிந்துவிட்டது ஆனாலும் இன்றுவரை அவனுக்கு மருத்துவரின் உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது என்பதை பெற்றோர்கள் உணரவில்லை, பள்ளியும் அதை வலியுறுத்தவில்லை. பெரும்பாலும் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒரு மாணவன் என்பவன் ஒரு அட்மிசன் எண்ணிக்கை தான். உன் குழந்தை இப்படி இருக்கிறான் , இவ்வளவு தான் இவனால் முடிகிறது என்பதை பெற்றோருக்கு தெரிவிப்பதோடு வேலை முடிகிறது. ஒரு விதையை நட்டுவளர்ப்பது போல பிள்ளையின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்ணும் கருத்துமாக கவனித்து பராமரிப்பது பெற்றோர்கள் கையில் இருக்கிறது. 

வகுப்பிற்கு இரண்டு,மூன்றென ஆட்டிசம் , கற்றல் குறைபாடு, ஹைப்பர் என்று நாம்  சென்ற தலைமுறை வரைக் கேட்டறிந்திடாத குறைபாடுகளுடன் பிள்ளைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இச்சின்ன குறைபாட்டை உணர்ந்து, அதை களைவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதை மறைக்க முயல்பவர்களாக, போகப் போக சரியாகிவிடும் என்று விட்டுவிடுபவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு தேவை தனி கவனமும், பயிற்சியும்(individual attention and practice).
கிட்டத்தட்ட 30 குழந்தைகள் இருக்கும் வகுப்பில் ஒரு பிள்ளை மேல் மட்டும் தனிகவனமும், வேறு வகையான கற்பித்தல் முறையும் என்பது நடைமுறையில் சாத்தியப்படாதது. மேலும் ஆசிரியருக்குமே இந்தக் குறைபாடுகள் பற்றிய அறிதல் இருப்பதில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்குழந்தைகள் புறக்கணிப்பிற்கும், கேலிக்கும் ஆளாகின்றனர்.

என் நெருங்கிய தோழியின் மகன் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளானவன். அவன் பிரச்சனை அறிந்தே PreKG, LKG, UKG வரை படிக்க அனுமதித்த பள்ளி, ஒன்றாம் வகுப்பில் அவனால் மற்றபிள்ளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து படிக்கமுடியதென்று சொல்லி UKG யிலேயே மீண்டும் தொடரச் சொன்னார்கள். சரி  அடுத்த வருடத்திற்குள் அவனை ஒன்றாம் வகுப்பில் மற்றவர்களோடு போட்டிபோட தயார்படுத்திவிடுவார்களா, அதற்காக சிறப்பு கவனம் அவன் மேல் செலுத்தப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. 

இன்று அவன் வேறு பள்ளியில் படிக்கிறான். மற்றபிள்ளைகளின் புறக்கணிப்பு , ஆட்டிசம் பற்றிய எந்த புரிதலுமற்ற ஆசிரியை என்று பல தடைகளைத் தாண்டி பெற்றோரின் தனி கவனத்திலும், பயிற்சியிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறான். 

குழந்தைகள் அனைவருமே கடவுளுக்குச் சமம். எந்தத் திறமையும் அற்றக் குழந்தை என்று யாருமே இல்லை. அவர்களின் திறனைக் கண்டறிய முடியாத குருடர்கள் நாம் தான். இந்த இணைய யுகம் அவர்களை மேலும் மேலும் தனிமைக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாக்கி வருகின்ற நிலையில் கிழமைகளை வெறும் விழிப்புணர்வு தினமாகக் கடக்காமல் கொஞ்சம் நம் முதுகெழும்பை வளைத்து குனிந்து குழந்தைகளின் சிறிய உலகிற்குள் நுழைந்து கவனிக்க வேண்டும். நாம் காட்டும் அக்கறையிலும் பராமரிப்பிலுமே இருக்கிறது ஒரு விதை வேர் பிடித்து விருட்சமாவது. 

*******

Wednesday, March 2, 2016

கடல்

காது மடலோரம் 
ஓயாது தணல் மூட்டும்
பெருமூச்சின் ஓசை
யாசித்து
வந்து சேரும் விழிகளில்
உப்புக்கடல்
ஒரு வனவிலங்கின் சாயல்
அதற்கு
அச்சமும் களிப்பும்
சுழன்று துள்ளும் இடம்
மோட்சத்தின் திறப்பு
முதல் அணுவைத் தேடி நனைக்கும்
சூட்சமத்தில்
நீராடல் என்பதன் முழு அர்த்தம்
நாசி நுழைந்து நரம்பில் ஏறி உதிரம் கலந்து
மெல்ல மெல்ல உப்பே உறுவாகி
மின்னுகையில்
விலாவில்
முளைக்கத்தொடங்குகிறது
சிறகு
***

ஈரம் ஊறும் நிலம்

உன் உதடுகள்
நான் நீந்தித் திளைக்கும்
சிறு நதியின் இரு கரைகள்
மோனம் குழையும் 
காலநிலை
அங்கு
தேன் குமிழிகளை
உண்டு பசியாறுவேன்
ஈரம் ஊறும்
அந்நிலம் அமர்ந்து
மூச்சுக்காற்றில்
கூந்தல் உலர்த்துவேன்
உதட்டு வெடிப்புகளில்
உடல் பொருத்தி
உறங்கிப்போவேன்
இந்நதிக்கரையில் என் வாசம்
கீழுதட்டில் என் கூடாரம்
மீசை வானில்
நட்சத்திரங்களை எண்ணுகின்ற
நன்னாளொன்றில்
உயிர் கிள்ளி
நதி கரைத்து
நதியாவேன்
****

