Wednesday, May 1, 2013

சுதந்திரத்தின் முடிச்சு



பொய் குற்றம் சாட்டப்பட்டு
பின்
மீண்டு வருபவன்
தன் உலகத்தின் சாவியை
அவர்களிடம் பறிகொடுத்துவிட்டே நகர்கிறான்
யாருமற்ற தெருக்களில் நடக்கையில்
பதுங்கிச்செல்வதான உடல் மொழி
அவன் விரும்பாமலேயே வந்து சேர்கிறது
காணாமல் போகும் “ஒன்று”
அதன் வாசனையை
அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது
தெளிந்த தனது கைகளை
மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்
அவன் வீட்டிற்குக் கதவுகளோ ஜன்னல்களோ
இனி தேவை இல்லை - அது மேலும்
அவனைப் பலவீனப்படுத்தக்கூடும்
அவனது சுதந்திரத்தின் முடிச்சு
மேலும் இறுகியபடியே இருக்கிறது
ஒரு குற்றவாளி
ஒரு போதும்
இத்தகைய பிரச்சனைகளைச் சந்திப்பதே இல்லை.
-நன்றி:சொல்வனம்.

No comments:

Post a Comment