Wednesday, April 22, 2015





இன்று தான் அதைப் பார்த்தேன். ஓவியத்தில் தவறி விழுந்த ஒரு சிறு தீற்றல் போல , தூரத்து மலைச்சரிவில் வழிந்து இறங்கும் சிற்றோடைப் போல , முன் தலையில் சரிந்து விழும் ஒற்றை வெண் மயிர். ஒரே நொடியில் கண்ணாடியில் என் பிம்பம் மறைந்து என் தாயின் , பாட்டியின் முகம் தோன்றி மறைகிறது . பின் சட்டென்று காலம் பின்னோக்கி ஓடி ரிப்பன் இறுக்கிக் கட்டப்பட்ட ரெட்டை ஜடைக்காரியின் பிம்பம். மலை உச்சி விளிம்பில் நிற்கும் ஒற்றை மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன். ஊஞ்சல் முன்னோக்கிப் போகையில் கால் கூசிச் சிலிர்க்கிறது ,கீழே ஊன்ற நிலமில்லா பள்ளத்தாக்கு. ஊஞ்சல் பின்னோக்கி வருகையில் நிலம் கண்ட நிம்மதி ஆசுவசிக்கிறது.
இப்போது பார்த்தேனே ! எங்கே அதற்குள் ஓடி மறைந்தது அது ?! வியப்பும் பதற்றமுமாக விரல்கள் கூந்தலுக்குள் அலைபாய்கின்றன. என்ன இது கண்ணாமூச்சி விளையாட்டு? என் முதுமைக்கான வருகைசீட்டு ஒரு குறும்புக்கார குழந்தைபோல ஒளிந்து விளையாடுகிறதே! இதோ பிடித்துவிட்டேன். பாதி நிறம் மாறிய ஒற்றை மயிர். மீனாக மாறிக்கொண்டிருந்தவளை பாதியில் கண்டுவிட்டது போன்ற திகைப்பும் ,எழுச்சியும் எனக்கு. மெல்லிதாகப் புன்னகைக்கிறேன் , துள்ளும் முதுமை!! ஹா ஹா .
இந்தக் கண்ணாடி இத்தனை ஞானம் பெற்றது எப்போது ?! கொஞ்சமும் உணர்ச்சி கலவாமல் , சலனமற்று காலத்தை கண்முன்னே காட்டுகிறதே ?! உன்னைவிட உண்மையானவர் யார் இங்கே ? நீ என் செல்லம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? ஒரு நரைமுடியை பிடுங்கினால் நிறைய முளைக்கும் எனச் சொல்வார்களே அப்படியா ? இயற்கைக்கு எதிராக நாம் இயங்க முயன்றால் அது வெகுண்டெழுந்து நம்மை தாக்கி வெல்லும் என்பது போலவா ? அந்த ஒற்றை முடியை நான் ஏற்றுக்கொண்டால் இயற்கை என்னிடம் கொஞ்சம் இணக்கமாக இருக்குமோ ?!
இந்த ஒற்றை முடி ஒரு அற்புத தரிசனம். இனி நான் என்னவாக இருக்கவேண்டும் என்ற கேள்வியை எனக்குத் தருகிறது இது. விடையையும் என்னிடமே கோருகிறது. இனி என் ஆட்டம், பாட்டம் எல்லாம் நிறுத்திக் கொண்டு சற்று நிதானமாக வாழ்க்கையை அணுகவேண்டுமா ? அல்லது தீர்ந்துகொண்டிருக்கும் வாழ்வை இன்னும் ஆர்ப்பாட்டமாக ,துள்ளலுடன் கொண்டாட வேண்டுமா ?
