என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
Tuesday, March 18, 2014
Thursday, March 13, 2014
காலங்களைக் கடந்து வருபவன்
பருவங்களை மலர்த்துபவன்
காலங்களைக் கடந்து வருகிறான்
வேர் அறியா நிலம்ஒன்றில்
வெடித்து நிற்கிறது
படகு
பாசி படர்ந்த அவன் பாதங்களில்
தலைப்பிரட்டையின் துள்ளலுடன்
முயங்கத்தொடங்குகிறேன்
அவன் புன்னகையின்
சாரலில்
அசைந்து நெகிழ்கிறது படகு
குமிழிகளென உருளும் கூழாங்கற்களில்
ஆணிவேரின் பச்சைவாசனை
நீர்ச்சுழிகளை ஸ்தம்பிக்கச்செய்யும்
அவன்
மேல் நோக்கிச் செலுத்துகிறான்
நதிகளை
உருகத்தொடங்கும்
பனிமலையின் உச்சியில்
செங்கரும்புக்கொடியினை
நாட்டிச்செல்பவன்
காலங்களைக் கடந்து வருகிறான்
*****
செ.சுஜாதா.
நன்றி :உயிர் எழுத்து இதழ்.
Tuesday, March 11, 2014
சூட்சுமத்தின் ஸ்பரிசம்
இன்றும்
அதே தனிமை
மேல்மாடிக்கண்ணாடி வழியே
இறங்கும்
வெயில்
இவ்வீட்டை இன்னும்
பெரிது படுத்திக் காட்டுகிறது
புத்தக அலமாரியில்
எட்டுக்கால்பூச்சி
அசைவற்று.
துருவப்பிரதேசத்தின் குளிர்
மயிர்க்கால்களை
துளையிடத்தொடங்குகிறது
புகுந்து கொள்கிறேன்
வழக்கமாக அணியும் கருப்பு கோட் தான்
கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது
அதன் நிறம்
***
செ.சுஜாதா.
நன்றி: சொல்வனம்.காம் [100 வது இதழ்]
Subscribe to:
Posts (Atom)