Sunday, December 29, 2013

இனிமையின் திரிபு







பொங்கல் திருநாள் நெருங்கி வருகிறது. கரும்புகள் இப்போதே வரத்தொடங்கிவிட்டன. என் சிறு வயதிலும் இப்படித் தான் பொங்கலுக்கு 20, 25 நாள் இருக்கவே தோட்டத்தில் கரும்புகள் விளைந்து தயாராகி விடும். தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் ,என் அக்கா,தங்கை, எதிர் வீட்டு தோழி என்று கூட்டமாகத்  தோட்டத்திற்கு கிளம்பிவிடுவோம். கரும்புக் காட்டில் வரப்பு ஓரமாக இருக்கும் நல்ல கரும்பாகப் பார்த்து அப்பா வெட்டித்தருவார். சொனை ஒட்டிக்கும் என்று வயலுக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.சோவை எல்லாம் கழித்து விட்டு கரும்பை துண்டுப் பண்ணித் தருவார்கள். ஒரு கை நீளத்துக்கு பெரிய,பெரிய துண்டுகளாகப் போட்டு தந்தால் தான் மனசு ஆறும். வரிசையாக வரப்பில் அமர்ந்துகொண்டு வாய் வலிக்க தின்று தீர்ப்போம்.


பொங்கல் நாட்களில் கரும்புகளைக் கொண்டுவந்து மாடியில் போட்டு விடுவார்கள். மேலே போனால் முறம் நிறைய சக்கையை நிரப்பிவிட்டு தான் கீழே வருவோம். திருநாள் அன்று பொங்கல் திங்கமுடியாமல் நிச்சயம் வாய் புண்ணாகி இருக்கும். மனம் கொள்ளா சந்தோசத்துடன் திரிந்த நாட்கள் அவை.


இன்றும் அப்படித் தான். கணவரும், பிள்ளைகளும் கிண்டல் செய்தாலும் இரவு 10 மணிக்குக் கூட அமர்ந்து கரும்பு தின்று கொண்டிருப்பேன். ஆனால் பிள்ளைகளுக்கு கரும்பு பிடித்திருந்தாலும் அதைச் சாப்பிடுவதில் உள்ள சிரமத்தால் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். தோல் எல்லாம் செதுக்கி, சின்ன துண்டங்களாக வெட்டித் தந்தால் தான் சாப்பிடுகிறார்கள். என்னைப்  பொறுத்த வரை அப்படி துண்டுகள் ஆக்கப்பட்ட கரும்புகள் கரும்புகளே அல்ல. தாய் பாலுக்கும் , பால் பவுடருக்கும் உள்ள மிக பெரிய வித்யாசம்  போலத்தான் இதுவும். ஆனாலும் வேறு வழி இல்லை.


என்னதான் தோட்டங்காடுகளுக்கு பிள்ளைகளை அடிக்கடி அழைத்துச் சென்றுகொண்டு இருந்தாலும் கிராமத்திலேயே பிறந்து,வளர்ந்த பிள்ளைகளின் அனுபவ அறிவை, சந்தோசத்தை, தேடலை, ஆர்வத்தை,துணிச்சலை நகர் வாழும் இவர்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் தடுமாறித் தோற்க வேண்டி வருகிறது.


முன்பெல்லாம், எவ்வளவு படித்து ,பெரிய வேலையில் இருந்து, கை நிறைய சம்பாதித்தாலும்  ஒரு ஏக்கர் நிலமாவது இல்லை என்றால் பெண் கொடுக்க மாட்டார்கள். சாப்பாட்டுக்கு அரிசி, கடையில் வாங்குவது என்பது அவலம் என்ற எண்ணம் இருந்தது. தோட்டத்தில் நாலு வாழைமரம் கூட இல்லை, என்னத்த பண்ணையம் பண்றாங்களோ என்று மாப்பிள்ளையை தட்டிக்கழித்த சம்பவம் கூட நிகழ்ந்தது.


இன்று முக்கால் சதவிகிதம் பேர் விவசாயத்தை கைவிட்டுவிட்டு  வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான், வயல்களை விட்டுச்செல்ல மனம் இன்றி முடிந்தவரை பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். விடுமுறைகளுக்கு வந்துபோகும் பிள்ளைகள், பெரியவர்களின் காலத்திற்குப்  பிறகு நிலத்தை என்ன செய்வார்கள்?? பண்ணையாள் வைத்துப் பார்த்து, பின் குத்தகைக்கு விட்டு, இறுதியில் விற்றுவிடும் மனநிலைக்கே வந்து சேர்வார்கள். கரும்புகளைத் துண்டு பண்ணிச் சாப்பிடும் என் பிள்ளைகளின் குழந்தைகள், வரும் காலத்தில் கரும்பை எப்படி உண்பார்கள் ?? கரும்புச்சாறு குடிக்கும் அவர்கள் கரும்பின் நிறம்,அதன் மேல் படர்ந்திருக்கும் வெண்ணிறம் ,கணுக்களில் இருக்கும் கடினத்தன்மை, அடிக்கரும்பிற்க்கும் நுனிக்கரும்பிற்க்கும் உள்ள சுவை வேறுபாடு இவைகளை எல்லாம் எங்கனம் அறிவார்கள் ?!


மொழி உட்பட நம் வாழ்வின் ஊடாகப்  பின்னிக்கிடந்த பல மிக முக்கியமான விஷயங்கள் காலத்தின் முரட்டுப்பாய்ச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, உருமாறி ,காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நம் கண் முன்னே நடக்கும் இம்மாற்றங்களை வலியோடு ஏற்றுக்கொள்ள, மனம் பழகிக் கொள்கிறது. மாற்றங்களை தொடங்கியவர்களே நாம் தானே!!. தோட்டத்தை விட்டுவிட்டு ,பெற்றோர்களை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளோடு நகரத்தில் வந்து இறங்கிய நாளில் தான் அது தொடங்கியது .

