Wednesday, March 31, 2021

பைத்தியக்காரி

 நளினத்தைக் கைவிட்டு

வெடித்துச் சிரித்து மகிழ்பவள்


கெட்டவார்த்தைகளை இனிப்பு போல 

மென்று சுவைப்பவள்


விலகும் மாராப்பில்

அக்கறையற்று  இருப்பவள்


குறுகுறுக்கும் கண்களுக்கு

அழுக்கேறிய யோனியைத் திறந்து காட்டி

அலறவிடுபவள்


அச்சத்தைத் துடைத்துவிட்ட

பீளை வடியும் கண் கொண்டவள்


இரைச்சல்களுக்கு நடுவே

தெருநாயை அணைத்தபடி

உறங்கிப் போகிறவள்


மரத்திலாடும் இலைகளை கண்கொட்டாமல் ரசித்துக்கிடப்பவள்


இரவின் வீதியில் அரசியென

நகர்வலம் வரும் 

அவள் மட்டுமே


கட்டுகளை உடைத்தெறிந்து

நெஞ்சு நிமிர்த்தி

வெளியேற முடிந்தவள்

No comments:

Post a Comment