Wednesday, March 2, 2016

கடல்

காது மடலோரம் 
ஓயாது தணல் மூட்டும்
பெருமூச்சின் ஓசை
யாசித்து
வந்து சேரும் விழிகளில்
உப்புக்கடல்
ஒரு வனவிலங்கின் சாயல்
அதற்கு
அச்சமும் களிப்பும்
சுழன்று துள்ளும் இடம்
மோட்சத்தின் திறப்பு
முதல் அணுவைத் தேடி நனைக்கும்
சூட்சமத்தில்
நீராடல் என்பதன் முழு அர்த்தம்
நாசி நுழைந்து நரம்பில் ஏறி உதிரம் கலந்து
மெல்ல மெல்ல உப்பே உறுவாகி
மின்னுகையில்
விலாவில்
முளைக்கத்தொடங்குகிறது
சிறகு
***

ஈரம் ஊறும் நிலம்

உன் உதடுகள்
நான் நீந்தித் திளைக்கும்
சிறு நதியின் இரு கரைகள்
மோனம் குழையும் 
காலநிலை
அங்கு
தேன் குமிழிகளை
உண்டு பசியாறுவேன்
ஈரம் ஊறும்
அந்நிலம் அமர்ந்து
மூச்சுக்காற்றில்
கூந்தல் உலர்த்துவேன்
உதட்டு வெடிப்புகளில்
உடல் பொருத்தி
உறங்கிப்போவேன்
இந்நதிக்கரையில் என் வாசம்
கீழுதட்டில் என் கூடாரம்
மீசை வானில்
நட்சத்திரங்களை எண்ணுகின்ற
நன்னாளொன்றில்
உயிர் கிள்ளி
நதி கரைத்து
நதியாவேன்
****