                                                 ***************

Thursday, October 24, 2013

வாழ்ந்து கெட்ட வீடு





மின் விசிறிக்கு  நேர் கீழே 
அடம்பிடித்துப் பெற்ற என் படுக்கை 
இனி அங்கில்லை 

இரவு விளக்கின் முனகல் ஒளியில் 
அம்மாவுடன் அளவளாவ வரும் 
சிவசங்கரியும், பாலகுமாரனும் 
இனி ஏமாந்து திரும்புவர் 

குருதியெங்கும் சர்க்கரை ஓடும் அப்பா 
ஒளித்து தின்ற ஜிலேபி ரசம் 
அந்த ஜன்னலோரம் இனி சாட்சியாகாது

ஒருஎழுத்தாளரை உருவாக்கிவிட 
எழுதுகோலோடு போராடும் 
அண்ணனின்  அடையாள மரமேஜை 
பாதிவிலைக்கு வீடு மாறியாயிற்று 

தவறாமல் குளித்து தயாராகும் 
வாசல் திண்ணை அழுக்கேறும் 
அரட்டைக் கச்சேரி அற்று 

ஜல்லிக்கட்டு நாளில் 
திமிரித்திணறும் மொட்டை மாடி இனி 
வடகம் பிழிந்த வடுக்கள் தோறும் 
சொல்லி அழும் 

வர்ணங்கள்  உதிர்த்து 
தன் ரகசியங்கள் காட்டி நிற்கும் 
அவ்வீட்டின் கூரை மேல்
இன்னும்  காத்திருக்கும் காகங்கள் 

***
செ.சுஜாதா.

நன்றி: ஆனந்தவிகடன் 







Saturday, September 28, 2013

மஞ்சள் ப்ஃராக் கடவுளும் நானும்






கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையைத் தளர்த்திக்கொண்டிருந்தது
அந்த நீண்ட தரிசன வரிசை
கட்டப்பட்ட கால்களைக் கைவிட்டு
பிரகாரத்தைச் சுற்றத்தொடங்கின கண்கள்
களவுபோகும் கழுத்துச்சங்கிலிக்கு
கடவுள் பொறுப்பல்ல என்று
அறிவித்தபடி இருந்தது ஒலிப்பெருக்கி
வானில்
வால்நட்சத்திரம் தோன்றிய தருணம் ஒன்றில்
என் முந்தானையைப் பிடித்து இழுத்தார் கடவுள்
பால்ஊறும் கன்னக்குழியில்
என் பார்வையைப் பறித்து அமிழ்த்திவிட்டு
அந்த தோள்களுக்குப் பின்னே மறைந்துகொண்டார்
அவரது உள்ளங்கை தழுவி
இதழ் பதித்த வேளையில்
என் ஊழ் தீர்ந்ததாய் உறுதி சொன்னார்
பின் கடவுளும் நானும் சேர்ந்து சென்று
கற்சிலை ஒன்றைக் கண்டு வந்தோம்

***
செ.சுஜாதா
நன்றி: சொல்வனம்.

Tuesday, September 3, 2013

கண் கூசும் வெயில்




வர்ணஜாலங்கள் காட்டிய 
நீர்க்குமிழிகள் 
வலுவற்று உடைந்து சிதறுகின்றன 

வீடற்ற வெற்று கதவுக்கு
இத்தனை வேலைப்பாடுகள் ஏன்?

நம்பிக்கை உடைசல்கள் மண்டிய 
அவ்இடத்தைவிட்டு விலகி நடக்கிறேன் 

அழுந்த சாயம்பூசிய உதடுகளும் 
வீச்சம் ஒழுகும்
குறிகளும் 
மலக்காடென
வழியெங்கும் சிதறிக்கிடக்கின்றன 

மிதித்துக்கொள்ளாமல் கடக்க 
ப்ரயத்தனங்களை
கால் கட்டைவிரல் நுனியில்
நிறுத்தி இருக்கிறேன் 

கூக்குரலிட்டு அழும் 
மனசாட்சி எனும் மண்ணாங்கட்டியை 
உருட்டி 
குட்டிச்சுவரில் அடித்துவிட்டுத் தொடர்கிறேன் 

மேலும்  
படகுக்குள் துள்ளும் மீனாய் 
சுவாசம் கேட்டுத் தவிக்கும்  
இருப்பு 
எந்தக் கண்ணாடியிலும் பிம்பமாக இல்லை.

பச்சை வாசனை வீசும் 
விரிந்த மரத்தின் வேர்களில் 
என் தலை சாயும் காட்சி
கால்கள் தள்ளாட 
தளர்ந்து சரியும் 
இந்நினைவில் கடைசியாய் நிற்கிறது 

****
செ .சுஜாதா .
நன்றி: நவீனவிருட்சம் .






Friday, August 30, 2013

அத்தனை ஆதூரமாய் என்னை அணைக்கும் இரவு 





என் முகமூடியைக் கழற்றி எறிகிறாய்
நான் நிர்வாணம் தரித்துக்கொள்கிறேன்
என் கூந்தல் கட்டவிழ்க்கிறாய் 
இனி மின்மினிகள் நுழைந்தாடட்டுமென  
அத்தோடு தென்றலையும் கொணர்கிறாய் 
பெரும் அமைதியிழக்கிறேன்

மேலும் தனித்த வனம் தருகிறாய் 
பசியைப் பறித்துக்கொள்கிறாய்

நான்
ஆப்பிள் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டுகிறேன்
இரவே,  
புரவி ஏறி வருகிறான் நிலாக்காதலன்
இனி 
என் பாடு அவன் பாடல்!

*****
செ.சுஜாதா,
நன்றி: உயிரோசை.காம் .

Monday, August 26, 2013

அங்கிருந்த காட்சிப்பிழை




வலிய உன் கரங்கள் 
மேகத்தை உருட்டி இறுக்குகின்றன 

மற்றுமொரு
இரவை
அடிவயிற்றில் எத்தி முடுக்குகிறாய் 

அழுந்தும் உன் ஆள்காட்டி விரலில்
கசியத்தொடங்குகின்றன
நட்சத்திரங்கள் 

கங்காரு நடையின் தோற்றமுடைய
உனது 
இப்பயணத்தில்
சிதைகின்றன
பறவையின் வழித்தடங்கள் 

மருண்டு தேயும் பிறைநிலவை 
நீ நிமிர்ந்து காண எத்தனிக்காதே 

எறும்புகள் ஊரும்
விறைத்த  காட்டு மானின் 
விழிகளை அங்கே நீ காணக்கூடும்

***
செ.சுஜாதா,
நன்றி: நவீனவிருட்சம் .

Friday, August 23, 2013

மழைக்காதலனின் தேசம் அடைந்தப் பாலைவனக்காரி





அவள் இப்பொழுதெல்லாம் அவனை அடிக்கடிப் பார்க்கிறாள். அவன் வரும்போதெல்லாம் அவளுக்குப் பரவசம் தொற்றிக்கொள்ளும். ஜன்னல் திரைச்சீலை விலக்கி அவனை இமை கொட்டாமல் ரசித்துக்கொண்டிருப்பாள். சிலநேரம் துணிந்து வாசல் படிக்கட்டுவரை வந்துப் பார்ப்பாள். அவனின் முதல் தீண்டலின் சிலிர்ப்பை,நெஞ்சுக்குழி வரை நீளும் அவன் அத்துமீறலை அவள் மிகவும் விரும்பினாள். அந்த நாளுக்காக கற்பனையில் உருகி சிரித்துக்கொள்வாள்.

