Thursday, February 7, 2013

நீலநிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்

















கனிந்தப் பொழுதொன்றில் 
நம்இருவரிடம் 
அந்தப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது

மிருதுவான அதன் ரோமம்
கன்னம் உரச கிறங்கினேன் 
சோகம் கவிழும் அதன் குரல் 
கனவிலும் கேட்பதாய் சிலாகித்தாய் 
குறித்த நேரத்திற்கு உணவு என்பதில் 
அதுஎப்போதும் சமரசம் செய்துகொள்வதில்லை 

நீரோடையென நகர்ந்த நம் பொழுதுகளை 
ஒரு குடுவைக்குள் அடைத்துத் தனதாக்கியது
அது 

நீ நெஞ்சில் புரளும் தாடியுடன் அலைந்தாய்  
நான் என் பெயரையே மறந்துவிட்டிருந்தேன் 

நம் இரவை எரித்து ஒளி ஏற்றி 
பூனை உறங்கும்வரை விழித்திருந்தோம் 
தாளமுடியாச் சுமைக்கூடிய நாள் ஒன்றில் 
அதைக் காட்டில் விட்டுவிட நடக்கத்தொடங்கினோம்

மெல்லிய அதன் ரோமக்கதகதப்பில் 
என் உள்ளங்கையை அறிவதாய்க் கூறினாய் 
சோகம் கவிழும் அதன் குரல் 
உன் தாயை நினைவூட்டுவதாய்க் கூறினேன் 

மேகம் தூரலைத் தொடங்கியது..

பூனை நனைந்துவிடாமல் பொத்தியபடி 
வீடு நோக்கி விரையத்தொடங்கியிருந்தோம்  


நன்றி:கல்கி இதழ் [27/01/2013]

No comments:

Post a Comment