Friday, October 9, 2020

மௌனத்தின் ஒலி

 

மண்டியிட்டு அமர்ந்து
நிலம் நோக்கித் தலை பணிகிறேன்

மடை உடைந்த வெள்ளமென
ரத்தம் தலை நோக்கிப் பாய்கிறது

என் இரவுகளை
ஓலங்களால் உண்டவர்கள்
கூடாரம்
இந்த மண்டையோடு

இவர்கள் குரல்வளையை
என் உதிரத்தால் நிரப்ப வேண்டும்

மடை உடைந்த பெருவெள்ளம்

திணறும் கானகம்
குய்யோ முய்யோ என்று
எழுந்து பறக்கிறது

கதறலின் முகங்களில்
ரத்தத்தைப் பீய்ச்சியடித்துச் சாய்க்கிறேன்

மெல்ல மெல்ல அடங்குகிறது வனம்

எழுந்து அமர்கிறேன்
குப் குப் என்று ஒரு ரயில்
சத்தமின்றி
நழுவி வெளியேறுகிறது

மௌனத்தின் ஒலி கேட்க
ஆனந்தமாய் தான் இருக்கிறது

No comments:

Post a Comment