அவளின் மனதை அவன் முழுவதாய் அறிந்திருந்தான். அவள் கண்களின் வரிகளில் அவனுக்கான சேதி இருந்தது. ஒரு சில முறை அவளை வழியில் பார்த்துப் பேச முற்பட்டான். ஆனால் அவள்தான் பதறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி விட்டாள். அவன் பொறுமை இழந்திருந்தான். எத்தனைக் காலம்தான் இப்படி எட்டி நின்று காதல் கொள்வது என்று??

அன்று காலையிலேயே அவன் ஒரு முடிவெடுத்திருந்தான். அவள் வெளியில் செல்லும் நேரம் எப்போது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்று மாலை அவளையும் அவனையும் இணைக்கும் என்று ஒருமுறை சொல்லிக்கொண்டான்,  சின்னதாய் புன்னகைத்துக்கொண்டான்.

அவள் வழக்கம்போல அன்றும் மாலை வெளியே வந்தாள். அவன் வருகிறானா என்று ஒரு முறை திசை எங்கும் பார்வையைச் சுழற்றினாள். அவன் இல்லை, கொஞ்சம் ஆசுவாசம் கொண்டவளாக நடக்கத்தொடங்கினாள். அவனற்ற வீதியில் நடப்பது அவளுக்குப் பாரமாக இருந்தது. வெறுமையை முதுகில் சுமந்துகொண்டு நடப்பது மிக கொடுமை. அவன் வந்திருக்கக்கூடாதா ?  இல்லை இல்லை அவன் வராமல் இருப்பதே நல்லது. மனம் இங்கும் அங்கும் ஊஞ்சல் ஆடியது!!

இப்போது அவன் தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அவளைப் பின்தொடரத் தொடங்கினான். அவள் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. அவன் வருகிறான்.. திரும்பிப்பார்க்காமலே அவன் வருகையை அவள் முதுகில் உணர்ந்தாள். உடலில் குளுமை பரவி, மயிர்கால்கள் சிலிர்த்துக்கொண்டன. 

அவளைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நடையின் வேகத்தைக் கூட்டினாள் . அவனும் வேக வேகமாக நடக்கத்தொடங்கினான். ரோட்டில் ஓடினால் அசிங்கமாக இருக்கும், ஆனாலும் வேறு வழியில்லை. அவள் ஓட்டம் கலந்த நடைக்கு மாறியிருந்தாள். ம்ம்..வேகம் கூட்டக் கூட்ட அவனும் வெறிகொண்டான். இன்று அவளை அடைந்தே தீருவது என்ற விளிம்பிற்கு அவன் வந்திருந்தான்.

அவள் பதறி ஓடிக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தோடு துரத்திக்கொண்டிருந்தான். அவனின் மூச்சுக்காற்று அவள் புறங்கழுத்தை சில்லென்று தொட்டது. அவள் கால்கள் தளர்ந்தன.. இதயம் குழையத்தொடங்கவும் ஓட்டத்தின் தாளம் மாறிஇருந்தது . ஓடுவதைப் போல் பாசாங்குச் செய்தபடி அவள் நடக்கத்தொடங்கி இருந்தாள்.

அவள் முதுகுப்புறம் மொத்தமும் அவன் பரவத்தொடங்கியிருந்தான்.
அவன் முத்தத்தின் ஈரத்தில் அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொள்ளத் தொடங்கினாள் .இவ்வாறாக அந்த மழைக்காதலனின் தேசம் அடைந்தாள் அந்தப் பாலைவனக்காரி.

செ.சுஜாதா.

Tuesday, August 20, 2013

கண்ணாடி மீன்கள்




கொஞ்சம் இமைகளை இலகுவாக்கு 

பெண்ணின் முதுகுத்தண்டாய் சரிந்து இறங்கும்
இந்த ஒற்றையடிப்பாதை
அழகிய தாமரைத் தடாகத்திற்கு
உன்னை அழைத்துச்செல்லும்

கொழுத்த செந்நாரைகள்
நீந்தப்பழகும் கண்ணாடி மீன்களை
தின்று திளைத்தபடி இருக்கின்றன

கண்டுகளிக்கலாம்
முடிந்தால்
உன் தூண்டிலையும் உடன் எடுத்து வா

ஆளற்ற வீட்டின்முன்
எத்தனைநேரம் தான் வெறித்திருப்பாய்

****
செ .சுஜாதா.
நன்றி: நவீன விருட்சம்.

கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து புள்ளியாகியத் தருணம்





பயணங்கள் என்றும் சுகமானது. ஒரு புத்தகம் நமக்குத் தரும் அத்தனை அனுபவத்தையும், அறிதலையும் ஒரு பயணம் நமக்கு கற்றுத்தரும். என்னஒன்று நம் கண்களையும், மனதையும் திறந்துவைத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.

பயணத்தை விரும்பாத மனிதர் உண்டா? ஜன்னலோர சீட்டுக்கு அடித்துக்கொள்ளாமல் பால்யத்தைக் கடந்துவிடுதல் சாத்தியமா? எனக்கு பயணங்கள் மிகப்பிடிக்கும். ஆனாலும் நான் எப்போதும் துணையுடனேயே பயணிக்கிறேன். அப்பா, அண்ணன், அக்கா, கணவர் என்று யாரேனும் என் பயணத்தைப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். தனித்த பயணம் எனக்கு வாய்ப்பது மிகமிக அரிது. பலவருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் நான் தனியாகப் பயணித்தேன்.

