Monday, April 14, 2014

சயனித்திருக்கும் எண்கள்




அகர வரிசையில் 
அடுக்கப்பட்ட எண்களில் 
தலை உயர்த்தி தனித்து நிற்கின்றன 
ஒரு முறை கூட அழைக்கப்படாத 
அவ்எண்கள் 

ஒரு முறை கூட 
தீ விபத்து நிகழ்ந்திராத 
புராதன நூலகத்தின் 
செந்நிற தீயணைப்பான்கள் அவை 

ஒரு விரல் தொடுகையில் 
உயிர் பெற்று எழுந்து வர 
மாயப்புன்னகை ஒன்றை 
நெளியவிட்டபடி 
சயனித்து இருப்பவை.. 

இவை வெறும் எண்கள்தானா ?

ஒரு நட்பை 
ஒரு காதலை 
ஒரு துரோகத்தை 
ஒரு ஆச்சர்யத்தை 
ஒரு நம்பிக்கையை 
ஒரு புறக்கணிப்பை 
ஒரு ஞானத்தை 
தரக்காத்திருப்பவை 

திறக்கப்படாத பரிசுப்பெட்டிகள் 
ஆர்வமும் அவஸ்தையும் 
நிறைந்தவை 

ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் 
பழுத்தக் கிழவியின் 
வெற்றிலை உரலின் கனத்தை 
விரல்களில் ஏற்றியிருக்க 

தொடும் தூரத்தில் 
மிளிர்ந்தபடி இருக்கும் 
அழைக்கப்படாத 
அவ்எண்கள் 


****
செ.சுஜாதா.
நன்றி : உயிர் எழுத்து.




2 comments:

  1. Wow azhakana kavithai athuvum intha varikal enna kavarnthathu

    ஒரு விரல் தொடுகையில்
    உயிர் பெற்று எழுந்து வர
    மாயப்புன்னகை ஒன்றை
    நெளியவிட்டபடி
    சயனித்து இருப்பவை..

    ReplyDelete