Sunday, January 3, 2016




ஒரு குட்டி அருவி என் தலையில் மட்டும் கொட்டியது போல, அறை நிறைய வண்ண பலூன்களைக் கண்ட குழந்தையைப் போல  மனம், சொல்லவொண்ணாக் குதூகலத்தில் தள்ளாடுகிறது.
கடவுளுக்கும் எனக்குமான உறவு என்பது அனைவரின் நலனும், எல்லாவற்றுக்குமான நன்றியும் என்ற இருவரியில் நிற்பதே. 
எந்த ஒரு எதிர்பார்ப்புமே இதயத்தை வந்து சேர்கையில் கூடவே துன்பம் என்னும் பெரும் பாறாங்கல்லை உடன் உருட்டி வந்துவிடுகிறது. ஆகவே சிறிய ஆசைகளைக் கூட எண்ணி ஏங்கி , பின் பதற்றத்துடன் கடந்துவிடவே மனம் எத்தனிக்கிறது. 

இந்தப் புது வருடத்திலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இன்றைய சந்தோசமும்,நிம்மதியும் எறும்பின் வாய்க்கு கிடைக்கப்பெற்ற உணவென மிகச் சிறிய, ஆனால் நிறைவான ஒன்று. 

ஒரு பெண் இறந்து போகையில் அவளோடு சேர்ந்து அவளது, சொற்களில் கூட அகப்படாத ஓராயிரம் ஆசைகளும் செத்து மடிகின்றன. என் அம்மா ஒரு நாள் என்னிடம் , சுஜி முன்னல்லாம் நெனப்பேன், வேட்டி சட்டை போட்டுக்கிட்டு, தலை முடியை லூசா விட்டுகிட்டு ஜாலியா ரோட்ல அரட்டை அடிச்சுகிட்டு போகணும்னு, என்று தனது மிகச் சிறிய ஆசையை குறு வெட்கத்துடன் சொல்கையில் அவளது பேத்தி பகல் கனவுகளில் திளைக்கும் வயதை எட்டி இருக்கிறாள். பெண்ணின் வாழ்க்கையில் நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே நடந்து முடிகிறது. எந்த அற்புதங்களையும் அவள் வாழ்வில் எதிர்கொள்வதில்லை. ஆகவே தான் ஆண்களைக் காட்டிலும் பெண் அதிக கனவுகளை வளர்ப்பவளாக, அதிலேயே நிறைவும் கண்டு ,பின் ஈரம் கசியும் பசிய கனவுகளை வேருடன் வெட்டி வீசுபவளாக இருக்கிறாள்.

நானும் விதி விலக்கல்ல. ஆசைகளை பெரும் பட்டியலாக இட்டு ,சுருட்டி ஒரு பேழைக்குள் போட்டு வைத்திருக்கிறேன். என்னோடு எரியூட்ட ஏதுவாய் அதை நித்தம் சுமந்து அலைகையிலும், இருப்பதில் நிறைவுருவதாய், எறும்பு, உணவு, நிறைவு என்று முகமூடியை அவசரமாக அணிந்துகொள்கிறேன். 

என் பயணத்தில் நான் வெகு தூரம் கடந்து வந்துவிட்டேன். இன்னும் கடக்க கால் வாசி தூரம் மட்டுமே மிச்சம் என்பதறிவேன். என்றாலும் என் மனம் ஒரு பரதேசி என என் கிராமத்து வீதிகளிலேயே அலைந்துகொண்டு இருக்கிறது. என் பால்யம், பள்ளி, கல்லூரி நாட்களை நித்தம் புரட்டிப்புரட்டி  பழுப்பேறிய அதன் பக்கங்கள் நைந்துகொண்டிருக்கின்றன. அங்கே எனக்கு ஒரு ஆசை உண்டு. லதா. என் பள்ளி, கல்லூரி நாட்களில் தூய நேசத்தை கையளித்தவள். அவளைக்காணவேண்டும். குறைந்த பட்சம் அவள் நலமுடன் இருப்பதாகவேனும் அறியவேண்டும் என்ற எளிய ஆசை. உலகம் ஒரு கைக்குள் அடங்கிவிட்டதாக நம்பும் இந்த இணைய உலகில் ஒரு குருடியைப்போல ஏங்கிக்கிடந்தேன். இன்று 16 வருடங்களுக்குப் பிறகு அவள் குரலைக் கேட்டுவிட்டேன். 

அற்புதங்களை நிகழ்த்த பரமாத்மா வருவதில்லை. எளிய மனிதர்களின்  மிக எளிய மனங்கள் அதை சாத்தியப் படுத்திவிடுகின்றது. மாட மாளிகைகளும், பட்டு விரிப்புகளும், தங்க சிம்மாசனமும் தரமுடியாத மனநிறைவை ஜன்னலில் வந்தமர்ந்து மூக்குரசும் ஒரு சிட்டுக்குருவி தந்துவிடுகிறது. நிறைந்து நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் அத்தனை கசடுகளும் வழிந்து வெளியேறிவிட்டது போல மனம் பளிச்சிடுகிறது. கடவுளுக்கு நன்றி.

                         " குறையொன்றும் இல்லை"