முன்பதிவு செய்யப்படாத பாசஞ்சர் ரயில்.. மூட்டை முடிச்சுக்களோடு அரட்டை அடித்தபடி பிளாட்பாரத்தில் அமர்ந்திருக்கும் எளிய மக்கள். பாசஞ்செரில் எப்போதும் கூட்டம் முண்டியடிக்கும். பலவருடங்களுக்குப் பிறகு அதே ரயில் பயணம். அதே திருவிழாக்கூட்டம். மூச்சிரைக்க ஓடிவரும் தாய்நாயைப்போல ரயில் வந்துசேரவும் நாங்களெல்லாம் முலைதேடி முண்டும் குட்டி நாய்களென ரயில்பெட்டியின் வாசல் தேடி ஓடினோம். ஏற்கெனவே நிற்க இடமின்றி நிரம்பி இருந்த கூட்டத்தில் நாங்களும் நுழைந்து ஐக்கியமானோம். நான் இருந்த பெட்டி முழுவதும் முஸ்லிம் பெண்கள் நிறைந்து இருந்தார்கள்.. வழியில் ஒரு தர்க்கா இருப்பதாகவும் அவர்கள் அங்கு இறங்கியவுடன் உட்கார இடம்கிடைத்துவிடும் என்று வழியனுப்ப வந்த கணவர் சமாதானம் சொன்னார்.

நேரம் குறைவு, அலைச்சல் குறைவு, வீட்டுவாசலிலேயே சென்று இறங்கிவிடலாம் என்று ஒரு கார் பயணத்தில் நிறைய வசதிகள் உண்டு என்றபோதும்  மக்களோடு மக்களாக செல்லும்போது பயணம் தரும் அனுபவம் பெரியது. தொட்டிமீனுக்கும் , ஆற்றுமீனுக்கும் உள்ள அனுபவ வித்தியாசம் அது என்று சொல்லலாம்.

ரயிலில் ஏறியாகிவிட்டது. நகரத்தொடங்கிவிட்ட ரயிலில் ஏறக்குறைய அனைவரும் தாங்கள் உட்கார்வதற்கு இடத்தை தேடிக்கொண்டுவிட்டனர். எல்லோரும் கீழேயே பாய் விரித்தோ, செய்தித்தாள் விரித்தோ, அல்லது எதுவும் இல்லாமலோ அப்படியே உட்கார்ந்து அரட்டையைத் தொடங்கிவிட்டிருந்தனர். நான் மட்டும் நின்றுகொண்டிருந்தேன்.
 கல்வி மூலம் நம் அறிவை செம்மை படுத்திக்கொள்கிறோமோ  இல்லையோ,முதலில் நாகரீகத்தை கற்றுக்கொண்டு விடுகிறோம். நமக்கு உணவளிக்கும் இந்த மண் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் எந்தக் கையில் கத்தி , எந்தக் கையில் முள்கரண்டி பிடித்து உண்ணவேண்டும் என்று நன்றாக அறிந்துவைத்திருக்கிறோம். நம் கழுத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும் இந்த நாகரீக கயிறு  நம்மை அதன் வட்டம் தாண்டி இயங்கவிடுவதில்லை. அதே கயிறுதான் என்னை எல்லோரோடும் கீழே அமரவிடாமல் செய்தது. நான் நின்றுகொண்டே இருந்தேன், கிரி என்றொரு பையன் எழுந்து எனக்கு இடம் கொடுக்கும் வரை.  

ரயில் நகரத் தொடங்கிய அடுத்த அரைமணி நேரத்தில் அந்த முஸ்லிம் பெண்கள் அந்த ரயில்பெட்டியை தங்கள் வீடாக மாற்றத்தொடங்கியிருந்தனர். ரகசியங்கள் மேல் எப்போதும் நமக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. நாம் அறிந்திடாத விஷயங்கள், நமக்கு மறுக்கப்பட்ட விஷயங்கள் எப்போதும் நம் ஆர்வத்தை தூண்டுவதாய் இருக்கின்றன. அப்படித்தான் அந்தப் பெண்கள் தங்கள் தலையில் சுற்றியிருந்த முக்காட்டை கழற்றி வைத்தபோது எனக்கு மிகுந்த பரவசமாக இருந்தது. அவர்கள் அத்தனைபேர் முகமும் வேறாக தெரிந்தது. அவர்கள் கூந்தல் கலைத்து, காது மடல் தீண்டி, புறங்கழுத்தை குறுகுறுக்கச்செய்த அந்தக் காற்றும் பரவசப்பட்டிருக்கக்கூடும்.

அவர்கள் வேறுமொழி பேசிக்கொண்டிருந்தனர். கன்னடமும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பெண்கள் கூட்டத்தில் அமர்ந்திருக்க அசௌகர்யப்பட்டு, தன் இடத்தை எனக்குத் தந்துவிட்டுப்போன அந்த கிரி என்கிற பையனும்  தன் தமிழை தன்னோடு கொண்டு சென்றுவிட்டான். நான் என் தமிழோடு தனியானேன்.
தடதடத்து ஓடும் ரயில், முகம்உரசி முத்தமிடும் காற்று, ஜன்னலோர ஒற்றை இருக்கை இதைவிட ஏகாந்தமானத் தருணம் வாய்க்குமா? நான் ஹெட்போனை காதுகளில் பொருத்திக்கொண்டேன். “...பேசக்கூடாது.... வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை” என்று SPB என்னை சமாதானம் செய்யத்தொடங்கினார்..

