Friday, October 9, 2020

துயில் எழுப்புதல்


அறுவை சிகிச்சைக்கு பின்னான துயில் எழுப்புதலில்
அவர்கள் கன்னத்தைத் தட்டுகிறார்கள்
கைகளில் கிள்ளுகிறார்கள்
பெயர் சொல்லி உலுக்குகிறார்கள்

வலி மின்னி வெட்டுகிறது
பின்னிரவுக் கலவிப் பொழுதொன்றை
ஒத்ததாய் இருக்கிறது
அது

பிரிக்க முடியா இமைகளுக்குள்ளே
கருவிழி இறைஞ்சுகிறது
இன்னும் கொஞ்சம் உறங்கட்டுமா

நான் அசையாமல் கிடக்கிறேன்
அவர்கள் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
கிள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்

No comments:

Post a Comment