Saturday, April 9, 2016

ஸ்ருதி இன்று கேட்டாள், நினைவைப் பின்னோக்கி செலுத்தி முதல் நினைவாக எது ஞாபகத்தில் இருக்கிறது என்று. NAT GEO சானலில் மைண்ட் கேம்ஸ் நிகழ்ச்சியில் நினைவு பற்றி பேசப்பட்டதின் எதிரொலி.

யோசிக்கதொடங்கினேன். 5 ஆம் வகுப்பில் படிக்கிறப்போ என்று ஆரம்பிக்கும்போதே இன்னும் பின்னால் போய் யோசிங்கம்மா என்றாள்.ஓகே இன்னும் பின்னால். ம்ம் நான் முதன் முதலில் LKG சென்ற நாள். இப்பொழுது போல தெருவுக்கு தெரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இல்லாத காலம். சுற்று வட்டாரத்திற்கே முதல் ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கும்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. எங்கள் ஊரிலிருந்து இரண்டு ஊர் தாண்டி தம்மம்பட்டியில் பள்ளி. பள்ளி வாகனமெல்லாம் இல்லை. பொது போக்குவரத்து தான். அண்ணனும் அக்காவும் அங்கு படிக்க, அடுத்தவருடத்தில் என்னையும் கொண்டு சேர்த்த அந்த நாள். வகுப்பில் நான் ஒரேடியாக அழவும் என்னை என் அண்ணன் வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். அழுதுகொண்டே அண்ணன் அருகில் உட்கார்ந்து கொண்டதும், வரிசையாக பெஞ்சுக்கு கீழே தெரிந்த சிகப்பு சாக்ஸ்ம், கருப்பு ஷூஉம் அணிந்த கால்களும் நினைவில் வருகிறது. சிஸ்டர் ஒருவர் ரைம்ஸ் சொல்லித்தந்ததும், அங்கு பெட்டிக்கடை தாத்தாவிடம் தினமும் சிக்லெட் வாங்கி தின்றதும் என்று கொசுறாக கொஞ்சம் நினைவுகள். எவ்வளவு யோசித்தும் அதற்கும் பின்னோக்கிப் போக முடியவில்லை.

நம் மூளையானது நம் உணர்வுகளுடன் தொடர்புடைய விசயங்களை மட்டுமே நினைவில் இருத்தியிருக்கும் என்றும் அன்றாட நிகழ்வுகள் நினைவில் நிற்காமல் போவதும் அதனால் தான் என்றும் அந்த டிவி நிகழ்ச்சியில் சொன்னார்கள்.

நம் நினைவுகளில் நில்லாமல் நாம் கடந்துவிட்ட நாட்கள் அப்படி எத்தனை எத்தனை!! நம் குழந்தைப்பருவம் முதல் நேற்று நடந்தது வரை யோசித்துப் பார்த்தோமானால், குழந்தைப்பருவத்து நினைவுகள் அதிகமாகவும், வளர வளர நினைவில் நிற்கும் விஷயங்கள் குறைந்து போயிருப்பதையும் உணரமுடியும். கல்லூரி நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை ஒரு நிரந்தரமான பாதையில் பொருத்தப்பட்டு வேகமெடுத்து விடுகிறது. ஒரே மாதிரியான தாள கதியில் உருளும் வாகன ஒலி காதுகளுக்குப் பழகி பின் அதன் இருப்பே கவனமற்றுப் போகிறது.

எல்லா நினைவுகளையும் நிகழ்வுகளையும் புகைப்படத்தில் அடைத்து வைத்து விட்டு, வேண்டிய நேரத்தில் புரட்டிப் பார்த்துவிடும் சவுகர்யம் வாய்த்துவிட்ட நாம், நினைவுகளை அதன் குணமும் மணமும் மாறாமல் இறுதிவரை மூளைக்குள் பொத்திவைத்து எடுத்துவந்து நம் அடுத்த தலைமுறைக்கு காட்சி பிசகாமல் சொல்லும் சுவாரஸ்யத்தை இழந்துவருகிறோம்.என் அம்மா வாய்வழி நான் கேட்ட நிகழ்வுகளைப் போல நான் என் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு சொல்ல எவ்வளவு விஷயம் இருக்கும்? அது எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று கேள்வி எழுகிறது.

*****

No comments:

Post a Comment