Sunday, June 24, 2018

இன்று காலையிலேயே படு டென்ஷன். காலை நேரம் எல்லாமே  இப்படித் தான் என்றபோதும் நேற்று மாலை வள்ளி வேலைக்கு வராததால் இன்று காலையில் பல வேலைகள் சேர்ந்துபோய் செம கடுப்பில் இருந்தேன் நான். வள்ளி எங்கள் வீட்டில் பல வருடங்களாக வேலைபார்க்கும் பெண். வயதில் என்னைவிட மூத்தவர். வீட்டுக்குள் வந்ததிலிருந்து போகும் வரை ஒரே அரட்டை தான். கலகலப்பானவர். இவரைப்பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன்.

இன்று வீட்டுக்குள் நுழையும்போதே ஏம்மா நேத்து வரல என்றேன். ஏதோ மாவரைக்கபோனேன் என்று ஒரு டம்மியான காரணம்  சொன்னது. வர மூட் இல்ல,அவ்ளோ தான் மேட்டர். எனக்கு வள்ளியைத் தெரியும்.

இப்போது அவரிடம் காட்டமுடியாத கோபமும் டென்ஷனும் ஒன்றாக சேர்ந்துகொண்டது. நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ரெண்டு பேருமே ரெடியாகவில்லை .ஸ்ருதியும் ,சஞ்சுவும் மாறி மாறி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினாலும் பதிலுக்கு திட்டு தான் விழும் என்ற நிலை. வீடே ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் என்று நம்ம SPB வேறு குழைந்துகொண்டிருக்கிறார். ம் ஹ்ம்.அவராலும் சாந்தப்படுத்த முடியவில்லை.

எதேட்சையாக வள்ளியைப் பார்க்கிறேன், சத்தமில்லாமல் அங்கயும் இங்கயும் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது எனக்கு. என்னா பேச்சு பேசும்.!! இப்போ..பேயடிச்ச மாதிரி இருக்குதே !!  நிதானித்து என்னை கவனித்தேன். கோபத்தில் எனது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. யப்பா எவ்ளோ கோபம்.!!இந்தமுறை அம்மா வந்திருந்தபோது சொன்னார், ஸ்ருதி நீ கவலைப் படாத, உங்கம்மாவுக்கு கோபம் வந்தா உங்க தாத்தா மாதிரி தான் சுருக்கு சுருக்குனு பேசிடும் என்று. ஆமாம் நான் அப்பா மாதிரி தான் இவ்ளோ பெரிய உதட வச்சுக்கிட்டு இவ்ளோ கூட பேசலைனா எப்படி? என்று கிண்டலாகச்  சொல்லி சமாளித்தேன். அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. அப்பாவின் உதடுகள் அச்சாக எனக்கு.

நியாயமான கோபம் யாரிடமும் வரும். ஆனால் அர்த்தமற்ற , வெட்டிக் கோபத்தை  நம் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே நாம் காட்டமுடியும். இதைச் சொன்னவுடன் எனக்கு ரேவதி ஞாபகத்தில் வருகிறாள். என் கல்லூரித் தோழி. பக்கத்துக்கு பக்கத்துக்கு ஊர். ஒரே வகுப்பு, ஒரே விடுதி அறை. எனக்கு நேர் எதிர் குணம் கொண்டவள். அத்தனை அமைதி, பொறுமை. அவளிடம் தான் அத்தனை கோபத்தையும் காட்டுவேன். முகத்திலேயே போய் இடித்துவிடுவது போல கோபமாக கத்துவேன். அப்படியே சுவரோடு குறுகி உட்கார்ந்துவிடுவாள். நான் காச் மூச் என்று கத்தி அடங்கியதும் மெதுவாக அருகில் வந்து ஏண்டி நீ இப்படி செஞ்ச ,அதுக்கு தான் நான் இப்படி சொன்னேன் என்று பொறுமையாக விளக்குவாள். கோபமெல்லாம் வடிந்து மன்னிப்புக் கேட்பேன்.

அவள் என்னை விட நன்றாகப் படிப்பாள். ஒரு முறை செமெஸ்டருக்கு முதல் நாள் , அக்கவுண்ட்ஸ் பாடத்தில் ஒரு கணக்கு புரியவில்லை, அவள் சொல்லித் தருவதாக சொல்லி இருந்தாள். அதற்குள் இப்படித்தான் எதோ சண்டை போட்டுக்கொண்டு போய் விடுதியில் வேறு அறையில் மற்ற பிள்ளைகளுடன் படிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். பெயில் ஆனாலும் சரி அவகிட்ட கேட்கக்கூடாது என்று பிடிவாதம். பின் அவளாக என்னைத் தேடிக் கொண்டு வந்தாள், இங்க என்னா பிள்ள பண்ற ,ரூம்க்கு வா என்று அழைத்துக் கொண்டு போய் சொல்லிக் கொடுத்தாள். இப்போது நினைத்தாலும் கண்ணில் நீர் திரையிட்டுவிடுகிறது. எத்தனை நேசம் இருந்தால் இவ்வளவு விட்டுக்கொடுக்க முடியும் ?!

உண்மையில் நேசம் கொண்ட மனங்களைக்  கோபத்தால் கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்க முடியாது. அவைகளால்  மேலோட்டமான வெற்று அலைகளை மட்டும்தான் உண்டாக்க முடியுமே அன்றி அடி ஆழத்தில் அடர்ந்திருக்கும் அன்பெனும் குளுமையை தீண்டிவிடவே முடியாது. ஆக, இந்தக் கோபம் என்ன மாதிரி பின் விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற எச்சரிக்கை உணர்வும் , கட்டுப்பாடும் அற்று ஒருவரிடம் உடைந்து வெளிப்பட முடிந்தால் அதுவன்றி வேறு வரம் நமக்கில்லை. காரண காரியம் அற்ற நேசமும், கட்டுக்குள் அடங்காத கோபமும் கொள்வோம். வாழ்க செல்லக் கோபங்கள் :)

No comments:

Post a Comment