அந்தபெண்கள் கூட்டத்தில் இருவர் மிக இளம் பெண்கள்.இருவரும்  திருமணம் ஆனவர்கள். குழந்தைமையை  இன்னும் கை நழுவவிடாத அந்த இருவரும் எனக்கு எதிரில் ஒற்றை இருக்கையில் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வழி நெடுக பின்னோக்கி நகரும் இயற்கை காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தபடி வந்தனர். குதூகலமும்,மகிழ்ச்சியும் அவர்களை சுற்றி ஒரு பறவையைப் போல சிறகடித்துக்கொண்டிருந்தது. அந்த இருவரில் ஒரு பெண் ஏன் என் கண்களை சந்திக்கும்போதெல்லாம் மின்னல் போன்ற ஒரு புன்னகையை வீசுகிறாள்?! அவள் கண்களில் கொப்புளிக்கும் ஒளியின் வீச்சை அவள் அறிவாளா? அந்த ஒளியில் என் தொலைந்த பால்யத்தை அவள் நினைவூட்டுகிறாள் என்று அவளிடம் எப்படித் தெரிவிப்பது??..மின்மினிப்பூச்சியாய் உன் ஆயுள் உள்ளவரை நீ ஒளிர்ந்திருக்கவேண்டும் பெண்ணே!!.என் மனம் ஒரு முறை விம்மி அமிழ்ந்தது.
 கடலுக்கடியில் ஒளிந்திருக்கும் அற்புத உலகத்தை கண்ணாடித் தடுப்புக்குள் நின்று ரசிப்பதைப் போல அந்தப் பயணத்தின் குதூகலங்களை நான் வெறும் பார்வையாளனாக ரசித்துக்கொண்டிருந்தேன். நீருக்குள் சீறிப்பாய என்னால் இயலாது, நான் நீந்த மறந்து வருடங்கள் ஆகிறது.

ரயில் ஓமலூரை தாண்டுகையில் அந்த பட்டாம்பூச்சிப் பெண் 'குடிக்கத் தண்ணீர் இருக்கா?' என்று என்னைக் கேட்டாள். இருக்கு, ஆனா நான் வாய்வைத்து குடிச்சுட்டேன், எச்சில் ஆகிடுச்சு என்பதை கிட்டத்தட்ட ஒரு நாட்டியமே ஆடி விளக்கிச் சொன்னேன். அவள் புன்னகைத்தபடி பரவாயில்லை கொடுங்கள் என்று சைகை செய்தாள். தண்ணீர் பாட்டிலின் வாய் பகுதியை என் துப்பட்டாவால் நன்றாக துடைத்துவிட்டு அவளிடம் தந்தேன். ஓடையில், தன் கூட்டத்தோடு நீர் அருந்தும் காட்டு மானின் பாவனையை ஒத்ததாய் இருந்தது அவள் நீர் அருந்திய அழகு. நான் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து ஒரு புள்ளியாகிக்கொண்டிருந்தேன்..

பயணங்கள் இனிமையானது...

***


Saturday, August 3, 2013

கட்டமைப்பின் இசைவு






அறுந்து விழுதலின் சாத்தியங்கள் உரைக்கும் 
அந்தப் புராதன பாலத்தின் கிரீச் ஒலி தொட்டு 
உறைந்த என் ஐம்புலன்கள்
பயணத்தின் பாதைதோறும் கிடக்கின்றன 

துள்ளிச்சரியும் தூரத்து சிற்றருவி
தன் கூதல் ஒலி நீட்டி 
கன்னத்து ரோமத்தை நெருடுகிறது 

நீண்டு நெளியும் 
ஓர் புராதன தொங்குப் பாலத்தில் 
நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்

புணர்தலை கலையாக்க முயலும் 
ஊமைக்கலைஞனின் உளிப்பேச்சு
அப்பாறையெங்கும் சரிந்து அசைகிறது 

முக்கி முக்கி
களைத்த தாய் மீன்கள் 
கொஞ்சம் சூரியனை பருகவெண்ணி
கூழாங்கல் ஏறுகின்றன 

கூட்டு நடனம் ஒன்றை 
இயற்றிக்காட்டியபடி பறவைக்கூட்டம் விண் வென்று 
கரையேகுகின்றன 

****
நன்றி: கீற்று இணைய இதழ் 


Friday, July 26, 2013

நந்தினியின் அப்பா






அந்த நீண்ட வீட்டின் முன்திண்ணையில் கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள் நந்தினி. சாப்பிட்டுக் கை கழுவிய ஈரம் கையில் இன்னும் இருந்தது.
பாவாடையில் அழுந்த கைகளைத் துடைத்துக்கொண்டாள். கைகளில் புளிச்சைக் கீரை வாசம். இனி ரெண்டு நாளைக்கு  இதே கீரையைச்  சூடுபண்ணி போடுவாள் அம்மா . சோற்றில் கொஞ்சம் மோர் விட்டுக் கரைத்து அப்படியே கிண்ணியோடு சாய்த்துக்  குடித்துவிட்டுத் தோட்டத்துக்கு கிளம்பிவிடுவாள் அம்மா. அம்மா, சின்ன வயசில் அப்படி ஒரு சாப்பாட்டுப்  பிரியையாம்.

"இப்படித் தட்டு வழிய சோறு போட்டுகிட்டுத் திண்ணைல உக்காந்துச் சாப்பிடாத , பாக்கறவங்க கண்ணு வைக்கபோறாங்க "ன்னு பாட்டி அடிக்கடி  சொல்லுவாங்களாம்.
ஏதாவது தப்பு பண்ணி,பாட்டி அடிச்சுட்டாக் கூட உக்காந்து நல்லா அழுதுட்டு, கண்ண தொடச்சுக்கிட்டுப் போய் சோறு போட்டு சாப்பிட்டுவாளாம். 'என் மகள்  நீ, என்னடான்னா கோபத்த முதல்ல சாப்பாட்டுலத் தான் காட்டுற' என்று நந்தினியிடம் அம்மா எப்பவும் அலுத்துக்கொள்வாள்.

அம்மா, ஒழுங்காச் சமைச்சு ஒரு வாரம் ஆச்சு. ஒருவீட்டின் உயிர்ப்பு, சமையல்கட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது. காலையில் எழுந்து காபிக்கு அடுப்பை பற்றவைக்கும்போது தான் அந்த வீடு மூச்சுவிடத் தொடங்குகிறது. நம்மோடு சேர்ந்து அதுவும் பரபரப்புக் கொள்கிறது. நாம் புத்தாடை அணிந்தால் அதற்கும் பொலிவு கூடுகிறது. நாம் அழுதபடி இருந்தால் அதுவும் மூக்குச் சிந்துகிறது.

நந்தினி வீட்டைக் கவனியுங்கள் அதுஅழுக்கேறி இருக்கிறது. கெட்ட வாடை வீசுகிறது. உற்றுக் கவனித்தால் அது லேசாகத்  தள்ளாடுவதையும் அறியமுடியும். அவள் வீடு தன் இயல்பைத் தொலைத்துத்  தடுமாறிக்கொண்டிருந்தது.

