Saturday, June 23, 2018

பெண் எனும் உடல்

கல்லூரியில் படிக்கும் போது ரமணிசந்திரன் நாவல் ஒன்றை மொத்த ஹாஸ்டல் பெண்களும் கிறுக்கு பிடித்து வாசித்தோம்.. தெரியாமல் மேலே மோதிவிட்ட நாயகனை (?!!) நாயகி திட்டி விடுகிறாள். அவமானம் அடைந்த நாயகன் பழி வாங்க, அவளைக் கடத்திக் கொண்டு சென்று கற்பழித்து விடுகிறான். கடத்தப்பட்டிருந்தாலும் அவனுடைய வீட்டில் சகல வசதிகளும் செய்து தரப்படுகிறது. அவள் கர்ப்பம் தரிக்கிறாள். இந்த அடைபட்ட வீட்டில் இருந்து தப்பிக்க முடியாதென்றாலும் கொஞ்ச நாளாவது தன் பெற்றோரைப் பார்க்க விரும்பும் அவளை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கிறான்.

அவள் அத்தனை நம்பிக்கையோடும் , ஆசையோடும் ஊருக்கு வருகிறாள். காணாமல் போனவள் நிறை வயிரோடு திரும்பி வந்திருப்பதை பார்க்கும் பெற்றோரும், ஊரும் அவளை அவமானப் படுத்துகிறார்கள். அப்போது நாயகன் வந்து அவளை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்கிறான்.
இந்தக் கதையை நான் உட்பட அனைவரும் உருகி உருகி வாசிக்க காரணம் அவன் அவள் உடலை ரசனையோடு கையாண்ட விதம்..

பெண்ணின் அனுமதியின்றி அவள் உடல் ஆக்கிரமிக்கப்படுவதை கொஞ்சமும் சொரணையற்று பெண்கள் நாங்களே ரசித்து வாசித்திருக்கிறோம்..

இன்று அம்மா வீட்டில் மற்றுமொரு ரமணிசந்திரன் கதை வாசிக்கக் கிடைத்தது. கிட்டத்தட்ட அதே கதை. கற்பழித்தவன் திருந்தி, கைக் குழந்தையோடு இருப்பவளை, வாழ அழைக்கிறான். வர மறுப்பவளை அள்ளி எடுத்து காருக்குள் வைக்கிறான். சிரித்துக் கொண்டே நம்ம பையனுக்கு தங்கச்சி வேணும் என்கிறான்.. அதைப் படிக்கையில் கண்ணீர் வந்துவிட்டது எனக்கு..

ஒரே காட்சி கிளர்ச்சிக்கும், கண்ணீருக்கும் இடையே 20 வருடங்கள் கடந்து விட்டிருக்கிறது.. எந்த வயதில் இந்த மாற்றத்தை நான் அடைந்தேன் என்பது தெரியாது. நான் சொல்லவருவது பெண் தன் உடல் பற்றிய புரிதல் அற்றவளாகவே வளர்கிறாள். தன் உடல் தன் உரிமை என்பதை உணராமலே வாழ்ந்து மடிகிறாள்.

ரேப் ரேப் எனப் பதறும் நாம், நமது வீட்டில் பெண்களின் உடலை எப்படிக் கையாளுகிறோம் என்பதையும் இந்த சமயத்தில் ஒரு முறை நினைத்துப் பார்த்துக்கொள்வோம்..

No comments:

Post a Comment