நான் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். எனது ஆசைகள் கூடைக்குள் இட்டு மூடப்பட்ட ஆமைக் குஞ்சுகளாய் உள்ளே முண்டிக்கொண்டிருக்கின்றன . சில, நெரிசலில் செத்துப்போய்விட்டன. அதன் அழுகல் வாடை என்னை இம்சித்தபடியே இருக்கின்றது. சில குற்றுயிராய் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. சில வளர்சியற்றுப் போயின. சில தன் இயல்பை மீறி வளர்ந்து நிற்கின்றன.
என் தலையே பிளந்துபோகும்படி கொட்டும் அருவின் கீழ் சலனமின்றி நிற்கவேண்டும். மொத்தமாக கரைந்து காணாமல் போகவேண்டும். அடைமழை முன்னிரவொன்றில் சாலையோர டீக்கடையில் தேநீர் அருந்தியபடி புகைக்கவேண்டும். என் அத்துனை அடையாளங்களையும் தொலைத்துவிட்ட ஒரே ஒரு நாளில் இலக்கில்லாப் பயணம் வேண்டும். சத்தமாக சிரிக்கவேண்டும். சாலையற்ற வெளியில் வேண்டும் மட்டும் ஓடவேண்டும். ஊரே தேர் முன் ஆடும் ஆண்களை ரசித்திருந்த ஒரு திருவிழா நாளில் வீட்டுக்குள் அப்பாவின் துண்டை வைத்துக்கொண்டு இசைக்கு தக்கபடி ஆடி மகிழ்ந்த அந்த ஆட்டத்தை அவர்களோடு சேர்ந்து ஆடவேண்டும். இதையெல்லாம் என்று நான் நிகழ்த்திப் பார்ப்பேன்!?
இந்த ஒற்றை முடி என் மகளுக்கும் ஒரு சேதி வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் என் அம்மாவின் நரை முடிகள் என்னை அச்சம் கொள்ளச் செய்தது. என்னையும் அம்மாவையும் பிரிக்கவந்த பெருங்கோடு அது . அது எங்களை இருபுறமும் நகர்த்தியபடி போகிறது. கோட்டிற்கு இந்தப்பக்கம் அம்மாவைப் பற்றி இழுத்துக் காப்பாற்றிவிடவேண்டும். பின் இருவரும் அந்தக் கோடு அறிந்திடாத உலகிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளவேண்டும். அம்மாவின் மார் சூடு எவ்வளவு சுகம்!!
ஆனால் இன்று நான் அறிவேன் ஓடி ஒழிய முடியாதக் கோடு இது . என் மகள் என்னைப் பற்றி இழுக்கமுடியாது. எங்கள் இருவரிடையே இக்கோடு ஒற்றையாக விழுந்திருக்கிறது. இனி ஒன்று இரண்டாகி ,மூன்றாகிப் பெருகிப் பெருகி இறுதியில் கண் கூசும் பெருவெளிச்சமாய் , வெள்ளை வெளியாய் மாறும். அவ்வொளியில் நான் காணாமல் போவேன். கண் கூசி நீர் வழிய வழிய என் மகள் என்னைத் தேடுவாள். பின் கண்களைத் துடைத்துக் கொள்வாள் , சற்றுக்காலம் அங்கேயே நிற்பாள், பின் நகர்ந்து எதிர் திசையில் நடந்துசெல்வாள். கலையும் மேகம் காட்சிகளை மாற்றியபடியே இருக்கும். அலுப்பு தட்டாத அற்புத காட்சிகள் அவை.

