Thursday, February 7, 2013

வா.மணிகண்டன் அவர்களின் 'என்னைக் கடவுளாக்கியத் தவிட்டுக் குருவி' கவிதை நூல் வெளியீடு ஒருஇனிய அனுபவமாக அமைந்திருந்தது.





துணைக்கு யாரும் இன்றித் தனியாக நிகழ்ச்சி நடக்கும் இடம் தேடி கப்பன் பார்க்கில் அலைந்ததில் தொடங்கியது எனக்கான சுவாரஸ்யம்.. வந்திருந்தவர்கள் அனைவரிடமும் வருகைப் பதிவேடு போல் பெயர், தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி எழுதி வாங்கியது காரணம் வேறாக இருப்பினும் ஒருவருக்கொருவர் அறிமுகம் அற்று அசௌகர்யமாக அமர்ந்திருந்தவர்களைச் சற்று ரிலாக்ஸ் செய்ய அதுஉதவியது..

சம்பிரதாயமான அனைவரின் சுய அறிமுகம் முடிந்ததும் பா.வெங்கடேசன் அவர்கள் நூல் வெளியிட தூரன் குணா அவர்கள் பெற்றுக்கொண்டார். முதலில் பா.வெங்கடேசன் அவர்கள் பேசினார். மேடையில் நின்று பேசுபவர்களுக்கு இல்லாத ஒரு சௌகர்யம் புல் தரையில் வட்டமாக அமர்ந்து பேசுவதில் உண்டு. தனித்த உடல் மொழி ஏதும் அற்றுப் புற்களைக் கிள்ளியபடி மிக casual லாக அவர் பேசினார். இந்தக் கவிதைத் தொகுப்பில் 'மரணம்' பற்றிய கவிதைகள் அதிகம் இருப்பதாக, மரணம் சார்ந்த மனநிலை அதிகம் கையாளபட்டிருப்பதாக அவர் சொன்னார். மேலும் கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்கையில் sick ஆன, தோற்று அமரும் ஓர்மனநிலையை அடைந்ததாகக் கூறினார். அதே நேரம் இந்தக் கவிதைகள் அதன் உணர்வுகளைச் சரியாக வாசகனுக்குக் கடத்தியிருப்பதனால் உண்டான சந்தோசம் என்று இரு வேறு மனநிலையை ஒரே நேரத்தில் அடைந்ததாகவும்சொன்னார். நமக்குக் கிடைக்கும் சொற்ப அனுபவத்தை வைத்துக்கொண்டு கவிதைகளில் அதன் உணர்வுகளைப்  பிளந்து புனைவை அதில் இட்டு நிரப்பிக் கவிதை பல தளங்களைத் தொட்டு விரியும் ஓர்பேரனுபவமாக வாசகனை உணரச்செய்வது ஒரு வகை.. புனைவுகள் ஏதும் அற்று அனுபவத்தில் இருந்து உருவாகும் மொழி, அம்மொழியில் இருந்து நாம் பெரும் அனுபவம் என்பது ஒரு வகை.. மணிகண்டன் இரண்டாம் வகையைத் தெரிவு செய்துள்ளார்.. தன் கவிதைக்கு மிக நேர்மையாக நடந்துள்ளார் என்று வெங்கடேசன் கருத்துத் தெரிவித்தார். குறிப்பிட சில கவிதைகளை தேர்ந்தெடுத்து  அலசாமல் அந்தத்  தொகுப்பு பற்றிய ஒரு பொதுப் பார்வையாகத் தன் கருத்தைச்  சொன்னார்.

அடுத்து பேசிய தூரன் அவர்களும் இதே கருத்தை எடுத்துரைத்தார்.. அவர் தனக்குப் பிடித்த சில கவிதைகளையும் வாசித்து அதில் தான் உணர்ந்ததை விவரித்தார்.. ஒரு கவிதையானது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒருஅனுபவத்தைத் தரும்.. அதுஒருவழிப் பாதை அல்ல.. அது ஒரு விளக்கு மட்டுமே.. பாதை நாம் கண்டுகொள்ள வேண்டியது..ஆகவே தூரனின் அனுபவம் அவருக்கானதே..

சுட்டிக்காட்டப்பட்ட குறைகளுக்கும், பாராட்டுகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனையோடு மணிகண்டன் அமர்ந்திருந்தார்.. தொகுப்பு வெளியிடும் முன் முதலில் இதைக் கற்க வேண்டும் போல!!! மணிகண்டன் இவருடன் கொஞ்ச நேரம், அவருடன் கொஞ்சநேரம் என்று இடம் மாற்றி மாற்றி அமர்ந்துக்கொண்டிருந்தார்.. "கொல கொலயா முந்திரிகா" விளையாட்டு ஞாபகம் வந்தது எனக்கு..

ந.பெரியசாமி, ராம லக்ஷ்மி , ராம் ஆகியோருடன் உரையாடினேன்.. இனிமையானவர்கள்.. குறிப்பாகப் பெரியசாமி அவர்கள் வெகு நாள் பழகிய எங்கள் ஊர்க்காரர் போன்றதொரு உணர்வைத் தந்தார்.. மிகச் சந்தோசமாக இருந்தது..


 மிக ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்த பா.வெங்கடேசன் அவர்களிடம் அழைக்காமலேயே நுழைந்து டீ யை நீட்டிய டீ விற்கும் பையன், கொஞ்சமாக எழுந்த கோபத்தை அமிழ்த்திவிட்டு டீயை வாங்கி அருகில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்த வெங்கடேசன் மற்றும் முன் அறிமுகம் அற்ற பெண் அருகில் அமரத் தயங்கி ஒருவர் பின்னால் ஒருவராக அமர்ந்து வட்டத்தைத் தலைபிரட்டையின் வடிவத்திற்கு மாற்றிய நபர்கள் என்று கவிதை தாண்டி சுவாரஸ்யங்கள் ரசிப்பதற்கு ஏராளம் இருந்தது..

கூட்டத்திற்கு என் மகளை உடன் அழைத்துச் செல்லவில்லை.. பேச்சைக்  கவனிக்கவிடாமல் தொந்தரவுச் செய்வாள் என எண்ணினேன்..அவள் வேலையைக் கப்பன் பார்க் கொசுக்கள் பார்த்துக்கொண்டன.. "மனிதர்களுக்குத் தான் மனிதர்களை நெருங்குவதில் ஆயிரம் தயக்கம்.." கொசுக்கள் சாலச் சிறந்தவைகள் ...

மணிகண்டன் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, இனி இலக்கியக் கூட்டம் மாத மாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.. நான் கலந்துகொள்ளவில்லை என்றாலும் எங்கோ நால்வர் கூடி இலக்கியம் பேசுகிறார்கள் என்பதே எனக்கு மன மகிழ்வைத் தரும்.. அந்த வகையில் இந்த அறிவிப்பும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது..

மிக நல்லதொரு அனுபவம்..

No comments:

Post a Comment