யாரோ ஒருவர் வாசலில் வந்து நின்று,  " அப்பா இல்லையா பாப்பா?"என்றார்.  நந்தினி உள்ளே எட்டிப் பார்த்து , "அம்மா ..யாரோ கூப்பிடுறாங்க .."என்று சத்தமாகச் சொல்லிவிட்டு வந்திருந்தவரை ஒருமுறை பார்த்துவிட்டு தன் கை விரல்களை ஆராயத்தொடங்கினாள். அந்தக் கைவிரல்கள் அவளை அழைத்துக்கொண்டு அவள் அப்பாவிடம் சென்றது.."அப்பா"... நினைக்கும்போதே மனம் கனிந்துபோனது. அப்பா எப்போதும் நந்தினியின் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதித்துக்கொண்டு தான் பேசுவார்.சாயங்கால வேளையில் தவறாமல் மசால் வடை,போண்டா என்று ஏதாவது வாங்கிவந்து அவள் தின்று முடிக்கும் வரை அருகிலேயே அமர்ந்திருப்பார். மேலும் அதுஎவ்வாறு  சுடச் சுட தயாரிக்கப்பட்டது என்பதையும் பூரிப்போடு சொல்லிக்கொண்டிருப்பார். அவருக்கு நந்தினி என்றால் உயிர். 

நந்தினியோடு 6ம் வகுப்பு படிக்கும் தோழிகள் எல்லாம் வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என்று வீட்டு  வேலை செய்யத்தொடங்கி இருந்தனர்.அதை அவர்கள் பெரியமனுசி ஆகிவிட்ட தோரணையில் சொல்லத்தொடங்கவும் நந்தினிக்கும் ஆசையாய் இருந்தது. அம்மாவிடம் நச்சரித்துப் பாத்திரம் துலக்க அனுமதி வாங்கி விட்டாள். தட்டுத் தடுமாறி அவள் இரண்டாவது பாத்திரத்தை கழுவிக்கொண்டிருக்கும் போதே

'கண்ணு' ...?!!இங்க என்ன பண்ற? 

'பாத்ரம் கழுவறயா ? உங்க அம்மா எங்க போனா'?

'மொதல்ல கையக் கழுவிக்கிட்டு எழுந்திரி' ..

'பச்சப் புள்ளைய வேல செய்ய உட்டிருக்காப் பாரு' ..

'நீ ஏம்மா இந்த வேலையெல்லாம் பாக்குற?'  என்று அலுத்தபடி தன் மேல் துண்டால் அவள் கைகளின் ஈரத்தை அப்பா  துடைத்துவிட்டார்.

'அம்மா ஒண்ணும் சொல்லல.. எனக்குத்தான் ஆசையா இருந்துச்சுப்பா'. என் பிரண்ட்ஸ் எல்லாம் வீட்டு வேலை செய்யறாங்க தெரியுமா? நானும் கத்துக்கறேன்பா...' நந்தினி சிணுங்கிகொண்டிருக்க அவருக்குப் பெருமை.

'போகப் போகக் கத்துக்கலாம்மா ..பாரு பிஞ்சுக் கையி ..பாத்திரம் கழுவினா என்னத்துக்கு ஆகறது'?? கைகளை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டார்.அவர் அப்படிதான், தன் சந்தோசம், துக்கம் யாவற்றையும் தன் மகளின் கைகளில் கொண்டு சேர்த்துவிடவே விரும்புவார்.அந்தப் பிஞ்சுக் கைகளில் தன் தாய் மடியின் வெம்மையை அவர் அறிந்திருந்தார். அவள் கைகளில் முகம் ஒற்றி நிமிரும் ஒவ்வொரு முறையும் அவர் கண்களில் ஈரம் படர்ந்திருப்பதைத் தவறாமல் பார்க்கமுடியும்.

 பஞ்சாயத்துகளில் அவர் பேசத் தொடங்கினால் யாரும் மறுபேச்சுப் பேசமாட்டார்கள். அவர் பேச்சு அத்தனை கம்பீரமாக, நியாயமாக இருக்கும். ரொம்பக் கோபக்காரர் . அவரின் இந்த மென்மையான மறுபக்கம் ரொம்பவும் ஆச்சர்யம் தான்.

அவர் கையும் அப்படித் தான் ஒருஆணின் கைகள் போல் அல்லாமல் மிக மென்மையாக இருக்கும்.. நந்தினி , 'அம்மா... உங்க கை தான் சொரசொரன்னு இருக்கு, அப்பா கையப் பாருமா எவ்ளோ பஞ்சாட்டம் இருக்கு' என்று வியந்துக் கூறினாள்.

'ஆமாம்.. காடு கரையில எறங்கி வேல பாத்தா  தானே கையி சொரசொரங்கும் . வேலயாளுங்கள ஏவி உட்டுட்டு மைனரு வரப்புலேயே சுத்திவந்தா கையி பின்ன எப்படி இருக்கும்?ஊட்டுக்கு மொதப் பிள்ளைனு உங்க ஆயா ஒரேயடியாச் செல்லம் குடுத்து வளர்த்திருக்கு' - அம்மா அலுத்துக்கொண்டாலும் கூடவே ஒரு பெருமை இழையோடும்.

'தலைவர் இல்லீங்களா ?'  வந்து நின்றிருந்த ஆள் மீண்டும் குரல் கொடுக்க  நந்தினி சுயநினைவுக்கு வந்தாள். மறுபடி அம்மாவைக் கூப்பிட அவள் உள்ளே எட்டிப் பார்க்கவும் அம்மா கூடையோடு வெளியே வரவும் சரியாக இருந்தது.

'சோளசோத்தார் வீட்ல அப்பனுக்கும், மவனுக்கும் தகராறு  .. 

பஞ்சாயத்து வச்சுதான் தீரும் போல'..

'அதான் அய்யாவக் கேட்டுவரசொன்னாங்க' ..வந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

கிராமங்களில் தான்  இந்த மாதிரி விசித்திரமான பட்டைப் பெயர்களைக் கேட்கமுடியும்.  சோளசோத்தார் , செம்மூஞ்சி, கூலமுத்து, காக்கா முடிக்கி என்று சுவாரஸ்யமான பட்டை பெயர்கள் உண்டு. அவர்களின் நிஜப் பெயர்கள் மறைந்துபோய் பட்டைப் பெயர்களே நிலைத்துவிடும். வந்திருந்தவருக்குச் சோளசோத்தாரின் நிஜப்பெயர் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது.