                                                       *********************

Thursday, April 9, 2015



தாளாமல் தள்ளாடும் 
இவ்எளிய வீட்டினை 
பெரும் பாரமாய்
மௌனம் அழுத்திக்கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் வருவதாகச் சொல்லி கையசைத்துச் சென்றுவிட்ட அவள் ஒலிகளின் இளவரசி. வீணையின் தந்திகளை கவனமாக கவர்ந்து சென்றுவிட்ட சிறு மலரே, பேரலையே, மின்னிவரும் இடிமுழக்கமே இந்த அமைதி அச்சமூட்டுவதாய் இருக்கிறது. உன் ஒலி தந்த ஒளியில் மட்டுமே சுடரும் கருவறை தீபம் இது. உன் ஒற்றைச் சொல்லொலிக்கு துலாவுகிறது இருள் வழுக்கும் இவ்விருப்பு. பறவைகளுக்குச் சிறகசைப்பைக் கற்றுத்தருபவளே! பூனையின் பாதங்களை பயிற்றுவிப்பவளே!நிமிடங்களை விரட்டி ஓடும் சிறுமுயலே! விரைந்து வா. உன் ஒலிகளை அள்ளி வீசு. என் நெஞ்சு உலர்ந்து கொண்டிருக்கிறது.

                                         *************************



அவள் பெயர் அம்மு

இந்த நகர வாழ்க்கை விசித்திரமானது. தாமரை இலைத் தண்ணீர் போல யாருடனும் யாருக்கும் ஒட்டுதல் இல்லை. என் பக்கத்துக்கு வீட்டு மனிதர்கள் எனக்கு அறிமுகம் அற்றவர்கள். என் வீட்டு நிகழ்வுகள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. ஒரு வீட்டுக்குள் அலறும் சத்தம் கேட்டாலும் அவரவர் ஜன்னல் வழியாக கவலையுடன் பார்ப்பார்களேயன்றி என்ன ஆச்சு என்று வந்து கதவைத் தட்டமாட்டார்கள். ஆனால் எல்லோர்க்கும் நல்ல நண்பர்கள் உண்டு .ஆபத்தில் ஓடிவர ஆட்கள் உண்டு. ஆனால் அவர்கள் பக்கத்துக்கு, எதிர்வீட்டு ஆட்கள் அல்ல.

எங்கள் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீடு வாடகைக் குடியிருப்புகள் நிறைந்த அடுக்குமாடி. வருவோர் போவோர் அறிமுகமற்றவர்கள். எங்கள் வீட்டு யுடிலிட்டி ஏரியா அதாவது பாத்திரம் கழுவும், வாஷிங் மெஷின் இருக்கும் பின்கட்டு பகுதியிலிருந்து பார்த்தால் பக்கத்துக்கு வீட்டு பின்கட்டு தெரியும். அன்றொரு நாள் ஒரு நல்ல சிவந்த நிறம் கொண்ட வடிவான பெண்பிள்ளை ஒருத்தி அங்கு துணிகளை அலசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவளுக்கு 10, 11 வயது இருக்கும். நான் ஸ்ருதியிடம் வந்து சொன்னேன், பக்கத்து வீட்ல பார் உன்னவிட சின்ன பொண்ணு எப்படி வேல செய்யுது. செல்வா சொன்னார் அந்த பொண்ணு கையில குழந்தையோட வாசல்ல நிக்கறத பாத்தேன், அந்த வீட்ல வேலைசெய்யற பொண்ணு போல என்று. என்னால் நம்பவே முடியவில்லை அவளை அலங்கரித்தால் நிச்சயம் இளவரசி போல இருப்பாள். வேலைக்காரிக்கென்று ஒரு அடையாளத்தைப் பதிவு செய்து வைத்திருக்கும் மனம் எவ்வளவு மலினமானது ?!

மறுநாள் அவளை மீண்டும் பின்கட்டில் பார்த்தேன். புன்னகைத்து உன் பேர் என்ன என்றேன். அவள் மலையாளி. தமிழ் புரிந்தது அவளுக்கு. அம்மு என்று புன்னகைத்தாள். சஞ்சுவைப் பார்த்து யார் என்று கேட்டாள், பின் கையசைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அன்று மாலையே அவளைக் குழந்தையுடன் வாசலில் பார்க்கையில் புன்னகைத்துக் கையசைத்தேன். அவள் பதற்றமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் . அந்த ஒரே செய்கையில் அந்த வீட்டில் அவளது இருப்பு எப்படியானது என்று புரிந்துபோனது எனக்கு.

