Showing posts with label புதுவிசை இதழ்.. Show all posts
Showing posts with label புதுவிசை இதழ்.. Show all posts

Wednesday, June 26, 2013

எந்தச் சிலுவையில் அறைவது





நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லை தான்

ஆயினும்
நாம் அதைக் கடக்கவோ உடைக்கவோ
முயன்றதே இல்லை

அச்சுவர் தாண்டித் தாழப்பறக்கும்
என் மனப்பறவை மிகச்சரியாய்
உன் தோள் அமர்ந்து கூவுகிறது

உன் நெஞ்சுக்குழியில் சுடரும்
தீபத்தின் வெம்மையை என் காதுமடல்கள்
ஒரு நாளும் தவறவிட்டதே இல்லை

துவண்டு விழும் நம் கண்களின்
முதல் துளிக் கண்ணீர்
என்றுமே தரை தொட்டதில்லை

என் திசையெங்கும் நீ
வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும் நான்
முள் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்

நெருங்கி நிற்கும் அவ்விருகண்கள்
இடையில் கிடக்கும் நாசி பற்றி
கவலையுறுவதே இல்லை

****
நன்றி:புதுவிசை இதழ்-38

Saturday, June 22, 2013

ஆலிலைக் கண்ணன் போல நீயெனக்கு





நம் ஆதிக்கனவின் அரூபமாய்
வான் முட்டி விம்மும் கோபுரக்கலசம்

நந்தவனத்தில் குழைந்தோடும்
அந்த ஜோடி அணில்களின் பின்னே
ஓடித்தவிக்கும்
எனது விழிகள்
செவ்வரி அணில்கள்

அனிச்சையாய் மலர் பறிக்கும்
வெளிறிய முல்லை விரல்கள்
நிரப்பப்படாத என்பூக்கூடையை
நிரப்ப முயன்று தோற்கிறது

கூடைக்குள் புரண்டுச் சிரிக்கும்
அச்செந்நிற அரளி மலர்கள்
நம் கருவறைக் காலமிச்சங்களை
கண்சிமிட்டிக் கதைக்கின்றன

ஈரம் படர்ந்தப் பிரகாரம்
தன்
பனித்த கரங்களால்
காத்துக் காய்ப்பேறிய
என் பாதங்களை ஆசுவாசம் செய்தபடி
உடன் வருகிறது

என் ஆலிலைக் கண்ணனின்
குழலோசைத் தீண்டி
சுடர் விடக்காத்திருக்கும்
திரி தாங்கி ஓர்கல்விளக்கு.

*******
நன்றி: புதுவிசை இதழ்-38.