"உங்க தலைவரு ஒரு நிலையில இல்ல.நேத்தே மலை ஏறியாச்சு.
அங்க கடைகிட்ட விழுந்துக் கிடந்து அறிவு தான் கூட்டியாந்து விட்டுட்டுப்  போனான்"  அம்மா சாதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இதெல்லாம் பழகி விட்டிருந்தது.அவள் தன் துக்கத்தை அடுத்தவர்களிடம் மறைக்க பழகிக்கொண்டாள் .தோட்டத்து வரப்புகளில் மௌனமாய் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள் அறியும் அவள் கண்ணீரை, மண்ணை கொத்தி விதையை இட்டு மூடும்போதே தன் கண்ணீரையும் அதனுள் இட்டு விதைத்து விடுவாள்.

"நேத்துக் காலைல பாத்தேன் நல்லா தானே இருந்தாரு.நாலஞ்சு மாசமா விட்டிருந்தாரு.. மறுக்க ஆரம்பிச்சுட்டாரே."

'சரிமா ..நான் சொல்லிடறேன்' ,வந்தவர் சங்கடத்துடன் கிளம்பத்தொடங்கவும்,

'வேணும்னா சின்னப் பண்ணைகாரக் கூப்பிட்டுப் பாரு'. பேச்சுக்குச்  சொல்லிவைத்தாள் . அவளுக்குத் தெரியும் தன் கணவன் தெளிந்து வரும்வரை அவர்கள் காத்திருப்பார்கள் என்று. மூன்று, நான்கு மாதத்திற்கு ஒருமுறை இப்படிப் போதையில் விழுந்து ஒரு வாரம், பத்துநாள் கழித்து மீண்டு வரும் அவரின் மேல் இந்த ஊர் மக்கள் வைத்த நம்பிக்கையைஒருநாளும் குறைத்துக்கொண்டதே இல்லை. 

'வீட்ட பாத்துக்கப் பாப்பா ..நான் தோட்டத்துக்குப் போயிட்டு வந்துடறேன். அப்பா வந்தா சோறு போடு' . அம்மா போய்விட்டாள். இன்று குச்சிக்காடு களை வெட்டு. பொழுது சாயத்தான் வருவாள்.

நந்தினியின் மனம் மீண்டும் அப்பாவிடம் சென்றது. முன்பொருமுறை இப்படிதான் அப்பா ஒரு வாரமாய் நல்ல குடி .
அப்போது பள்ளியில் வகுப்புத் தொடங்கி இரண்டாவது பீரியட் நடந்துகொண்டிருந்தது.ப்யூன் வந்து நந்தினியைத் தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாகச் சொன்னார் . 

ஐயோ...நான் ஒரு தப்பும் பண்ணலையே !! எதுக்குக் கூப்பிடறாங்க ??

பள்ளிக்குப் பின்னால் ஒரு சிறு ஓடை இருக்கிறது.ஓடை என்றால் நீர் சலசலத்து ஓடும் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.முன்னொரு காலத்தில் அங்கு நீர் புரண்டு ஓடியதற்கானச் சாட்சியாக மட்டுமே அந்த ஓடை இருந்தது. அந்த ஓடையில் கொஞ்ச தூரம் போனால் ஒரு பெரிய மரம் இருக்கும். அதுஎன்ன மரம் என்றெல்லாம் தெரியாது. பள்ளிப் பிள்ளைகள் அந்த மரத்தடி வரை சென்று விளையாடுவது வழக்கம். சரவணன் சரியான அறுந்த வால். நேற்று பள்ளி முடிந்துக் கிளம்பும் நேரம் அந்த மரத்தடியில் ஒரு சிறு கூட்டத்தைக்  கூட்டி  இருந்தான் அவன். நந்தினியும் என்ன என்று பார்க்கும் ஆவலில் அந்தக் கூட்டத்திற்குள் எட்டிப்பார்த்தாள். அவன் ஒருஓணானை சிறு குச்சியால் அழுத்திப்  பிடித்துக்கொண்டு அதன் வாலை கையால் பிடித்திருந்தான். அதை என்ன பாடுபடுத்தினானோ அது துவண்டுபோய் அரை மயக்கத்தில் இருந்தது. இப்போது அவன் குச்சியை ஓணானின் கழுத்திலிருந்து லேசாக அழுத்தியவாறே கீழ் நோக்கி நகர்த்தவும்  வெள்ளையாய் ஒரு முட்டை வெளியே வந்து விழுந்தது. கூடி இருந்த அத்தனை பிள்ளைகளின் கண்களும் பெரும் ஆச்சர்யத்தில் விரிந்தன. 'ஐயோ ..பாவம்டா விட்டுடுடா' என்று பாதிப்பேரும் ,  'மறுபடி நசுக்குடா முட்டை வருதானுப் பாப்போம்'  என்று ஆவலாய் பாதிப்பேரும் சத்தம் போட்டுக்கொண்டிருக்க ப்யூன் அண்ணன் வந்து கத்தத்தொடங்கினார்.

'ஸ்கூல் விட்டு எவ்ளோ நேரமாச்சு இன்னும் இங்க என்னடாப் பண்றீங்க'??

'உங்களக் காணோம்னு வீட்லர்ந்து ஆள் வரதுக்கா'??

'டேய் சரவணா..நீதான் கூட்டம் கூட்டி வச்சிருக்கியா'?

'இருங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்.. ஓடுங்கடா வீட்டுக்கு'.. ப்யூன் துரத்திவிடவும் எல்லோரும் ஸ்கூலுக்கு ஓடி பையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினர்.

ஒருவேளை அதற்குதான் தலைமை ஆசிரியர் கூப்பிடறாரோ?? அப்படினா சரவணனத் தானே முதல்ல கூப்பிடனும்?!! நந்தினிக்குக் குழப்பமாக இருந்தது.நந்தினி யோசனையோடு ப்யூன் பின்னால் நடந்துகொண்டிருந்தாள். தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பு இருந்த இலவமரத்தின் கீழ் அப்பா நிற்பதை நந்தினி தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள். தலைமை ஆசிரியர் அப்பாவிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் அப்பாவை நெருங்கவும் அவரின் அழுக்கேறிய சட்டையும், வறண்டுக் கலைந்த தலைமயிரும் அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது. 

