Wednesday, June 27, 2018

ஓநாய்க்குலச் சின்னம்

'ஓநாய்க்குலச் சின்னம்' நாவல் வாசித்து பலகாலம் ஆகிறது. ஏனோ அதைப்பற்றி எழுதாமல் விட்டிருந்தேன். இன்றைக்கு என்னவோ அந்த நாவல் மனதுக்குள் ஓடியபடியே இருக்கிறது. இதோ கொஞ்சம் போல சொல்லிவிடுகிறேன். சில நிகழ்வுகளை , கதைகளை பிறர் சொல்வதை விட நாமே வாசித்து உணர்ந்தால் தான் சுவையாக இருக்கும். இந்தக் கதை கூட அப்படித்தான். நிச்சயம் ஒவ்வொருவரும் வாசித்து ரசிக்கவேண்டிய நாவல்.

நமக்கு மான் பிடிக்கும். அதனை வேட்டையாடும் ஓநாயைப் பிடிக்காது. இந்தக்  கதை, ஓநாயைக் குலதெய்வமாக மதிக்கும் ஒரு இனத்தின் வாழ்வியலை நம் கண்முன்னே விரிக்கிறது. முதல் வரியில் இரவில் மலைகளினூடே அச்சத்துடன் பயணிக்கும் கதாநாயகனில் தொடங்கும் கதை ஒரு இடத்தில் கூட கொஞ்சமும் சோர்வின்றி இறுதிவரை செல்கிறது. மேய்ச்சல் நிலங்களை மட்டுமே நம்பி வாழும் நாடோடி மக்களின் அருமையான , சாகசங்கள்  நிறைந்த வாழ்வு எப்படி விவசாயத்தின் வருகையால் உருக்குலைந்து போகிறது என்பதை பேசுகிறது நாவல். இன்று விவசாயம் சிதைந்து தள்ளாடிக் கொண்டிருப்பதை செய்வதறியாது நான் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அவர்களும் சிதறும் தங்கள் வாழ்வியலை வலியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு வழியற்று மாற்றத்திற்குள் தங்களைப் பொருத்திக்கொண்டு வாழத்தொடங்குகிறார்கள்.

பொதுவாக நான் வாசித்தவரை நாவல்களில் காதலும் காமமும் கட்டாயம் இருக்கும். வாசகனை தொய்வடையாமல் வாசிக்க வைக்கவேண்டுமெனில் இவையெல்லாம் தேவை போல என்று எண்ணியதுண்டு. ஆனால் இந்தக் கதையில் காதலோ காமமோ இல்லவே இல்லை. சொல்லப்போனால் பெண்களே இல்லை. ஒரே ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெண் . அவ்வளவே. கதை முழுக்க வேறு களத்தில் இயங்குகிறது. உணவும் , பாதுகாப்பும் அது சார்ந்த ஆபத்துகளும் போராட்டங்களும் என்று மிக முக்கியமான பிரச்சனைகளைப்  பொறுப்புடன் பேசுகிறது. இதில் ஆச்சர்யம் ஒரு இடத்தில் கூட வாசகன் சலிப்புறவே மாட்டான் என்பது தான்.

ஓநாய்களின் வேட்டைத் தந்திரங்கள், பருவநிலைகளைக் கணக்கில் கொண்டு மக்களும் ஓநாய்களும் உணவை கைகொள்ள அமைத்துவைத்திருக்கும் திட்டங்கள், அழகிய , சலனமற்ற புல்வெளி தேசம், பட்டிகள், உணவுகள், ஆடுகள், நாய்கள், மான்கள் ,குதிரைகள்,மலைகள்,இரவுகள்,ஓநாய்க் குகைகள், உறைந்த ஏரிகள் ,மனிதனுக்கும் ஓநாய்களுக்கும், மான்களுக்கும் ஓநாய்களுக்குமான வேட்டைக் களம் என்று பேராச்சர்யங்களுக்குள் வாசகனை கைபிடித்து அழைத்துப்போகும் இந்த நாவல் அவனைப்  பின் ஒருபோதும் வெளியேற அனுமதிப்பதே இல்லை. மிருகங்கள் வெறும் மிருகங்களாக அன்றி அவற்றின் புத்திக் கூர்மையும் செயல்பாடுகளும் விழி விரிய வைக்கும் ஆச்சர்யங்கள்..

கதாநாயகன் ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்ப்பான். நாய்களுடன் ஒன்றாக வளரும் அது ஒரு போதும் நாய்களைப் போல இயங்கவே இயங்காது. அதன் ஒவ்வொரு அணுவிலும் ஓநாயின் வேகமும், திமிரும், தந்திரமும், ஆக்ரோஷமும் நீக்கமற நிறைந்திருக்கும். கடைசி வரை நாய்களின் குணத்திற்குள் நுழைய மறுத்து ஒரு தன்னிகரற்ற , ஆளுமையான ஒநாயாகவே மரித்துப் போகும். மனிதனை விட ஓநாய் எவ்வளவு மேலானது !!

வாசிப்பை நேசிக்கும் அனைவரும் கட்டாயம் வாசித்தே ஆகவேண்டிய நாவல் இது. இதன் மூலம் ஒரு அருமையான அனுபவத்தை வாசகன் பெறுவான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment