Friday, August 21, 2020

இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்

பாதி கனவில் விழிப்பு வந்து விடுவது

ஓடும் ரயிலில் இருந்து வெளியே வந்து விழுவது போல

ப்ளாட்பாரத்தில் நாம் மட்டும் அனாதையாய் நிற்கிறோம்

பின் எவ்வளவு முயன்றும் உள்ளே ஏற்க மறுக்கிறார்கள்


ஒரு முறை பாதி திருமணத்தில் வெளியேற்றி கதவடைத்து விட்டார்கள்

திருமணம் முடிந்ததா முறிந்ததா


தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து தூக்குகையில் விழிப்பு வந்துவிட்டது 

நல்லதா கெட்டதா 


நன்றாக பேசிக்கொண்டிருந்தவன்

பள்ளி பெயரைக் கேட்கையில் உறைந்து நின்று விட்டான்

எத்தனை கெஞ்சியும்

கடை பொம்மை போல விரைத்துக் கொண்டு நிற்கிறான்


மொச்சக்கொட்ட கண்ணழகி

முத்து முத்து பல்லழகி

சீமையில பேரழகி

செஞ்சுவச்ச மாரழகி


நாக்கைக் கடித்துக்கொண்டு

சரியாட்டம் போட்டுவருகையில்

நடுவீதியில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்களே!!


இப்பொழுது 

ஏற்றிக்கட்டிய லுங்கியும் டவுசருமாய்

புழுதிக் கால்களுடன்

நான் எந்தப் பக்கம் செல்ல?!


No comments:

Post a Comment