Wednesday, June 26, 2013

எந்தச் சிலுவையில் அறைவது





நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லை தான்

ஆயினும்
நாம் அதைக் கடக்கவோ உடைக்கவோ
முயன்றதே இல்லை

அச்சுவர் தாண்டித் தாழப்பறக்கும்
என் மனப்பறவை மிகச்சரியாய்
உன் தோள் அமர்ந்து கூவுகிறது

உன் நெஞ்சுக்குழியில் சுடரும்
தீபத்தின் வெம்மையை என் காதுமடல்கள்
ஒரு நாளும் தவறவிட்டதே இல்லை

துவண்டு விழும் நம் கண்களின்
முதல் துளிக் கண்ணீர்
என்றுமே தரை தொட்டதில்லை

என் திசையெங்கும் நீ
வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும் நான்
முள் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்

நெருங்கி நிற்கும் அவ்விருகண்கள்
இடையில் கிடக்கும் நாசி பற்றி
கவலையுறுவதே இல்லை

****
நன்றி:புதுவிசை இதழ்-38

No comments:

Post a Comment