Friday, November 27, 2020

பேயாட்டம்

 கொடுமைக்கு வாக்கப்பட்டவள்

நெருப்பை பொங்கித்தின்பவள்

மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள்


பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட

பாதம் பழுக்கும் உச்சி வெயில் 

பொழுதொன்றில்

குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள்


கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள்

தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள்


நெஞ்சை நசுக்கும் பாரங்களை எல்லாம்

திசைகள் தோறும் தெறிக்கவிடுமவள்

வீடு அதிர நடந்து பார்க்கிறாள்


கைநிறைய சோறு வாரித்திங்கவும்

கால் பரப்பி கூடத்தில் தூங்கவும்

முனியாண்டியைத் தான் 

துணைக்கு நிறுத்துகிறாள்


சுருட்டும் கருவாடும் சாராயமும் 

தட்சணையாய் கேட்கும்

பூசாரியைக் கூட்டிக்கொண்டு

புறப்பட்டு வருகிறானாம்

அவள் பொறந்தவன் 


அடிபட்டுச் சாகத்தான் பொறப்பெடுத்தேனா

உங்கக் கோடித்துணிக்குத்தான்

உயிர் வளர்த்தேனா

சங்கறுத்து மாலையா போடுவேன்டா

சாத்திரத்தில் மூத்திரத்தப் பெய்வேன்டா


தூக்கிக்கட்டிய சேலையும்

சிவந்து தெறிக்கும் விழிகளுமாய்

வானம் அதிர முழங்குகிறான்

முனியாண்டி


அடங்கி அமிழ்கிறது வீடு

புலர்ந்து வருகிறது பொழுது



****



No comments:

Post a Comment