Thursday, June 19, 2014

மருதாணிக் காடுகளின் உன்மத்தம்




ஆதிக்கனவுகளை 
திருத்தி எழுதிக்கொண்ட 
முனை மழுங்கிய பேனாக்கள் 
மைத்துடைக்கப்பணிக்கின்றன 
முந்தானைகளை 

கட்டிவைத்துப்புணரத்துடிக்கும் 
சாத்திரங்களை 
நான்காய் மடித்து 
தூமைத்துணிகளாக்கிக்கொண்ட நாளில் 
வலிகள் அற்றவர்களானோம் 

நாங்கள் 
துடுப்புகள் அற்று படகு செலுத்தும் 
கலை அறிந்தவர்கள் 

மேலும் 
உங்கள் செங்கோல் ஆட்சியின் 
கீழ் 
வராத குடிகள் நாங்கள் 


வவ்வால்களின் இரைச்சல்கள் அற்ற 
நீண்டு மிகுந்த  இரவுகளும் 
முதல் தாயின் மார் பற்றி  
வளரும் பகல்களும் 
சட்டகத்துக்குள் பொருந்தாத
வட்டங்களை 
வானவில்லின் வர்ணங்களில் 
வரைகின்றன 

சர்ப்பங்கள் நுழைய முடியா 
மருதாணிக்காட்டுக்குள் 
தோகை இல்லா மயிலினங்கள் 
மூக்குரசி 
அகவும் பொழுதுகளில் 

முகில்கள் மோதி நிறையும்  
பொய்கைகள் 
உன்மத்த வாசனை கொள்ளும் 

சன்னதம் கொண்டு  
மலை முகட்டு பட்சிகள் 
சிலிர்த்துச்சீறி 
வான் ஏகும் 

நன்றி : வலசை{ இதழ் 4}

No comments:

Post a Comment