Monday, April 1, 2019

பவளம் சொட்டும் பிரிய கவிதை

வர்ணங்களை ப்ரசவிக்கமுடியா
என் கவிதைகள்
சாம்பல் பூத்தவை

அவை எப்போதும்
எனை இட்டுச்செல்ல
பாதையற்ற பாதையையே
தேர்ந்தெடுக்கின்றன

உதிரமும் நெருப்பும்
மறுக்கமுடியாத
வழித்துணையாகி
உடன் வருகையில்

வறளும் உதடுகளைக்
கண்ணீர் நனைக்கிறது

மண்ணில் சொட்டும் உதிரம்
அழகியதொரு ஓவியம்

அந்தரங்கத்தை மறைக்க முயலும்
கந்தலில் புழுதி மணம்

கொப்புளங்கள் முத்தமிடும் பாதை
காலடியில் நழுவுகையில்
முள் கிரீடம் ஒன்றை
அணிவித்து நிமிர்க்கிறது
எனது பிரிய கவிதை

இமை மயிரில் உதிரம்
பவளமென மின்ன
நானோ
அரசியாகி கர்ஜிக்கிறேன்

No comments:

Post a Comment