பிறகு எப்பொழுதும் பின்கட்டில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவேன். அதற்குமேல் அவளுடன் என்ன பேசுவதென்று புரியவில்லை. ஒவ்வொரு முறையும் சொல்லிவைத்ததுபோல் ஒரு சில கேள்விகளையே அவள் திரும்பத் திரும்பக் கேட்பாள். சாப்டாச்சா ? பிள்ளைங்க என்ன பண்றாங்க ? இவைகள் தான் பெரும்பாலும். நீ சாப்டியா என்று கேட்பதில் பெரும் அச்சம் இருந்தது எனக்கு. பசங்க படிக்கறாங்க, டிவி பாக்கறாங்க , விளையாடுறாங்க என்று எந்தபதிலைச் சொல்லவும் நான் தயங்கினேன். எந்த பதிலும் அவள் குழந்தைப் பருவத்தின் மீது ஏவும் வன்முறையாக ஆகிவிடுமோ என்று பயந்தேன். எப்பவும், உள்ள இருக்காங்க என்ற பதிலைத் தவிர வேறு சொன்னதில்லை நான். அந்த இரும்பு கிரில் வழியாக அவளுக்கு என்னால் கொடுக்கமுடிந்ததெல்லாம் வெறும் சாக்லேட்டுகள் தான். பெரிய வெளிநாட்டு சாக்லேட்டை முன்பக்கம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு அவள் தின்று முடிக்கும் வரை எனக்கு பதற்றமாக இருக்கும். அவள் துணி துவைக்க வருகையில் பின் கதவைப் பூட்டிவிடுவார்கள். அவள் துவைத்து முடித்துவிட்டு கதவைத் தட்டிவிட்டு காத்துக்கொண்டு நிற்பாள். கதவைப் பூட்டிவிட்டு உள்ளே என்னதான் செய்வார்கள் ? ஏதாவது
தின்றுகொண்டிருப்பார்களா ? இல்லை புணர்ந்துகொண்டிருப்பார்களா? அவள் கதவு திறக்கும்வரை கையில் பக்கெட்டோடு நின்றுகொண்டே இருப்பாள்.

அன்று அவள் குளித்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் குளியலறை இருக்கையில் அவளை பின்கட்டில் குளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் வழக்கம்போல அந்தபக்கம் பாத்திரங்களை எடுக்கச் சென்றேன். அவள் கீழே பாவாடை மட்டும் கட்டியிருந்தாள். மேல் சட்டை இல்லை. என்னைப் பார்த்ததும் சட்டென்று கைகளை நெஞ்சுக்கு குறுக்கே மறைத்தபடி அப்படியே குறுகி அமர்ந்துவிட்டாள். நான் நெருப்பை மிதித்தது போன்று துடித்துப் போனேன். அவளை நான் குழந்தையாகத் தான் எண்ணியிருந்தேன். இல்லையென்றால் ஒரு நொடி கூட நான் அங்கு நின்றிருக்கமாட்டேன். பெரும் குற்ற உணர்ச்சியோடு சாரி சொல்லி வீட்டுக்குள் வந்தேன். பின் ஒருபோதும் அவள் குளிக்கையில் நான் வேலை இருப்பினும் பின்கட்டுப்பக்கம் போவதில்லை. அந்தச் சின்னஞ்சிறுமியின் உலகம் அந்த பின்கட்டு மட்டுமே. அதில் ஒரு சிறு சஞ்சலத்தை உண்டாக்கவும் நமக்கு உரிமை இல்லை.


                                                            ******************

Wednesday, April 1, 2015

"உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால்
காலம் மொழியாகும் "
பெண்ணின் கேள்விகளுக்கான விடைகள் மட்டும் எப்போதும் காலத்தின் பொறுப்பில் விடப்படுகிறது. உண்மையில் காலம் பதில் சொல்லுமா?!! காலம் அவளுக்காக பேசுமா ? சினிமாவில் மட்டும் தான் காலம் எல்லாவற்றிற்குமான விடையை மூன்று மணி நேரத்திற்குள் சொல்லிவிடும்.
விடை தெரியாத கேள்விகளை, சொல்லப்படாத வார்த்தைகளைப் பெண், ஒரு தீச்சட்டியென கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். காலம் பேசுமென வலி பொருத்து காத்திருக்கிறாள். இறுதியில் தீச்சட்டியை தலையோடு கவிழ்த்துக் கொண்டு எரிந்து சாம்பலாகிறாள்.
காலம் பதில் சொல்லும் என காலத்தின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது. காலம் கொட்டாவி விடக்கூட வாய்த் திறக்காது என்பது நம் ஆவி பிரியும்போது தான் நமக்குத் தெரியவரும். ஆக நம் கேள்விகளுக்கான பதிலை நாமே தான் தேடிப் பெறவேண்டும்.

                                                         ******************