'இதோ உங்க பொண்ணு வந்துடுச்சுங்க' ..

'நந்தினி.. அப்பாவ வீட்ல விட்டுட்டு வாம்மா '

தலைமை ஆசிரியர் குரலில் அசௌகர்யம் சேர்ந்திருந்தது.

தலைமை  ஆசிரியருக்கு அப்பாவுடன் நல்ல பழக்கம். அவருக்கு வேறு ஊர். தினமும் பஸ்சில் தான் ஸ்கூல்க்கு வருகிறார். நந்தினியை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வரும்போது தான் அவருடன் அப்பாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. நந்தினி பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அப்பா எல்லா ஆசிரியர்களுக்கும் டீ பார்ட்டி கொடுத்தார். அன்று டீயுடன் சாப்பிட்ட ஏலக்காய் பிஸ்கட் ரொம்பவும் வாசனையாக இருந்ததாக ப்யூன் அண்ணன் அடிக்கடி சொல்லும். 

அப்பா நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார். நந்தினி எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அப்பா கையைத் தன் கையோடு கோர்த்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள். 

'ஏன்பா ,வீட்ல அம்மா இல்லையா ?'  

'இல்ல கண்ணு'.. உங்கம்மா காட்டுக்குப் போய்ட்டா..நான் உன்னப் பாக்கலாம்னு வந்தேன்'..

'சாப்டீங்கலாப்பா ?..தள்ளாடி ரோட்டின் ஓரத்திற்கு நகரும் அவரை இழுத்துப்  பிடித்தபடி நடந்துகொண்டிருந்த அவள் மிக இயல்பாய் பேசியபடி நடந்துகொண்டிருந்தாள். தெருவின் இருபுறமும் இருந்த வீடுகளில் இருந்து ஒன்றிரண்டு பேர் இவர்களைப்  பார்த்துக்கொண்டிருந்தனர். நந்தினி தன் பேச்சிலே பாதை அமைத்து,அதில் அவரை நடத்திக்கொண்டு போனாள் . வீடு பூட்டி இருந்தது. சாவியை அந்த ஜன்னலில் வைப்பது தான் வழக்கம். நந்தினி ஜன்னலில் கைவிட்டுப் பார்த்தாள். சாவி இருந்தது.

இந்நேரம் மூன்றாவது பீரியட் முடிந்திருக்கும். அப்பா பாதிச் சாப்பிட்டு, பாதிச் சிந்திவைத்த சாப்பாட்டைத் தட்டோடு எடுத்துசென்று பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு  வந்தாள். அப்பா கட்டிலில் சரிந்திருந்தார். நந்தினி கதவைப் பூட்டிச் சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு, பள்ளி நோக்கி ஓடினாள்.

"நந்தினி விளையாட வரியா?" வாசலில் மலர் நின்றுகொண்டிருந்தாள். நந்தினி மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். ஓ ! இன்று சனிக்கிழமை.. சனி , ஞாயிறுகளில் நந்தினி பள்ளித் தோழிகளைச் சேர்த்துக்கொண்டு விளையாடக் கிளம்பிவிடுவாள். வடக்கே பள்ளிக்கூடத்திலிருந்து தெற்கே சுடுகாடு வரை அவர்கள் எல்லை. சுடுகாட்டுக்கு அருகில் விளையாடுவது கொஞ்சம் பயம் தான் என்றபோதும், சுடுகாட்டை ஒட்டித்தான் கவிதாவின் தோட்டம் இருக்கிறது. அங்குப் போனால் கொய்யா மரத்தில் ஏறி விளையாடலாம். புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருக்கிறார்கள். உனக்குப் பத்து தடவை, எனக்குப் பத்து தடவை என்று முறை போட்டுக்கொண்டு எல்லோரும் ஊஞ்சல் ஆடலாம் . சமயத்தில் கவிதா அப்பா இருந்தால் இளநி கூட வெட்டித் தருவார். ஆக, விளையாடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து சுடுகாடு வரை சென்றாயிற்று. அங்குக் கிடந்த மாலை, உடைந்த சட்டி இத்யாதிகளைக் கிளறிப்பார்த்துவிட்டு வந்தது அவர்களின்  உச்சபட்சத் தைரியத்திற்குத் சான்றாக இருக்கிறது. 

மற்ற நாளாக இருந்தால் நந்தினி தான் முதலில் விளையாடக் கிளம்புவாள். இன்று நிலை வேறாக இருப்பதால் 

'நான் வரல மலர்.. அப்பா வருவாங்க'

'நாளைக்கு வரேன் '...அவள் குரல் அவளுக்கே பரிதாபமாக இருந்தது.

மலருக்கும் தெரியும் அவள் வரமாட்டாள் என்று. இருந்தாலும் அவளைக் கூப்பிடாமல் செல்ல மனமின்றி வந்திருந்தாள். 

'சரி அப்போ நாளைக்குக் கண்டிப்பா வரணும்' சொல்லிவிட்டு அவள் ஓடிவிட்டாள்  

நந்தினி மீண்டும் தனியானாள். அவள்  ரோட்டை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்பா எப்போதான் குடியை நிறுத்துவாரோ?அவள் கவலையுடன் தன் கைகளைப் பார்த்துவிட்டு நிமிரவும் அப்பா வாசலில் வந்து நின்றார். வாசலில் இருந்து இரண்டு படி ஏறி தான் திண்ணைக்கு வரவேண்டும். அவர் படியேற முடியாமல் தடுமாறவும் நந்தினி அவர் கையைப் பிடிக்கலாம் என எழுந்துப் போனாள். அவரின் அழுக்கேறிய வெள்ளை வேட்டி செத்து விழும் ஒரு பிராணி போல அவர் இடுப்பிலிருந்து நழுவிச்சரிந்து தரையில் விழுந்தது. முதல் படிக்கட்டில் அப்பாவின் முகத்திற்கு நேரே நின்றிருந்த நந்தினி தன் பிஞ்சுக் கையை விசிறி அவரின் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை  விட்டாள் .படீர் என்ற அந்தச் சத்தத்தில் அவள்  வீடு விதிர்விதிர்த்து நிமிர்ந்தது. 


செ .சுஜாதா.                                                                
நன்றி: கல்கி வார இதழ் (7.7.2013)