Monday, October 1, 2018

கை கால்கள் துவண்டு சரிகின்றன
உடல் மெலிந்து வெளிற்கிறது
உயிர் தேம்பித்தவிக்கிறது
மனம் மூர்க்கம் கொண்ட பேரலையென அடித்துப்புரள்கிறது
உறக்கம் கண்களைக் கைவிட்டு காணாமல் போகிறது
பசித்த வயிறு உணவை விஷமென மறுக்கிறது
உலகம் ஒற்றை உயிரை மட்டுமே ஏந்திக்கொண்டு சுழல்கிறது
நெற்றிப்பொட்டில் முளைத்திருக்கும் மூன்றாம் கண்ணில் ஒரே ரூபம் நிலைத்திருக்கிறது
ஒலிகளின் மூச்சை நிறுத்திவிட்டு
மனம் கூடு நெய்துகொண்டு உறையத் தவிக்கிறது
சொற்கள் மொத்தத்தையும் பொழிந்து தீர்க்கவும், கண்ணீரை மட்டுமே சொற்களாக்கவும் இருவேறு எல்லைகள் அழைக்கின்றன
திசை தொலைத்த பறவையென மனம் தொலைதூரம் பறந்து களைத்து திரும்புகின்றது
கானகத்தில் பிணையலிடும் சர்ப்பங்களென காதலும் காமமும்
பின்னலிட்டு எழுந்து ஆடுகின்றன.